டெல்லிக்கே புகாரை அனுப்பிய திமுக.. நம்மை மதிப்பதே இல்லை.. திரும்பி வந்த "டோஸ்".. சம்பவம்!
சென்னை: தமிழக காங்கிரஸின் செயற்குழுவில் திமுகவுக்கு எதிராகப் பேசப்பட்ட ஒரு விவகாரம் காங்கிரசின் மேலிடம் வரை புகாராக தெரிவித்திருக்கிறது திமுக. இதனையடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு 'டோஸ் அட்வைஸ்' செய்திருக்கிறது காங்கிரஸ் மேலிடம்.
சத்தியமூர்த்தி பவனில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், மேலிடப் பொறுப்பாளர் கிரிஸ் ஜோடங்கர் முன்னிலையில் நடந்த செயற்குழுவில், காங்கிரஸின் முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசு, தங்கபாலு உள்பட மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டத் தலைவர்கள் என பலரும் பேசினர். திருநாவுக்கரசு பேசும்போது, "திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு மரியாதையே இல்லை. கூட்டணி ஆட்சி வேண்டும், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என சொல்வதற்குகூட நாம் தயங்குகிறோம். நாம் கோழையாக இருப்பதால்தான் திமுக நம்மை மதிப்பதே இல்லை.
சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தாவது திமுகவிடம் நாம் திமிராக நடந்து கொள்ளவேண்டும். ஆட்சியில் பங்கு கேட்பது நமது உரிமை. அதை சத்தமாக நாம் கேட்க வேண்டும்" என்று ஆவேசமாக பேசியிருக்கிறார். திருநாவுக்கரசு ஆரம்பித்து வைத்த பொறி, மற்றவர்களிடமும் தொற்றிக்கொண்டது. பேசியவர்கள் பெரும்பாலும், "திமுக கூட்டணியில் நாம் இருக்க வேண்டுமாயின் திமுகவிடம் சில கன்டிசன்களைப் போடவேண்டும். குறிப்பாக அதிகாரத்தில் பங்கு தர அவர்களை சம்மதிக்க வைக்க வேண்டும். குறைந்தபட்சம் இந்த முறை 45 தொகுதிகளைக் கேட்க வேண்டும். மறுக்கும் பட்சத்தில் கூட்டணியை மாற்றலாம்" என்று தெரிவித்துள்ளனர்.

கே.எஸ்.அழகிரி, பீட்டர் அல்போன்ஸ் மட்டும் திமுகவையும் அதன் கூட்டணியையும் ஆதரித்துப் பேசினர். செல்வப்பெருந்தகை பேசும் போது, " உங்கள் உணர்வுகள் எனக்குப் புரிகிறது. இருந்தாலும் நீங்கள் பேசியவைகள் குறித்து கட்சி மேலிடம்தானே முடிவெடுக்கும். நம் கையில் ஒன்றுமில்லையே" என்று பட்டும்படாமல் பேசியிருக்கிறார். மேலிடப் பொறுப்பாளர் கிரிஸ் ஜொடங்கர், "நீங்கள் பேசியவைகளில் எனக்கு உடன்பாடு உண்டு. நாம் கட்சி நடத்துவது அதிகாரத்தைப் பிடிப்பதுதான். அதனால், கூட்டணியில் இருக்கும் போது ஆட்சியில் பங்கு கேட்பது தவறல்ல. ஆட்சியில் பங்குஇல்லாததால் தான் 60 ஆண்டு காலமாக காங்கிரஸ்சுக்கு வளர்ச்சி இல்லாமல் இருக்கிறது. இனி நாம் மாத்தி யோசிக்க வேண்டும். இதைப்பற்றி மேலிடத்தில் நான் விவாதிக்கிறேன்" என்று சொல்லியிருக்கிறார்.
பொதுவாக, சத்தியமூர்த்திபவனில் எந்த ஒரு ஆலோசனைக் கூட்டமாக இருந்தாலும் திமுக தலைமைக்கு உடனடியாக சென்று விடும். அந்தளவுக்கு திமுக மீது அளவு கடந்த பாசம் கொண்ட கதர்சட்டையினர் காங்கிரசில் இருக்கின்றனர். அந்த வகையில், செயற்குழுவில் எதிரொலித்த கூட்டணி ஆட்சி குரல்களும் அறிவாலயத்தை எட்டியுள்ளாது. இதனையடுத்து, தமிழக காங்கிரஸ் தலைவர்களின் இந்த பேச்சுக்களை மல்லிகார்ஜுன கார்கேவின் கவனத்துக்கு புகாராக கொண்டு சென்றுள்ளது திமுக தலைமை. இந்த நிலையில், "கூட்டணி ஆட்சி குறித்தோ, கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துகிற வகையிலோ காங்கிரஸ் நிர்வாகிகள் பேசக்கூடாது என்று காட்டமாக கடிவாளம் போட்டுள்ளது காங்கிரஸ் மேலிடம்.
கூட்டணி
இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சிக்குள் சில சீனியர்கள் மட்டும், 'கட்சி அழிஞ்சிக்கிட்டு இருக்கு. காங்கிரஸ் வளரணும்னா திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியே வரவேண்டும். அது மட்டுமல்ல, கூட்டணி ஆட்சிக்கு அதிமுக தயாராக இருக்கிறது. அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டுமானால் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது அவசியம்' என அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள், என்று தகவல்கள் வர தொடங்கி உள்ளன.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளராக கிரிஸ் ஜோடங்கரை கடந்த மாதம் நியமித்தது கட்சியின் அகில இந்திய மேலிடம். பொறுப்பாளராக நியமிக்கப்பட்டப் பிறகு முதன்முறையாக கடந்த 3-ந்தேதி சென்னை வந்தார் கிரிஸ். அண்ணாசாலையில் உள்ள கன்னிமாரா ஹோட்டலில் அவருக்கு ரூம் போட்டிருந்தது காங்கிரஸ் கட்சி. கிரிஸ்சும் ப.சிதம்பரமும் நெருங்கிய நண்பர்களாம். அதனால், கோவாவிலிருந்து சென்னைக்கு கிரிஸ் கிளம்பும் முன்பு, சிதம்பரத்திடம் பேசியிருக்கிறார்.
"சென்னைக்கு வாருங்கள் உங்களை சந்திக்கிறேன்" என்று சொல்லியிருக்கிறார் ப.சி. ! அதன்படி அன்று இரவே கன்னிமாரா ஹோட்டலில் கிரிஸ், ப.சி. சந்திப்பு நடந்திருக்கிறது. சிதம்பரத்திடம் தமிழக அரசியல் சூழலையும், காங்கிரஸ் தலைவர்களின் அரசியல் சிந்தனைகளையும் சிதம்பரத்திடம் கேட்டறிந்துள்ளார் கிரிஸ். அப்போது, "திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையானது. இந்த கூட்டணி, சட்டமன்ற தேர்தலிலும் தொடரவேண்டும் என்று பேசியதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications