லண்டனில் வாங்கிய சொத்து.. ஆடிட்டர் கொலையில் கைது.. செல்வப்பெருந்தகை VS அண்ணாமலை
சென்னை: மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அண்ணாமலை மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடருவேன் என்று செல்வப்பெருந்தகை சவால் விட்டிருந்த நிலையில், அதற்குப் பதிலடி தரும் வகையில் அண்ணாமலை இப்போது செல்வப்பெருந்தகை மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளார்.
அண்ணாமலை Vs அதிமுக என்று இதுவரை இருந்து வந்த அரசியல் களம் அப்படியே அண்ணாமலை Vs செல்வப்பெருந்தகை என்று மாறி இருக்கிறது. ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான புகார்களைக் கூறி வருகின்றனர். இந்த மோதலால் தனிப்பட்ட பல உண்மைகள் வெளியே வர தொடங்கியுள்ளன. ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அண்ணாமலை பேசி இருந்தார். அதைத்தொடர்ந்து காங் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜகவில் நிறைய ரவுடிகள் உள்ளனர் என்று கூறியிருந்தார்.

அதற்குப் பதிலடி தரும் வகையில் பேசிய அண்ணாமலை, “செல்வப் பெருந்தகை முன்பு ரவுடி பட்டியலிலிருந்தவர். ஆகவே, அவருக்கு தெரிந்திருக்கலாம். ஏனென்றால் நான் ரவுடி பட்டியலிலிருந்தவன் இல்லை. ஆகவே, செல்லப் பெருந்தகையிடம் சொல்லிவிட்டுத்தான் ரவுடிகள் கொலை செய்தனரா? தமிழ்நாட்டில் உள்ள ரவுடிகளை எல்லாம் செல்வப்பெருந்தகை தான் கண்காணித்து வருகிறாரா? ஒருவேளை செல்வப்பெருந்தகை தமிழ்நாட்டில் கூடுதல் டிஜிபி ஆக பொறுப்பேற்று உள்ளாரா? என்று எனக்குத் தெரியவில்லை.
செல்வபெருந்தகை சொல்வதைப் போன்ற ஆட்களுக்கு பாஜகவில் இடமே இல்லை. எனவே எந்த விளக்கம் தேவை என்றாலும் அவரிடம் தான் கேட்கவேண்டும். ஏனெனில் அவர் ஒரு முன்னாள் ரவுடி என்ற வகையில் அவருக்கு ஒரு தொடர்பு இருக்கிறதா? என்பதை காவல்துறையினர் தான் விசாரிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இதற்கு மறுப்பு தரும் வகையில் செல்வப்பெருந்தகை, “அண்ணாமலை நான் ரவுடி பட்டியலிலிருந்தவன் என்பதை நிரூபிக்க வேண்டும். எந்தக் காவல்நிலையத்திலாவது எனது பெயர் ரவுடி பட்டியலிலிருந்ததா? அல்லது இருக்கிறதா? அப்படி இருந்தால் என்னை காவல்துறை விட்டுவிடுமா? எனவே இது ஒரு அவதூறு. அண்ணாமலை இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால், அவர் மீது என்னென்ன சட்டங்களின் படி வழக்குத் தொடர முடியுமோ அதை நான் தொடருவேன்.

முதல்வர் ஸ்டாலின் 32 பக்க உளவுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என்ன சொல்லி இருக்கிறார்கள் தெரியுமா? இந்த அறிகையில் உள்ள 261 குற்றவாளிகள் பாஜகவில்தான் உள்ளனர். இவர்கள் அத்தனை பேர் மீதும் 1977 வழக்குகள் போடப்பட்டுள்ளன. இவ்வளவு வழக்குகளைக் கொண்டவர்களுக்கு பாஜகவில் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொடுத்தவர் அண்ணாமலை. இவர் ஒரு ஐபிஎஸ் அதிகாரியா? இவர் கர்நாடகாவில் என்ன வேலை பார்த்திருப்பார்? கர்நாடகாவில் கல்புருக்கி, கவுரி லங்கேஷ் போன்ற எழுத்தாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில்தான் இவர் அதிகாரியாக இருந்துள்ளார்.
ஆகவே, அண்ணாமலை பற்றிய விவரங்களைக் கர்நாடக அரசிடம் இருந்து கேட்டுப் பெற இருக்கிறேன். அண்ணாமலை கர்நாடகாவில் என்ன செய்து கொண்டிருந்தார்? அவர் ஏன் திடீரென்று ராஜினாமா செய்தார்? அதைப் பற்றி ஆய்வு செய்யக் கோரிக்கை வைக்க இருக்கிறேன்.
20 ஆண்டுகள் முன்பாக ஆர்.எஸ்.எஸ் ஆட்களின் சிபாரிசு பேரில் என் மீது 4 வழக்குகளைப் போட்டார்கள். என் மீதான வழக்குகளை காவல்துறை சரியாக விசாரிக்காது எனவே சிபிசிஐடியை விசாரிக்கச் சொல்லுங்கள் என்று தைரியமாக முறையிட்டேன். என் வழக்குகாக வாதாடியவர் அன்றைக்கு வழக்கறிஞராக இருந்த சந்துரு. அதன் பின்னர் அவர் நீதிபதியாகிவிட்டார்.
அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் முறையிட்டு என் மீதான வழக்குகளை அழித்துவிடுமாறு கேட்டுக் கொண்டார். நான் ரத்து செய்யச் சொல்லவில்லை. மன்னிப்புக் கேட்கவில்லை. அரசே வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. இதுதான் என் பின்னணி. இவர்களைப் போல் மன்னிப்புக் கேட்ட பரம்பரையல்ல நாங்கள்" என்று பேசியுள்ளார்.
இந்தச் சர்ச்சை தொடர்பாக மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது. நீதிமன்றம் சென்றால், அங்கே எங்கள் தரப்பு விசயங்களை முன்வைப்போம். அதற்குத் தயார் என்று பேசிய அண்ணாமலை, காங். மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மீது எத்தனை வழக்குகள் உள்ளன? அவர் வாங்கி குவித்த சொத்துகள் என்ன என்பது பற்றிய பல உண்மைகளை இப்போது உடைத்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை, “இந்தப் பிரச்சினையை நான் ஆரம்பிக்கவில்லை. செல்வப்பெருந்தகை தான் இரண்டு நாட்கள் முன்னதாக பாஜகவில் ரவுடிகள் சேர்க்கப்படுகிறார்கள் என்று சொல்லி முதலில் சர்ச்சையைத் தொடங்கிவைத்தார்.
எனவே அவரது கடந்த கால வரலாற்றைச் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு எழுந்தது. காங்கிரஸ் கட்சி என்பது 1885இல் ஆரம்பிக்கப்பட்ட கட்சி. எங்கேயாவது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து வெளியே வந்த ஒருவர் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கிறாரா? என்று இந்தியா முழுவதும் தேடிப் பார்த்தால் யாருமே இருக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறார்.
ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு அனைவருக்கும் தெரியும். அந்த வழக்கில் கைது செய்ய காவல்துறை போனபோது தப்பிக்க முயன்று செல்வப்பெருந்தகை காலை உடைத்துக் கொண்டது எல்லோருக்கும் தெரியும். இன்றைக்குப் பசுத் தோல் போர்த்திய புலியாக நான் காந்தி வழியில் வந்தேன் என்கிறார்.
அவர் மீது வழக்குப் போட்டது ஜெயலலிதாதான். ஆனால், இந்த வழக்குக்கு ஆர்.எஸ்.எஸ் காரணம் என்று அவர் சொல்கிறார். இவர் மீது சிபிஐ வழக்கு உள்ளது. பண மோசடி வழக்கு உள்ளது. அவர் மீது 304 வழக்கு உள்ளது. இவர் சொல்கிறார் பாஜகவில் ரவுடிகள் சேர்கிறார்கள் என்று. ஆகவே, அவர் யார் என்பதை நாங்கள் சொல்கிறோம். அவர் என்னை நீதிமன்றத்திற்கு அழைக்கிறார். நானும் அவரை அழைக்கிறேன்.
அவர் லண்டனில் முதலீடு செய்துள்ள பணத்தைப் பற்றிப் பேசுவோம். ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவில் கடைநிலை ஊழியராக இருந்த செல்வப்பெருந்தகை லண்டனில் என்ன வாங்கி வைத்துள்ளார்? அவரது மனைவி பெயரில் என்ன சொத்துகள் உள்ளன? ஆடிட்டர் ஏன் கொலை செய்யப்பட்டார்? அந்த வழக்கில் கைமாறிய பணம் எவ்வளவு?” என அடுக்கடுக்கான ரகசியங்களை வெளியிட்டுப் பேசியுள்ளார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications