"துரோகி ஆவதைவிட எதிரியாவதே மேல்”.. நாம் தமிழர் கட்சியில் மேலும் ஒரு முக்கிய விக்கெட்!
சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சபரிநாதன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக, நாம் தமிழர் கட்சியிலிருந்து பலரும் வெளியேறி வருவது அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்னர் சீமான், தந்தை பெரியாரை விமர்சித்ததை எதிர்த்து பலரும் வெளியேறுவதாக அறிவித்தனர். நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ஜெகதீச பாண்டியன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் பலரும் அக்கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர். நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கட்சியில் இருந்து விலகி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் தனது பொறுப்புகளில் இருந்து விலக உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவி வருகின்றன. தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றின் அழைப்பிதழில் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பை குறிப்பிடாமல், சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிட்டு காளியம்மாளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அழைப்பிதழ் தற்போது வைரலாகி வருகிறது. காளியம்மாளின் பெயருக்கு பின் சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிடப்பட்டுள்ளதால், அவர் நாம் தமிழர் கட்சியில் உள்ளாரா? அல்லது விலகியுள்ளாரா? என்பதில் குழப்பம் நிலவுகிறது. இது தொடர்பாக காளியம்மாளிடம் கேட்டபோது, விரைவில் இதற்கு விளக்கம் அளிப்பேன் எனவும் காளியம்மாள் கூறியுள்ளது இந்த யூகங்களை இன்னும் அதிகமாக்கியுள்ளது.
அதுபற்றி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "போறதா இருந்தா போங்க.. அது தான் எங்களுடைய கொள்கை. பருவகாலங்களில் இலையுதிர் காலம் என்று ஒன்று வருவது அனைவருக்கும் தெரியும். அதேமாதிரி எங்களுடைய கட்சியில் இது களையுதிர் காலம். வருவார்கள் போவார்கள். எனவே, என்னை பொறுத்தவரையில் தங்கை காளியம்மாள் விலகவேண்டும் என்றால் விலகட்டும் இங்கு இருந்து விலகி வேறு கட்சியில் இணைந்து பணியாற்ற எல்லா சுதந்திரமும் அவருக்கு இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சேலம் மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சபரிநாதன் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நாதகவில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி வெளியேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி சேலம் மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சபரிநாதன் தனது சமூக வலைதள பக்கத்தில், "நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்ட மாநகர இளைஞர் பாசறை செயலாளர் சபரிநாதன் ஆகிய நான் மற்றும் 300க்கும் மேற்பட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகி கொள்கிறோம். கரையான் கூட்டத்தோடு இருந்து துரோகி ஆவதைவிட கிளையாக உடைந்து எதிரியாவதே மேல்! இதுவரை ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications