ஆளுநருக்கு எதிராக போராட்ட அறிவிப்பு...கிண்டி ராஜ்பவன் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு
ஆளுநருக்கு எதிராக பலரும் போராட்டம் அறிவித்துள்ளதால் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்ப பெற வலியுறுத்தி வேல்முருகன், திராவிடர் விடுதலைக்கழகம் ஆகியோர் போராட்டம் அறிவித்துள்ளதால் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 'நீட்' என்னும் நுழைவு தேர்வை ஆண்டுதோறும் மத்திய அரசு நடத்தி வருகிறது.
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதே அனைத்து கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளது. இது தொடர்பாகக் கடந்த அதிமுக ஆட்சியிலேயே மசோதா நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், குடியரசுத் தலைவர் அதற்கு ஒப்புதல் அளிக்காததால் அது நிறைவேறவில்லை.

நீட் விலக்கு விவகாரத்தை அப்போதய எதிர்கட்சியாக இருந்த திமுக தேர்தல் பிரசாரத்தில் வலுவாக முன்னெடுத்தது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி நீட் விலக்கு தொடர்பாகப் பல இடங்களிலும் பேசினார். அந்த ரகசியம் எங்களுக்கு மட்டுமே தெரியும் என்றும் கூட கூறினார்.
தமிழகத்தில் பாஜகவை தவிர அனைத்து கட்சிகளும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. இதனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வழிவகுக்கும் வகையில் அனைத்து கட்சிகள் ஒப்புதலுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. தமிழக ஆளுநருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.ஆனால் தமிழக ஆளுநர் இதனை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். ஆளுநர் காலம் தாழ்த்துவது குறித்து அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களை இந்த மாசோதா பாதிக்கும் என்று ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதியே உரிய விளக்கத்துடன் சபாநாயகருக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டதாகவும் நீட் ரத்து மசோதாவை சட்டப்பேரவையில் மறுஆய்வு செய்ய ஆளுநர் மாளிகை அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நாளை காலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போரட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் நிறுவனர் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். திராவிடர் விடுதலைக்கழக உறுப்பினர்களும் ஆளுநர் ஆர். என். ரவியை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்து விடாத வகையில் நுழைவு வாயில் முன்பாக தடுப்புகள் போடப்பட்டுள்ளன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றைய தினம் பாஜக நிர்வாகிகள் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications