1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித்தேர்வு நடக்குமா? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய விளக்கம்!
சென்னை: 1 முதல் 5ஆம் வகுப்புகள் வரை உள்ள மாணவ, மாணவியருக்கு இறுதித் தேர்வு இல்லை என்று வெளியான செய்திகளுக்கு தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனாவிற்கு பின் மீண்டும் வகுப்புகள் தொடங்கி நடந்து வருகின்றன. கடந்த இரண்டு வருடமாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் மீண்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் இடையில் வகுப்புகள் பல நாட்கள் முறையாக நடக்காத காரணத்தால், தற்போது வேலைநாட்கள் அதிகரிக்கப்பட்டு, தேர்வுகள் மே மாதம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

10, 12ம் வகுப்பு தேர்வு
கடந்த வருடம் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடக்காத நிலையில் இந்த வருடம் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான செய்முறை தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டன. 12, 11 வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் ஏப்.,25ல் துவங்கும் என அறிவிக்கப்பட உள்ளது. அதேபோல் 10ம் வகுப்பு செய்முறை தேர்வும் ஏப்.,25ல் நடக்க உள்ளது

5ம் வகுப்பு தேர்வு
இந்த நிலையில் 10 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு மே மாதம் 6ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரையிலும் நடக்க இருக்கிறது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 9ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை தேர்வு நடக்கிறது. 12 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மே மாதம் 5ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில்தான் 1 முதல் 5ஆம் வகுப்புகள் வரை இறுதித் தேர்வு இல்லை என்று தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை தெரிவித்ததாக பல்வேறு செய்திகள் வந்தன.

மற்ற தேர்வுகள்
ஆனால் இதற்கு தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை இந்த ஆண்டு இறுதித்தேர்வு நிச்சயம் நடைபெறும். குறைந்த பாடத்திட்டத்திலேயே தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் 6-9ஆம் வகுப்புகளுக்கு மே 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை ஆண்டு தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 6-9ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் 30ம் தேதி வெளியிடப்படும்.

விடுமுறை
இந்த முறை விடுமுறை நாட்களை வெகுவாக மாற்றம் கண்டு உள்ளன. நடப்பு கல்வியாண்டுக்கான இறுதி வேலை நாள் மே 13ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் தேர்வுகள் நடக்கும். 6-9ஆம் வகுப்புகளுக்கு மே 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடக்கும் நிலையில் ஜுன் 13ஆம் தேதி அடுத்த கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . ஆனால் 10 வகுப்பு பொதுத்தேர்வு மே 30ம் தேதி முடிய உள்ளதால் 11ஆம் வகுப்புக்கு மட்டும் ஜுன் 24ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications