மும்பையில் இருக்கிறேன்! ஏ.ஆர்.ரகுமானை தொந்தரவு செய்ய விரும்பவில்லை! பிரிவு ஏன்? தழுதழுத்த சாயிரா
சென்னை: நான் மும்பையில் சிகிச்சையில் இருக்கிறேன். ஏ.ஆர்.ரகுமான் மீது நான் வைத்திருக்கும் காதல் பெரியது, அவர் சிறந்த மனிதர் என சாயிரா பானு உருக்கமான ஆடியோவில் பேசியுள்ளார்.
குஜராத்தை சேர்ந்த சாயிரா பானுவுக்கும் ஏ.ஆர்.ரகுமானுக்கும் பெரியவர்கள் சம்மதத்துடன் கடந்த 1995 ஆம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கதீஜா, ரஜீமா என்ற இரு மகள்களும் அமீன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

இவர்களுக்கு திருமணமாகி 29 ஆண்டுகள் ஆன நிலையில் இருவரும் அன்னியோன்னியமான தம்பதியாகவே உலா வந்தனர். எந்த பேட்டியாக இருந்தாலும் வெட்கத்துடன் தங்கள் காதலை வெளிப்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில்தான் சாயிரா பானு, கணவர் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக அறிவித்தார். இருவருக்கும் இடையே நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளதால் இந்த விவாகரத்து முடிவை எடுத்திருப்பதாகவும் ஏ.ஆர்.ரகுமானுடனான தனது திருமண பந்தத்தை முறித்து கொள்வதாகவும் சாயிரா பானு அறிவித்திருந்தார்.
சாயிரா பானுவின் இந்த முடிவை ஏ.ஆர்.ரகுமானும் உறுதி செய்தார். அவர் தனது பதிவில், 30ஆவது திருமண ஆண்டை எட்டுவோம் என நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் சந்தர்ப்பங்களும் சூழல்களும் அதை காண முடியாத நிலையில் உள்ளது. நொறுங்கிய எங்களின் இதயத்தின் சுமையை சுமக்க கடவுளின் சிம்மாசனம் கூட நடுங்கலாம்.
பிரிவுக்கான அர்த்தத்தை கண்டறிந்து உடைந்த இதய துண்டுகளை ஒட்ட வைக்க நினைத்த போது அதற்கான பொருத்தமான இடம் இல்லை. எங்கள் மீது அன்பு காட்டி எங்கள் தனியுரிமையை மதிக்கும் நண்பர்களுக்கு நன்றி என தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவத்தால் ரசிகர்கள் கலங்கியுள்ளனர். இந்த விவாகரத்து குறித்து பலர் பல விதமாக பேசி வந்தனர். இந்த நிலையில் மனைவியுடனான விவாகரத்து குறித்து தன் மீது அவதூறு பரப்புவதாகவும் சில யூடியூப் சேனல்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவதாகவும், சிலர் கற்பனையில் பேட்டி அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள ஏ.ஆர். ரகுமான், அந்த வீடியோக்கள், கட்டுரைகளை 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும்.
இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாயிரா பானு, விவாகரத்து முடிவு குறித்து ஆடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார். அதில் "நான் சாயிரா ரகுமான் பேசுகிறேன். நான் தற்போது மும்பையில் இருக்கிறேன்.
எனக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் உள்ளது. இதனால்தான் நான் ஏ.ஆர்.ரகுமானை பிரிய முடிவு செய்தேன். அவர் மீது அவதூறு பரப்ப வேண்டாம் என அனைத்து யூடியூப் சேனல்களையும் தமிழ் மீடியாக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
அவர் அற்புதமான மனிதர். உலகிலேயே சிறந்த மனிதர். அவரை போல் ஒருவரை யாரும் பார்க்க முடியாது. எனது உடல்நல பிரச்சினைகளுக்காக நான் சென்னையை விட்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனக்கு நன்றாக தெரியும், நான் சென்னையில் இல்லாவிட்டால் எல்லாரும் சாயிரா எங்கே என கேட்பார்கள்.
இதனால் தேவையில்லாத அனுமானங்கள் எழும். பிசியாக இருக்கும் அவரையும் என் குழந்தைகளையும் நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அதனால்தான் இந்த பிரிவு! அவர் மீது நான் வைத்துள்ள நம்பிக்கை என் வாழ்வைவிட பெரியது. அந்தளவுக்கு நான் அவரை நேசிக்கிறேன். சிகிச்சை முடிந்ததும் நான் சென்னை திரும்புவேன். அவரது பெயருக்கு தயவு செய்து யாரும் களங்கம் ஏற்படுத்தாதீர்கள். அவர் சிறந்த மனிதர். நன்றி என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications