கசியாத ஆபரேஷன்.. விஜயபாஸ்கர் தங்கை, தம்பிக்கும் செக்.. மொத்தமாக குவிந்த அதிகாரிகள்.. என்ன நடந்தது?
சென்னை: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மட்டுமின்றி அவரின் உறவினர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள். நூற்றுக்கணக்கான அதிகாரிகள் ரெய்டில் ஈடுபட்டு உள்ளனர்.
புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி உள்ளிட்ட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் சொத்து சொத்து சேர்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
முதல் குற்றஞ்சாட்டப்பட்ட நபராக விஜயபாஸ்கரும், இரண்டாவது குற்றஞ்சாட்டப்பட்ட நபராக அவரின் மனைவியும் சேர்க்கப்பட்டுள்ளது. 2016 முதல் 2021 ஆண்டு காலங்களில் அமைச்சராக இருந்த போதுதான் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இந்த புகார் வைக்கப்பட்டுள்ளது.

ரெய்டு
இந்த ரெய்டு ஆபரேஷன் தொடர்பான எந்த தகவலும் கசியாமல் அதிகாலை திட்டமிட்டு ரெய்டு நடத்தப்பட்டு இருக்கிறது. எஸ்.பி வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்த சமயத்தில் அது தொடர்பான தகவல்கள் வெளியேறியதாக கூறப்பட்டது. முன்கூட்டியே இது பற்றி தகவல் கசிந்ததாக கூறப்பட்டது. இதனால் கேசி வீரமணி வீட்டில் ரெய்டு நடந்த போதே அது மிகவும் சீக்ரெட்டாக திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டது.

சீக்ரெட்
அதேபோல் இந்த முறையும் விஜயபாஸ்கர் வீட்டில் சீக்ரெட் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. நேற்று அதிமுக பொன் விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதனால் மொத்த அதிமுக தலைகளும் சென்னையில் இருந்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் சென்னையில் இருந்தார். இந்த நிலையில்தான் அவர் சென்னையில் இருக்கும் போதே இன்னொரு பக்கம் லஞ்ச ஒழிப்புத்துறை பிளான் போட்டு சரியாக ரெய்டு நடத்தி உள்ளது.
Recommended Video

எங்கு?
ஒரே நேரத்தில் 45 இடங்கள் வரை ரெய்டு நடத்திய காரணத்தால் பல நூறு அதிகாரிகள், வாகனங்கள் இந்த ரெய்டில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. காலை 7 மணிக்கு பின் தொடங்கிய ரெய்டு இப்போது வரை தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த ரெய்டில் விஜயபாஸ்கர், அவரின் மனைவிக்கு சொந்தமான வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது. அவருக்கு சொந்தமான 14 கல்லூரிகளில் ரெய்டுகள் நடத்தப்பட்டு வருகிறது.

பினாமி
அதுமட்டுமின்றி தமிழ்நாடு முழுக்க இவருக்கு சொந்தமான பினாமி பலரின் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை அதிமுக நிர்வாகி அப்துல்லா என்பவரின் வீட்டிலும் ரெய்டு நடந்து கொண்டு இருக்கிறது. அதுமட்டுமின்றி இன்னொரு பக்கம் விஜயபாஸ்கரின் தம்பி, தங்கைகள் வீட்டிலும் ரெய்டு நடக்கிறது. இதில் தம்பி மீது வழக்கு பதியப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

கல்வி
மதர் தெரசா கல்வி நிலையங்கள் என்ற பெயரில் 14 கல்வி நிலையங்களில் விஜயபாஸ்கர் முறைகேடாக முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. கடந்த 2016க்கு பின் சேர்க்கப்பட்ட முறைகேடான சொத்துக்கள் மூலம் இந்த கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக லஞ்ச ஓழிப்புத்துறை தனது எப்ஐஆரில் குறிப்பிட்டுள்ளது. இந்த கல்வி நிறுவனங்களை விஜயபாஸ்கரின் தம்பிதான் நிர்வகித்து வருகிறார்.

தம்பி
இதனால்தான் அவரின் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. அதேபோல் விஜயபாஸ்கர் தனது தங்கையின் பெயரில் சொத்துக்கள் சேர்த்தாகவும் கூறப்படுகின்றது. இந்த சொத்து விவரங்கள் காரணமாக அவரும் குறி வைக்கப்பட்டுள்ளார். இதனால் ரெய்டின் முடிவில் எப்ஐஆரில் கூடுதலாக சிலரின் பெயர்களும் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.












Click it and Unblock the Notifications