வெயிட்டிங் லிஸ்ட் மட்டும் 7000.. தீபாவளிக்கு 40 சிறப்பு ரயில்கள்! வெளியானது அறிவிப்பு
சென்னை: தீபாளிக்கு சொந்த ஊர் செல்வதற்காக பயணிகள் பலரும் டிக்கெட்டை முன்பதிவு செய்துள்ளனர். ஆனால் எல்லோருக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை. ஏராளமான பயணிகள் காத்திருப்பில் உள்ளனர். எனவே 40 சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.
பண்டிகை காலம் என்று வந்துவிட்டாலே ரயில்களில் டிக்கெட் கிடைப்பது மிகவும் சிரமமாகிவிடும். அதுவும் தீபாளிக்கு டிக்கெட் நிச்சயம் கிடைக்காது. இந்த முறையும், தீபாவளிக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே மொத்தமாக விற்று தீர்ந்தது. சென்னையிலிருந்து பெங்களூர் மார்கம், தஞ்சாவூர் மார்கம், கோவை, குமரி, திருவனந்தபுரம், எர்ணாக்குளம் என அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப்படும் ரயில்களிலும் சுமார் 7000 பயணிகள் காத்திருப்பில் இருக்கின்றனர்.

எனவே இவர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கபடுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. அதன்படி, அக்.25 முதல் நவ.5 வரை மொத்தம் 40 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. முதல் கட்டமாக அக்.25 முதல் சென்னை எழும்பூரிலிருந்து நெல்லை, குமரி, கோவை, திருவனந்தபுரம் வழித்தடத்திலும், சென்ட்ரலிலிருந்து மங்களூர், பெங்களூர், மைசூர் வழித்தடத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
இரண்டாவது கட்டமாக தீபாவளிக்கு முந்தைய தினத்தில் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. அக்.29 மற்றும் நவ.5 ஆகிய தேதிகளில் சென்ட்ரலிலிருந்து நாகர்கோவில் மற்றும் கோவைக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல அக்.30ம் தேதி நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தவிர மங்களூருக்கு நவ.2ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
எழும்பூரை பொறுத்தவரை, அக்.30 மற்றும் நவ.2 ஆகிய தேதிகளில் செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இவற்றை தவிர, கொச்சுவேலி-பெங்களூர், சென்னை-அகமதாபாத் போன்ற வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன.
சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வரவேற்கப்பட வேண்டிய விஷயம் என்றாலும், நெல்லை, கோவை மற்றும் தஞ்சை வழித்தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக தஞ்சை வழித்தடத்தில் திருவாரூருக்கு நாளொன்றுக்கு இரண்டு ரயில்கள் மட்மே இயக்கப்படுகிறது. சனி, ஞாயிறு நாட்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் இவையெல்லாம் வடமாநிலத்திலிருந்து வரும் ரயில்கள் என்பதால் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், டிக்கெட் எளிதில் கிடைப்பதில்லை என்றும் சொல்லப்படுகிறது.
அதேபோல சென்ட்ரலிலிருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் ரயிலின் பயண நேரம் அதிகம் என்பதால், எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications