தனக்குதானே சாட்டை அடி! அண்ணாமலை லண்டன் போய் வந்த பின்னர் ஏன் இப்படி ஆயிட்டார்?- திருமாவளவன்
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக தனக்கு தானே சாட்டையடி எனும் போராட்டத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கையில் எடுத்திருக்கிறார். இது குறித்து திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன் பேசியதாவது, “இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி கைது செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. இந்தக் குற்றச் செயலில் தொடர்புடையவர்கள் வேறு யார் இருந்தாலும் அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். வழக்கில் குற்றவாளிகளுக்கு பினை உடனடியாக வழங்கக் கூடாது. குற்றவாளியை சிறையில் வைத்தவரே விசாரணையை மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை உரிய காலத்தில் பெற்று தர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

அண்ணாமலையை பொறுத்த அளவில் பரபரப்பாக அரசியல் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறார். தமிழகத்தில் அதிமுக தான் எதிர்க்கட்சி ஆனால் பாஜகவை எதிர்க்கட்சியாக காட்டிக் கொள்ள தீவிரமாக வேலை பார்த்து வருகிறார். இதற்காக ஆளுங்கட்சி மீது அடிக்கடி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். இப்படி குற்றச்சாட்டுகளை அடுக்குவதன் மூலம் எதிர்க்கட்சித் தலைவராக தன்னை காட்டிக் கொள்ள முடியும் என்று அவர் நம்புகிறார்.
அரசியல்: கைது செய்யப்பட்ட நபர் அரசியல் தலைவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார் என்று கூறி அதற்கு திமுக பொருள் கேட்க வேண்டும் என்று வாதிடுவது அப்பட்டமான அரசியல். ஒருவேளை அந்த நம்பர் கைது செய்யப்படாமல் இருந்தால் இந்த காரணத்தை காட்டி அரசு இதற்காகத்தான் கைது செய்யவில்லை என்று குற்றம் சாட்டலாம். ஆனால் உடனடியாக கைது செய்யப்பட்டு இருக்க கூடிய சூழலில் அரசின் மீது இவ்வாறாக குற்றம் சுமத்துவது நல்லதல்ல.
லண்டன்: அண்ணாமலை லண்டன் போய்விட்டு வந்த பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை. அண்ணாமலை எப்படிப்பட்ட முடிவை ஏன் இருக்கிறார் என்பது வருத்தம் அளிக்கிறது. தன்னைத் தானே வருத்திக் கொள்ளும் அகிம்சை வழி போராட்டத்தை காந்தியடிகள் வழியில் இவர் முன்னெடுக்கிறாரா என்று தெரியவில்லை. காந்தி கூட இப்படியான போராட்டத்தை அறிவித்திருக்க மாட்டார். இந்த அறிவிப்பு அதிர்ச்சியாக இருக்கிறது ஆனால் அவருடைய போராட்ட அறிவிப்புகள் நகைப்புக்கு உரியதாக மாறிவிடக்கூடாது” என்று கூறியுள்ளார்.
அண்ணாமலை சொன்னது என்ன?: பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்திருந்த அண்ணாமலை, “தி.மு.கவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன். நாளையில் இருந்து 48 நாட்களுக்கு விரதமிருந்து அறுபடை வீடுகளுக்கு சென்று முருகனிடம் முறையிட உள்ளேன். நாளை காலை 10 மணிக்கு எனது இல்லத்திற்கு வெளியே எனக்கு நானே சாட்டையால் 6 முறை அடித்துக் கொள்ள போகிறேன்” என்று சபதமிட்டு, செய்தியாளர்கள் சந்திப்பின்போதே தனது செருப்பை அவர் கையால் கழற்றியுள்ளார்.
முத்தரசன் விமர்சனம்: இந்த அறிவிப்புக்கு சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். அதாவது “உண்ணாவிரதம் தொடங்கி பல போராட்ட வழிமுறைகளை நாம் கண்டிருக்கிறோம். சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தை முதன்முறையாக இப்போது தான் கேள்விப்படுகிறோம். இது போன்ற செயல்களால், தான் எப்போதும் பக்குவமற்ற அரசியல்வாதி என்பதை அண்ணாமலை நினைவுப்படுத்திக் கொண்டிருக்கிறார்” என்று முத்தரசன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications