அபூர்வா ஐ.ஏ.எஸ்.ஸின் தாயார் காலமானார்! தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா ஐ.ஏ.எஸ்.ஸின் தாயார் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
இதையடுத்து அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ஆறுதலும், இரங்கலும் தெரிவித்தார்.
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவுக்கு இரங்கல், ஐ.ஏ.எஸ். அதிகாரி அபூர்வா தாயார் மறைவுக்கு இரங்கல், அமைச்சர் பொன்முடி தம்பி மறைவுக்கு நேரில் சென்று பொன்முடிக்கு ஆறுதல் என இன்று மூன்று துக்க நிகழ்வுகளில் பங்கேற்றார் முதல்வர் ஸ்டாலின்.
அபூர்வா ஐ.ஏ.எஸ்.ஸை பொறுத்தவரை உயர்கல்வித்துறை, விளையாட்டுத்துறை என இரண்டு துறைகளிலும் மிகத் துடிப்புடன் பணியாற்றியவர்.
சர்வசதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறு சர்ச்சை கூட எழாமல் மிகவுன் நேர்த்தியாக நடத்தி முடித்தவர். இதனால் துறை ரீதியிலான இவரது செயல்பாடுகள் பற்றி முதல்வர் நன்கறிவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே அபூர்வா ஐ.எஸ்.எஸ். அம்மா மறைவுக்கு முதல்வர் விடுத்துள்ள இரங்கல் பதிவு பின்வருமாறு;
''வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் செல்வி. அபூர்வா இ.ஆ.ப., அவர்களின் தாயார் திருமதி. அருணோதயம்
அம்மையார் அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்தினேன்.''
''தொலைபேசி வாயிலாக செல்வி. அபூர்வா இ.ஆ.ப. அவர்களைத் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தேன். தாயாரது பிரிவால் வாடும் செல்வி. அபூர்வா இ.ஆ.ப., அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.'' இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.