செங்கல்பட்டை அடுத்து திருவண்ணாமலையில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அன்னபூரணி அரசு
சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பகுதியில் புதிதாக ஆசிரம பூமி பூஜை போட்ட அன்னபூரணி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கடந்த ஆண்டு இறுதியில் மிகவும் பிரபலமானவர் அன்னபூரணி அரசு எனும் பெண் சாமியார். இவர் சாமியார் என்பதால் காவி உடையில் ஜடாமுடியுடன் எல்லாம் தோற்றம் கொண்டிருக்கவில்லை.
மாறாக பட்டுப்புடவை, தலை நிறைய பூக்கள், கழுத்து நிறைய நகைகளுடன் காட்சி அளித்தார். இவர் நடந்து செல்லும் பாதையில் பூக்களை தூவி மக்கள் வரவேற்றனர். இவர் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி அதாவது ஆங்கிலப் புத்தாண்டு அன்று திவ்ய தரிசனம் கொடுப்பதாக அறிவித்து அது போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
யூடியூப் சேனல்
இதையடுத்து தனது யூடியூப் சேனலிலேயே பக்தர்களுக்கு ஆசியும் சொற்பொழிவையும் வழங்கி வருகிறார் அன்னபூரணி. இது ஒரு புறமிருக்க இவர் அடுத்தவர் கணவரை அபகரித்ததாக லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வந்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் ஒரு விமர்சனம் எழுந்தது.

கணவருடன்
அடுத்தவர் கணவருடன் நான் சேர்ந்து வாழ்ந்ததே இயற்கையின் விதி என பல பேட்டிகளில் அன்னபூரணி தெரிவித்திருந்தார். அவ்வாறு சேர்ந்து வாழ்ந்த காதலன் அரசு திடீரென இறந்து விட்டார். இதையடுத்து அவரது உருவச் சிலையை வைத்து சில காலம் அன்னபூரணி வழிபட்டு வந்தார்.

கடவுள்
இந்த நிலையில் என்னை கடவுள் என நான் சொல்லவில்லை, எனது குழந்தைகள் (பக்தர்கள்) தான் கூறிக் கொள்கிறார்கள். நான் எப்போதும் அப்படி கூறியதில்லை என்ற அன்னபூரணி தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என கூறியே பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார்.

திருவண்ணாமலையில் ஆசிரமம்
இந்த நிலையில் திருவண்ணாமலையில் கீழ்பென்னாத்தூர் பகுதியிலிருந்து ராஜாதோப்பு பகுதியில் புதிதாக 1 ஏக்கர் நிலத்தை அன்னபூரணி வாங்கியுள்ளதாக தெரிகிறது. அன்னபூரணி அரசு அம்மன் என்ற ஆசிரமம் கட்டுவதற்கு பூமி பூஜை தொடங்கியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த பூமி பூஜையில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் குவிந்தனர். அன்னபூரணி வரும் போது சரணம் சரணம் அம்மா, நீ வரணும் வரணும் அம்மா என்ற பாடல் ஒலித்தது.












Click it and Unblock the Notifications