"எல் முருகன் விவகாரம்".. மத்திய அமைச்சரை இப்படியா நடத்துவீங்க? டிஜிபிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை
சென்னை: '' மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்துக்கு சென்ற மத்திய இணை அமைச்சர் எல் முருகனை போலீசார் தடுக்க முயற்சித்ததுடன், அவரை மோசமாக கையாண்டனர். கோவிலுக்கு செல்ல அனுமதி பெற்றும் அவரை போலீசார் தடுத்து நிறுத்தி தங்களின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளனர் '' என்று தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பான கடிதம் எழுதியுள்ளார்.
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடு திருப்பரங்குன்றம். இது மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை முருகன் மலையா? சிக்கந்தர் மலையா? என்று சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கிடையே தான் நேற்று முன்தினம் மத்திய இணையமைச்சர் எல் முருகன் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் சுவாமி கோவிலுக்கும், மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கும் செல்ல முயன்றார்.

அப்போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு பாஜக தலைவர்கள் போலீசாரின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே தான் எல் முருகன் விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பரபரப்பான கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்திய அமைச்சர் எல் முருகன் கடந்த 17 ம் தேதி திருப்பரங்குன்றம் சென்றபோது போலீசார் அவரை மோசமாக கையாண்டனர். அதுபற்றி உங்களின் கவனத்துக்கு தமிழக பாஜக சார்பில் கொண்டு வருகிறேன். அவரை கோவிலுக்கு செல்ல விடாமல் தடுக்கவும் முயற்சி செய்தனர். திருப்பரங்குன்றம் கோவில் மற்றும் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் ஆகிய இரண்டிற்கும் வர மத்திய அமைச்சர் போலீசிடம் முன்கூட்டியே அனுமதி பெற்றிருந்தார். இருந்த போதும், கோவில் வாசலில் அவரை போலீசார் தடுத்து நிறுத்தியது வருத்தமாக உள்ளது.
அனுமதி பெற்றும் தன்னை கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுத்ததற்கு என்ன காரணம் என மத்திய அமைச்சர் முருகன் கேள்வி எழுப்பினார். அதற்கு, கோவிலுக்கு செல்ல அனுமதிக்கக்கூடாது என உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்ததாக போலீசார் கூறியது வருத்தமாக உள்ளது.
ஒரு எம்பியாக, மத்திய அமைச்சராக தான் விரும்பும் இடத்தில் வழிபடும் உரிமையை பறிப்பதன் மூலம் போலீசார் தங்களின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளனர். இது பொது மக்கள் இடையே கடுமையான சந்தேகத்தை எழுப்புகிறது. சமீப நாட்களில் தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
சமீப நாட்களாக தமிழகத்தில் இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பீதியடைந்துள்ள பொது மக்கள் இடையே, போலீசாரின் இந்த நடவடிக்கை மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு எம்பியாக, மத்திய அமைச்சரே இப்படி அவமானப்படுத்தப்பட்டால் சாதாரண மக்களின் நிலை என்ன?'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications