விடாத மழை.. நிரம்பும் செம்பரம்பாக்கம்..3000 கனஅடிநீர் வெளியேற்றம்.. கரையோர மக்கள் உஷார்
சென்னை: தொடர்மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதால் விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு வரும் நீரின் அளவு 4500 கனஅடி ஆக உள்ளது.
கடந்த சனிக்கிழமை அதிகாலை மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில் சென்னை மட்டுமல்லாது வட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது.
ஆனால், புயல் கரையை கடந்த இரண்டு நாட்கள் ஆன பின்னரும் மழை தொடர்ந்து பெய்துகொண்டிருக்கிறது. இதற்கு தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிதான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

33 மாவட்டங்களில் மழை
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்த அளவில், அடுத்த மூன்று மணி நேரத்தில் கும்மிடிப்பூண்டி, மதுராந்தகம், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர், மயிலாப்பூர், பூவிருந்தவல்லி, புரசைவாக்கம், திருவொற்றியூர் என பரவலான இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.

நீர் திறப்பு
தொடர் மழை காரணமாக சென்னையையொட்டி உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. சென்னையின் குடிநீர் ஆதாரமாக உள்ள புழல், சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. அதேபோல செம்பரம்பாக்கம் ஏரியை பொருத்த அளவில் அதன் முழு கொள்ளளவான 24 அடியில் 22 அடிவரை நீர் எட்டியுள்ளது. ஏரிக்கான நீர்வரத்து காலை 9 மணி நிலவரப்படி விநாடிக்கு சுமார் 2,046 கனஅடியாக இருந்தது. இதனையடுத்து நேரம் செல்ல செல்ல நீர் வரத்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் நீர் இருப்பு 3,184 மில்லியன் கனஅடியாக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே ஏரியிலிருந்து விநாடிக்கு 100 கனஅடி வீதம் உபரிநீர் வெறியேற்றப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 9 மணியளவில் 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

செம்பரம்பாக்கம்
இந்நிலையில் நண்பகல் 12 மணி நிலவரப்படி கூடுதலாக 1,000 கனஅடி என விநாடிக்கு 2,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. மழை நீடிப்பதால் தற்போது ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 3ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 9 கி.மீ நீளம் கொண்ட இந்த ஏரியின் கரையில் மொத்தமாக 19 சிறிய மதகுகள் மற்றும் 5 பெரிய மதகுகள் இருக்கின்றன. இதிலிருந்து திறந்துவிடப்படும் நீர், குன்றத்தூர், திருநீர்மலை ஆகியவற்றை கடந்து ராமாபுரம், ஈக்காட்டுதாங்கல், கோட்டூர்புரம் என அடையாறு வழியாக கடலில் கலக்கும். எனவே இந்த பகுதியில் கரையோரம் இருக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல மழை தொடர்வதால் ஏரியிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

விடுமுறை
தொடர்மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம். செங்கல்பட்டு, வேலூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு பிற்பகலுக்கு மேல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை உள்ளிட்ட தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தை பொறுத்த அளவில், காஞ்சிபுரம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முதலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications