கன்ஃபார்ம் செய்த அண்ணாமலை “ரைட் ஹேண்ட்”.. தலைவர் சொல் மாறாது.. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி என ட்வீட்
அண்ணாமலையின் ரைட் ஹேண்ட் என்று சொல்லப்படும் பாஜக மாநில விளையாட்டு பிரிவு தலைவரான அமர்பிரசாத் ரெட்டி ட்விட்டரில் வெளியிட்ட பதிவு இன்று பூதாகரம் எடுத்துள்ளது.
சென்னை: 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அண்ணாமலையின் வலதுகரமான அமர் பிரசாத் ரெட்டி ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ்நாடு பாஜக ஐடி விங் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார் கடந்த சில நாட்களுக்கு முன் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அன்றில் இருந்து பாஜக - அதிமுக கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் பெரிதாகிக்கொண்டே செல்கிறது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது குற்றம்சாட்டி பாஜகவிலிருந்து நிர்மல் குமார் விலகியவுடன் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அவர் தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார். அதன் தொடர்ச்சியாக பாஜக ஐடி விங் மாநில செயலாளராக இருந்த திலிப் கண்ணனும் கட்சியிலிருந்து வெளியேறினார்.

கட்சி தாவல்
அண்ணாமலை மீது பல்வேறு பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தி கட்சியை விட்டு விலகிய திலிப் கண்ணன் உள்ளிட்ட பாஜகவினர் மறு நாளே நிர்மல் குமார் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். அவர்களை தொடர்ச்சி சென்னை மேற்கு மாவட்ட ஐடி விங் நிர்வாகிகளிலும் பாஜகவிலிருந்து விலகி நிர்மல் குமார் வழியில் செல்வதாக அறிவித்தனர்.

அண்ணாமலையின் “ரைட் ஹேண்ட்”
தமிழ்நாடு பாஜகவை எடப்பாடி பழனிசாமியின் இந்த செயல்தான் கோபமடைய செய்து உள்ளது. அண்ணாமலையின் ரைட் ஹேண்ட் என்று சொல்லப்படும் பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவரான அமர்பிரசாத் ரெட்டி ட்விட்டரில் அதிமுகவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து இன்று வரை இரு கட்சிகளுக்கு இடையிலான மோதல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

தமிழ்நாட்டின் வருங்காலம் பாஜகதான்
இதுகுறித்து அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "அதிமுக கூட்டணியில் இருக்கும்போது இப்படி செய்திருக்க கூடாது. பாஜகவில் இருந்து விலகுபவர்களை அதிமுக அரவணைக்க கூடாது. தமிழ்நாட்டின் வருங்காலம் பாஜகதான். அண்ணாமலை தலைமையில் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும்." என்று குறிப்பிட்டு இருந்தார்.

அந்த அரசியல் வேண்டாம்
மற்றொரு பதிவில் "கட்சிக்கே பிரச்னை என்றதும், 'காட்சி கொடுங்கள் ஐயா' என்று ஓடோடி வந்தவர்களெல்லாம் இன்று, அகில உலக தலைவர்களாக காட்டிக் கொள்ள விழைகின்றனர். உதவி செய்தவர்களை துச்சமாக மதிப்பதுதான் அவர்களுக்குத் தெரிந்த அரசியல் என்றால், அந்த அரசியல் எங்களுக்கு ஒரு நாளும் வேண்டாம்!" என்று தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர்கள் எதிர்ப்பு
அதை தொடர்ந்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில், தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டதாக கூறி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் அவரை கடுமையாக விமர்சித்தனர். அதிமுகவில் கேபி முனுசாமி, பாஜகவில் கரு நாகராஜன் உள்ளிட்ட தலைவர்கள் இதை நிறுத்த முயன்றாலும் அது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

உருவ படங்கள் எரிப்பு
இந்த நிலையில் தூத்துக்குடியில் கடந்த சில நாட்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமியின் உருவ படத்தை எரித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை கண்டித்து அதிமுகவினர் அரியலூர் மாவட்டத்தில் அண்ணாமலையின் உருவ படத்தை எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் மோதல் பெரிதானது.
தொடர்ந்து இரு தரப்பினரும் மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில் இரு கட்சிகளையும் சமாதானப்படுத்தும் முயற்சிகளும் தொடர்ந்தன. இந்த நிலையில்தான் தமிழ்நாடு பாஜக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசிய பேச்சு பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

பாஜக ஆட்சி
வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என்று அறிவித்தார் அண்ணாமலை. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அமர் பிரசாத் ரெட்டி, "சூரியன் திசை மாறி உதித்தாலும் எங்கள் தலைவரின் சொல் மாறப்போவது இல்லை. 2026ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி நிச்சயம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications