2.87 கோடி பணம், 6.67 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி! கேபி அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல்
சென்னை: முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் 2.87 கோடி ரூபாய் பணம் 6.67 கிலோ தங்கம், 13.85 கிலோ வெள்ளி ஆகியவை கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆட்சிக் காலத்தின்போது லஞ்சம் மற்றும் பல்வேறு முறைகளில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

லஞ்ச ஒழிப்பு சோதனை
புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கோ.சி .வீரமணி, எம்.ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் அடுத்தடுத்து சோதனைகள் நடத்தி அந்த சோதனையில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது.

முன்னாள் அமைச்சர் அன்பழகன்
இந்த நிலையில் அதிமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வித் துறை அமைச்சராகப் பதவி வகித்த கேபி அன்பழகனுக்கு தொடர்புடைய 55 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். அதிகாலை அவரது வீட்டுக்குள் அதிரடியாக புகுந்த அதிகாரிகள் அதே நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அன்பழகனுக்கு சொந்தமான 50 இடங்களில் சோதனைகள் மேற்கொண்டனர்.

வழக்கு பதிவு
கேபி அன்பழகன் தனது குடும்பத்தினர் பெயர்களை அதிகளவு சொத்துக்கள் வாங்கி உள்ளதாகவும் சென்னை தர்மபுரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சொத்துக்கள் வாங்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த சோதனை நடைபெற்று நிறைவடைந்துள்ளது.

நகை , பணம் பறிமுதல்
முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தன்னுடைய வருமானத்தை விட கூடுதலாக 11.32 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக புகார் எழுந்த நிலையில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் 6.67 கிலோ தங்கம் 13.8 5 கிலோ வெள்ளி மற்றும் 2.7 கோடி ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் அவரது வங்கி லாக்கர் சாவி மற்றும் வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்த வழக்கு இன்னும் புலன் விசாரணையில் இருந்து வருகிறது எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications