அண்ணாமலை பேச்சு..அது எங்கள் உட்கட்சி விவகாரம்.. புகை ஊத வேண்டாம்.. நாராயணன் திருப்பதி காட்டம்
அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை பேசியதாக வரும் செய்தி தவறானது என பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
சென்னை: பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுவது உட்கட்சி விவகாரம் அதை ஊடகங்கள் பெரிதாக்கி கதை திரைக்கதை வசனம் எழுதி புகையை ஊத வேண்டாம் என்று பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். நான்கு சுவருக்குள் பேசியதை இட்டுக்கட்டி பரப்புவதா என்று கேட்ட நாராயணன் திருப்பதி, இது முற்றிலும் எங்கள் உட்கட்சி விவகாரம் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணித் தலைவர்களின் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு, தமிழ்நாட்டில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும் என்று கூறியதாக செய்திகள் வெளியானது.
கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன். அதிமுகவுடன் கூட்டணி என்று முடிவு எடுத்தால் எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று பேசியதாகவும் தகவல் வெளியானது. கர்நாடக சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதால் வருகிற மே மாதம் 10ஆம் தேதி வரை கட்சி பணிகளில் பிஸியாக இருப்பேன் என்றும் அண்ணாமலை கூறவே, கரு. நாகராஜன், அமர்பிரசாத் ரெட்டி ஆகியோர் பரபரப்புடன் எழுந்து நீங்கள் இப்படி பேசக்கூடாது என்று தெரிவித்தனர்.

நாராயணன் திருப்பதி
மேடையில் இருந்த பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி எழுந்து, உங்களுடைய பேச்சு தெளிவாக இல்லை. அதனால் விளக்கமாக கூறுங்கள் என்று கேட்டதாகவும் அதற்கு மதுரையை சேர்ந்த ஷா என்ற கட்சி நிர்வாகி நாராயணன் திருப்பதி கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது பலரும் அண்ணாமலையின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இப்போது பேச வேண்டுமா?
வானதி சீனிவாசன் எம்எல்ஏ எழுந்து கட்சியின் மைய குழுவில் பேசவேண்டிய கருத்தை ஏன் இப்போது பேசுகிறீர்கள்? என்று கேட்டார். இதனால் பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நேற்றைய பாஜக நிர்வாகிகள் கூட்டம் பரபரப்பாகவே நடந்து முடிந்துள்ளது.

கதை திரைக்கதை வசனம்
இந்த நிலையில் இதற்கு பாஜக தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை பேசினாரா என்று தனியார் செய்தி நிறுவனம் சார்பில் கேட்கப்பட்டது, அதற்கு, எங்கள் நிர்வாகிகள் குழு கூட்டத்தில் எத்தனையோ விசயங்களை பேசுவோம். நான்கு சுவருக்குள் பேசியதை வெளியில் எப்படி சொல்ல முடியும் என்று கேட்டார். நன்றாக கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கின்றனர் என்றார்.

இட்டுக்கட்டி பரப்புவதா?
நான்கு சுவருக்குள் பேசியதை இட்டுக்கட்டி பரப்புவதா என்று கேட்ட நாராயணன் திருப்பதி, இது முற்றிலும் எங்கள் உட்கட்சி விவகாரம், எங்கள் கட்சிக்குள் பேசாததை பேசியதாக எழுதியதற்கு வன்மையாக கண்டிக்கின்றோம் என்றார். கட்சியில் ஒரு சிலர் பேசுவதை பொதுவான கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications