"அதிமுகவை தொட்டு பாரு.. அப்போ தெரியும்.." பாஜக அண்ணாமலை குறித்து கேட்டதும் ஆவேசமான ஜெயக்குமார்
சென்னை: அண்ணாமலை மற்றும் அதிமுக தலைவர்கள் இடையேயான வார்த்தை மோதல் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே இன்று அண்ணாமலையை மிகக் கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார், தனித்து நின்றால் பாஜகவால் ஒரு சீட் கூட வெல்ல முடியாது என்று சாடினார். மேலும், அதிமுக குறித்துப் பேச அண்ணாமலைக்கு எந்தவொரு தகுதியும் இல்லை என்றும் விமர்சித்தார்.
அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறியது முதலே இரு தரப்பும் மாறி மாறி விமர்சித்து வருகிறார்கள். அதன்படி சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்துப் பேசியிருந்தார்.

அதற்கு அண்ணாமலை மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்திருந்தார். அண்ணாமலையின் பேச்சுக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக அண்ணாமலைக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்த அதிமுகவினர், அவரது உருவ பொம்மைகளையும் எரித்தனர்.
ஜெயக்குமார் தாக்கு: இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவை மிகக் கடுமையாக விமர்சித்தார். அண்ணாமலையை விட்டில் பூச்சி என்று சாடிய அவர், லண்டன் செல்வதால் விரக்தியால் இதுபோல பேசி வருவதாகவும் விமர்சித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அண்ணாமலையின் தகுதி என்ன. அவர் கடந்த 3 வருடமாக மட்டுமே அரசியலில் இருக்கிறார். எங்கள் பொதுச்செயலாளரின் தகுதி என்ன.. கிளைச் செயலாளராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி எம்பி, எம்எல்ஏ, அமைச்சர் என படிப்படியாக முதல்வர் பதவியை அடைந்தவர்.
என்ன தகுதி: கொடி பிடிக்கும் சாதாரண தொண்டர் கூட கொடி இருக்கும் அரசு காரில் முதல்வராகச் செல்ல முடியும் என்றால் அது அதிமுகவில் மட்டுமே சாத்தியம். நான் அண்ணாமலையைப் போலத் தரம் தாழ்ந்து பேச விரும்பவில்லை. உங்கள் நிலைமையை விட்டில் பூச்சி போலத் தான். விட்டில் பூச்சியின் வாழ்நாளே மொத்தம் ஏழு நாட்கள் தான்.. அண்ணாமலையின் அரசியல் அதுபோல தான். தமிழகத்தை 31 ஆண்டுகள் ஆண்ட பாரம்பரியமிக்க மாபெரும் இயக்கத்தைப் பேச வேண்டும் என்றால் அதற்கான யோக்கியதையும் தகுதியும் அண்ணாமலைக்கு இருக்கிறதா?
உள்ளாட்சித் தேர்தலில் 1.12 லட்சம் பேரை நிற்க வைப்பேன் என்கிறார் அண்ணாமலை.. பல பூத்களில் ஆளே இல்லை. உங்களிடம் 1.12 லட்சம் வேட்பாளர்களே முதலில் இல்லை. இதில் அவர்கள் எல்லாரும் வென்று ஆட்சியைப் பிடித்துவிடுவார்கள் என்று எல்லாம் பேசிக் கொண்டு இருக்கிறார். அண்ணாமலை கற்பனைக் கோட்டையைக் கட்டுகிறார். அவர் கற்பனையிலேயே அரசியல் செய்து கொண்டு விட்டில் பூச்சி போல மிதந்து கொண்டு இருக்கிறார்.
விட்டில் பூச்சி: திராவிட இயக்கத்தையே ஒழிக்கப் போகிறோம் என்று வேறு சொல்கிறார். திராவிட இயக்கம் என்றால் திமுக, அதிமுக இரண்டும் வரும். ஆனால், அண்ணாமலை பேச்சுக்கு இதுவரை திமுக எந்தவொரு பதிலையும் சொல்லவில்லை. திமுகவை நீ எப்படி வேண்டுமானாலும் பேசிக்கொள். ஆனால், அதிமுகவைப் பேசாதே..
இந்த விட்டில் பூச்சி மாபெரும் ஆலமரமாக இருக்கும் அதிமுகவை ஒழிப்பேன் என்பதெல்லாம் என்ன பேச்சு. அதிமுகவை அழிக்கக் கருணாநிதியால் கூட முடியவில்லை. எனவே, இந்த இயக்கத்தை அழிக்க அண்ணாமலையாலும் முடியாது. அவருடைய அப்பாவாலும் முடியாது. அவருடைய பாட்டனே வந்தாலும் முடியாது.
தொட்டு பாரு: அதிமுகவைத் தொட்டுப்பார்த்தால் கெட்டுப்போவார்கள். இதுதான் வரலாறு. எவ்வளவு ஜென்மம் எடுத்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. அவர் மட்டுமின்றி யார் நினைத்தாலும் அதிமுகவை அழிக்கவே முடியாது. இந்த 3 வருட குழந்தை 52 ஆண்டு அனுபவம் கொண்ட இயக்கத்தை அழிப்பேன் என்று சொல்வது எல்லாம் விரக்தி பேச்சு தான்.
அண்ணாமலை லண்டன் செல்கிறார். நீங்க ஒரு மேனேஜர்.. ஒரு நிறுவனத்தின் மேலாளர். ஆனால், அவர் கட்சியின் பொதுச்செயலாளர்.. 2.5 கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கத்தின் பொதுச்செயலாளரை இழிவுபடுத்துகிறார். பல்பு எப்படி ப்யூஸ் போவதற்கு முன்பு பிரகாசமாக எரியுமோ அதேபோலத் தான் மக்கள் அண்ணாமலையின் பேச்சைப் பார்க்கிறார்கள்.
ஜெயிக்க முடியாது: இந்த வாய் ஜாலம், உதார் விடுவது, சவால் விடுவது எனப் பேசிக் கொண்டு மட்டுமே இருப்பீர்கள். ஆட்சிக்கு வருவது எல்லாம் உங்களுக்குப் பகல் கனவு தான். உங்களால் கோட்டை பக்கமே நிச்சயம் வர முடியாது. தனித்து நின்றால் ஒரு எம்எல்ஏ சீட் கூட ஜெயிக்க முடியாது. அப்படி இருக்கும் போது அதிமுகவை அழிப்போம் என்பது வேடிக்கையாக இருக்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications