மகளிர் உரிமை தொகை.. ஆண்டு வருமானம் உயர்வு? பல பெண்களுக்கு வரப்போகுது பெரிய குட் நியூஸ்
சென்னை: தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகளில், 1 கோடியே 14 லட்சம் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை கிடைத்து வருகிறது. மொத்தமாக கணக்கிட்டு பார்த்தால் 1 கோடியே 63 லட்சம் பேர் எதிர்பார்க்கிறார்கள். எதிர்பார்க்கும் சுமார் 50 லட்சம் பேருக்கு இன்னும் உரிமை தொகை கிடைக்காமல் உள்ளது. இந்நிலையில் விதிமுறைகளில் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் என்பதனை ரூ.3 லட்சம் அல்லது ரூ.4 லட்சம் உயர்த்தலாமா? என்றும் அரசு பரிசீலனை செய்து வருகிறதாம்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ஒவ்வொரு மாதமும் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதே நேரம் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை.. தகுதி உள்ள குடும்பங்கள் என்று அரசு வருமானத்தை வரம்பாக நிர்ணயம் செய்துள்ளது.

அதன்படி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற வேண்டுமென்றால் அரசு அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் சில தகுதிகளை வைத்துள்ளது. அதன்படி ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது.
அதேபோல் ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பத்தினருக்கும், முதியோர் உதவி தொகை, விதவையர் உதவி தொகை உள்பட அரசின் வேறு உதவி தொகைகள் வாங்காத குடும்பத்தினருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இதேபோல் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு குடும்பத்தில் யாருக்கும் நான்கு சக்கர வாகனங்கள் இருக்கக்கூடாது என்றும், குடும்பத்தில் ஒருவர் கூட வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவராக இருக்கக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கல் செய்யும் குடும்ப உறுப்பினர்களை கொண்டவர்கள், நான்கு சக்கர வாகனம் வைத்துள்ள குடும்பங்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படவில்லை.. இதுதான் தற்போது உள்ள நடைமுறையாகும்.
அதேநேரம் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், வருமான வரி வரம்பில் மட்டும் மாற்றம் செய்யலாமா என்று அரசு ஆலோசித்து வருகிறது. தற்போதைய நிலையில், குடும்பத்தில் இரண்டு பேர் மாதம் 12000 சம்பளம் வாங்கினாலும், 2.5 லட்சத்தை தாண்டிவிடும். இதனால் ஏழை மக்கள் சிலர் பாதிக்கப்படுவதாக ஆதங்கங்கள் உள்ளது.
எனவே இந்த விதிமுறைகளில் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் என்பதனை ரூ.3 லட்சம் அல்லது ரூ.4 லட்சம் உயர்த்தலாமா? என்றும் அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசு ஒரு வேளை வருமான வரி வரம்பை உயர்த்தப்படும் பட்சத்தில் அதிகளவில் பெண்கள் பலன் பெறுவார்கள் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.












Click it and Unblock the Notifications