வேண்டாம்.. அவ நம்ம வீட்டுப் பொண்ணு.. ஆணவக் கொலைக்கு அட்டாக் அடி கொடுத்த அண்ணாத்த!
சென்னை: அண்ணாத்த படத்தின் மூலம் அண்ணன்- தங்கை பாசத்தை மிகவும் உணர்ச்சி பொங்க தெரிவித்திருந்த நிலையில் ஆணவக் கொலை வேண்டாம் என்பது குறித்தும் ஒரு மெசேஜ் மறைமுகமாக சொல்லப்பட்டுள்ளது.
நடிகர்கள் ரஜினிகாந்த், ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், அபிமன்யு ராஜு, நடிகைகள் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அண்ணாத்த திரைப்படம் கடந்த 4ஆம் தேதி வெளியானது.
இந்த படத்தில் ரஜினிக்கு கீர்த்தி சுரேஷ் தங்கையாக நடித்துள்ளார். தங்கை பிறந்தவுடன் அந்த பிரசவத்திலேயே தாய் இறந்துவிடுகிறார்.

பொறுப்பு
தங்கையை வளர்த்து படிக்க வைத்து ஆளாக்கும் பொறுப்பு சிறு வயதிலேயே ரஜினிக்கு வந்துவிடுகிறது. தங்கம் தங்கம் என தங்கை தங்க மீனாட்சி மீது பாசத்தை பொழிகிறார் ரஜினிகாந்த். இவரது அத்தை, மாமன் மகள்களாக குஷ்புவும் மீனாவும் நடித்துள்ளார்கள். இவர்களால் ரஜினியை திருமணம் செய்து கொள்ள முடியவில்லை.

ஆசை
இதனால் சொந்தம் விட்டு போகக் கூடாது என்பதற்காக அவரது தங்கை தங்க மீனாட்சியை குஷ்பு தனது தம்பி சதீஷுக்கும், மீனா தனது தம்பி சத்யனுக்கும் திருமணம் செய்து கொடுக்குமாறு போட்டி போடுகிறார்கள். இதையடுத்து ரஜினி தனது தங்கைக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும் என்பதை விளக்குவதை பார்க்கும் அவர்கள் இருவரும் மனம் மாறி தங்கமீனாட்சியை நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க ஆசைப்படுகிறார்கள்.

ரஜினிகாந்த்
இதனிடையே ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் ரஜினிகாந்திற்கு அந்த ஊரில் செல்வாக்கு உள்ளவராக இருக்கும் பிரகாஷ் ராஜுடன் மோதல்கள் வருகின்றன. அப்போது ஒரு திருவிழாவின் போது பிரகாஷ் ராஜை சரமாரியாக தாக்கும் ரஜினி திடீரென அவரிடம் அடிவாங்குவார். இது புரியாமல் பிரகாஷ் ராஜ் விழிக்க, அப்போது ரஜினி சொல்வார், "அங்கே பாரு உன் மனைவியும் குழந்தைகளும் வருகிறார்கள். அவர்கள் முன்பு உன்னை அடித்து அவமதிக்க நான் விரும்பவில்லை" என்கிறார்.

திருமணம்
இது பிரகாஷ் ராஜுக்கு சாட்டையால் அடித்தது போல் இருக்கிறது. பின்னர் மனம் திருந்தி தனது டாக்டர் தம்பிக்கு ரஜினியின் தங்கையை திருமணம் செய்ய வீடு தேடி வந்து பெண் கேட்கிறார். ரஜினியும் கீர்த்தியின் சம்மதத்தை கேட்டு வாக்கு கொடுக்கிறார். ஆனால் மணப்பெண் அழைப்பின் போது கீர்த்தி தான் விரும்பிய ஒருவருடன் ரயில் ஏறி விடுகிறார்.

எதிரிகள்
தங்கையை தனது எதிரிகள்தான் கடத்தி விட்டனர் என நினைக்கும் ரஜினி அவரை தேடி ஆட்களை அனுப்புகிறார். அப்போது ரயிலில் கீர்த்தியை கண்டுபிடிக்கும் ஆள்கள் ரஜினிக்கு போன் செய்து "அண்ணே தங்கச்சியை கண்டுபிடிச்சிட்டோம். ஆனால் அது வரமாட்டேங்குது. யாரையோ விரும்புதாம், அந்த பையனோட போக போறேனு சொல்லுது" னு அந்த அடியாள் சொல்வார்.

அடியாட்கள்
அப்போது ஆத்திரத்தில் அந்த அடியாட்கள் அப்படியே இரண்டு பேரையும் வெட்டி போட்டுவிட்டு வந்துடவாண்ணேனு கேட்பாங்க. ரஜினி மவுனம் காப்பார். உடனே ரஜினியின் சொந்தக்காரர்களும் வெட்டி போட சொல்லு காளையா (ரஜினியின் பெயர்) என்பார்கள். அதற்கு ரஜினி போக சொல்லுடா என்பார், அவ நம்ம வீட்டு பொண்ணு எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும்னு சொல்லி வாழ்த்தி அனுப்புவாரு" .

ஆணவக் கொலை
இந்த விஷயம் பார்ப்பதற்கு சாதாரணமாக தெரியும் ஆனால் இதில் ஆணவக் கொலை கூடாது என்பதற்கான பெரிய மெசேஜ் அடங்கியுள்ளது. தனது வீட்டு பெண்ணோ பையனோ மாற்று ஜாதி, மாற்று மதத்தை சேர்ந்தவரை விரும்பினால், உடனே பெற்றோரே ஆணவக் கொலை செய்துவிடுகிறார்கள். இதற்கு உதாரணம் உடுமலைபேட்டை கவுசல்யா- சங்கர், தெலுங்கானாவில் பிரனய்குமார்- அம்ருதா, கடலூர் முருகேசன்- கண்ணகி உள்ளிட்ட நிறைய ஆணவக் கொலைகள் நடந்துள்ளன. இதில் சங்கர், பிரனய் குமார் பெண் வீட்டாரால் கொல்லப்பட்டனர். முருகேனும் கண்ணகியும் பெண் வீட்டாரால் எரித்துக் கொல்லப்பட்டனர்.

நவீனமயம்
இன்றைய நவீன சூழலில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டால் அவர்களை கொன்று விடும் போக்கு நடக்கிறது. இது இந்தியாவில் நிறைய இடங்களில் நடந்துள்ளது. இதைத்தான் ரஜினி தனது திரைப்படத்தின் மூலம் மறைமுகமாக மெசேஜாக சொல்லியுள்ளார். என்னவொன்று நேரடியாக சொல்லியிருந்தால் இன்னும் வாய்ஸ் கூடியிருக்கும். ஆணோ பெண்ணோ 18 வயது ஆனவுடன் தனது துணையை தேர்வு செய்யும் உரிமை அவர்களுக்கு உள்ளது. அதில் உள்ள நன்மை தீமைகளை பெற்றோர் எடுத்துச் சொல்லலாம். ஆனால் தனது மகளோ மகனோ இறந்தாலும் பரவாயில்லை, தங்களது குடும்ப கவுரவமும் ஜாதி வெறியும்தான் பெரியது என நினைப்போர் இனி எப்போதுதான் இந்த ஆணவக் கொலையை நிறுத்துவார்களோ!












Click it and Unblock the Notifications