நயினார் நாகேந்திரனுக்கு ஸ்கெட்ச்.. டிடிவி தினகரனை சந்தித்த அண்ணாமலையின் திடீர் மூவ்.. பின்னணி என்ன?
சென்னை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி புறப்பட்டு சென்ற நிலையில், திடீரென அண்ணாமலை மற்றும் டிடிவி தினகரன் சந்திப்பு நடைபெற்று இருக்கிறது. இந்த சந்திப்புக்கு பின்னணியில் அண்ணாமலை தரப்பு பல்வேறு காரணங்களை கூறி வந்தாலும், நயினார் நாகேந்திரனை ஓரம்கட்ட முதல் அஸ்திரத்தை அண்ணாமலை பயன்படுத்தி இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், தமிழக பாஜகவில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகிறது. ஏனென்றால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணாமலை பேச்சைக் கேட்டு அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, தனியாக கூட்டணி அமைத்தது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிகள் கிடைக்கவில்லை.

இதன்பின் சட்டசபைத் தேர்தலுக்காக அதிமுக தரப்பில் தவெக உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனையறிந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, முந்திக் கொண்டு ஏப்ரல் மாதத்திலேயே அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ளதாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் தமிழக பாஜகவின் தலைவராக இருந்த அண்ணாமலையை நீக்கிவிட்டு, அந்த இடத்திற்கு நயினார் நாகேந்திரன் கொண்டு வரப்பட்டார்.
அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் இடையில் மோதல் இருந்து வந்த சூழலில், இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவார்களா என்ற கேள்வி எழுந்தது. அதற்கேற்ப நயினார் நாகேந்திரன் தலைவரான பின், அண்ணாமலை சில காலம் அமைதியாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அமமுக மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் விலகுவதாக அறிவித்தனர்.
அதுமட்டுமல்லாமல் இருவருமே நயினார் நாகேந்திரன் தங்களுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்ற ஒரே குற்றச்சாட்டை முன் வைத்தனர். இதன்பின் தேவையென்றால் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இருவரும் நேரில் சென்று சந்தித்து சமாதானம் செய்வேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் நயினார் நாகேந்திரன் டெல்லி புறப்பட்டார்.
அப்போது அண்ணாமலை திடீரென அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து சுமார் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இதன்பின் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்ததாக தெரிவித்தார். நயினார் நாகேந்திரன் நேரில் சென்று சமாதானம் செய்ய தயார் என்று அறிவித்திருந்த நிலையில், அண்ணாமலை நேரடியாக சென்று டிடிவி தினகரனை சந்தித்துள்ளார்.
அடுத்ததாக ஓபிஎஸ் உள்ளிட்டோரையும் சந்திப்பேன் என்று தெரிவித்திருக்கிறார். இதன் மூலமாக நயினார் நாகேந்திரனின் பணிகளை அண்ணாமலை தாமாக எடுத்துக் கொண்டதாக பார்க்கப்படுகிறது. அண்ணாமலை தலைவராக இருந்த போது, வேறு யாரையும் அவரின் பணிகளை செய்ய அனுமதி அளித்ததே இல்லை.
ஆனால் நயினார் நாகேந்திரன் தலைவராக இருக்கும் போது, அண்ணாமலை பணிகளில் தலையிட தொடங்கி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் டெல்லி மேலிடத்தில் நயினார் நாகேந்திரனை விடவும் தனக்கே கூட்டணி கட்சித் தலைவர்கள் மத்தியில் நல்ல மரியாதை இருக்கிறது என்பதை நிரூபிக்கவும், கூட்டணியை நயினாருக்கு கையாள தெரியவில்லை என்று நம்ப வைக்கவும் அண்ணாமலை செயல்படுவதாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் ஒருங்கிணைந்த அதிமுக இணைந்தால், அதற்கு முக்கிய காரணம் தாம்தான் என்பதை நிறுவவும் அண்ணாமலை முயற்சிப்பதாக சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. அண்ணாமலையின் இந்த செயல்பாடுகளுக்கு பின்னணியில் நயினார் நாகேந்திரனுக்கு சிக்கலை உருவாக்குவதும், தமிழக பாஜகவின் முகமாக தாம்தான் இருக்க வேண்டும் என்ற முனைப்பும் இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications