அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை பாஜக எதிர்க்கவில்லை... ஆனால்.. அண்ணாமலை சொன்னது என்ன?
சென்னை : ஆன்லைன் ரம்மியால் 30 தற்கொலைகள் நடந்துள்ளன. எனவே, கருத்து கேட்கிறோம் என்று காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஆன்லைன் ரம்மியை தடை செய்யவேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு பாஜக ஆதரவு அளித்து வருகிறது என்றும் ஆகம விதிகளை மனதில் வைத்து செயல்படுத்த வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கு, மத்திய மின்சார சட்ட திருத்த மசோதாவை பற்றி பேச எந்த உரிமையும் கிடையாது என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

மீண்டும் பாஜகவில்
சென்னை தி.நகரில் உள்ள, தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில், நடிகர் ரஜினிகாந்த்தின் நண்பரும், இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவருமான அர்ஜுனமூர்த்தி, நேற்று பாஜவில் இணைந்தார். இவர் ஏற்கனவே பாஜகவில் இருந்தவர். அரசியலுக்கு வரவில்லை என ரஜினி அறிவித்துவிட்டதால், அர்ஜுன மூர்த்தி தனிக்கட்சி தொடங்கினார். தற்போது அவர் மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார். அவருக்கு அண்ணாமலை, உறுப்பினர் அட்டை வழங்கினார்.

அர்ஜுனமூர்த்தி
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, "அர்ஜுனமூர்த்தி ஏற்கனவே பாஜகவில் பல பொறுப்புகளை வகித்தவர். இடையில், அவர் நடிகர் ரஜினிகாந்த்துடன் இணைந்து, அரசியல் களம் காண சென்றுவிட்டு, தற்போது மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார். பாஜக சித்தாந்தம், கொள்கையை ஏற்று யார் வேண்டுமானாலும் இணையலாம்." எனத் தெரிவித்தார்.

ஆன்லைன் ரம்மி
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, மின் கட்டண உயர்வு குறித்து கருத்து கேட்பது என்பது கபட நாடகம். மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். ஆன்லைன் ரம்மியால் 30 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதை தடை செய்ய கருத்து கேட்கிறோம் என்று காலம் தாழ்த்தக் கூடாது. முதல்வர் ஸ்டாலின் உடனே ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும்.

ஆவின் சத்துமாவு
ஆவின் நிறுவனம், சத்துமாவு தயாரிக்க முன்வந்துள்ளது. இதற்கு தமிழக அரசுக்கு நன்றி. தனியார் நிறுவனத்தில் சத்துமாவு வாங்குவதற்கு பதில் ஆவினில் வாங்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கால், இலவசங்களை அள்ளித் தெளித்து, ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கி, இலவசங்களை வைத்து எப்படி ஆட்சியை பிடிக்கிறார்கள் என்ற விவாதம் நடக்கிறது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்
ஒரு குடிமகனுக்கு அரசு தன் கடமையாக செய்ய வேண்டியவை இலவசங்கள் இல்லை. வீடு இல்லாதவர்களுக்கு வீடு, காஸ் இணைப்பு இல்லாதவர்களுக்கு காஸ் சிலிண்டர் போன்றவை வழங்குவது அரசின் கடமை. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை பாஜக எதிர்க்கவில்லை. அதேநேரத்தில் ஆகம விதிகளை மனதில் வைத்து செயல்படுத்த வேண்டும் என்றுதான் கூறுகிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications