இப்படியா கொடி கம்பம் நடுவாங்க.. முதல்வர் ஸ்டாலினுக்கு அறப்போர் இயக்க நிர்வாகி காட்டமான கேள்வி!
சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்தையும் கூறிவிட்டு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன்.
இன்று முதல்வர் ஸ்டாலினின் 69 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. நேற்றைய தினம் சுயசரிதையை வெளியிட்ட நிலையில் இன்று பிறந்தநாள் விழா களைகட்டுகிறது.
திமுகவினர் பெரிய பெரிய கேக்குகளை வெட்டி ஸ்டாலினின் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள். ஆங்காங்கே பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள்.

ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்கள். அது போல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல் முருகன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்
முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, மகன் உதயநிதி, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் உள்ளிட்டோருடன் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடினார். இந்த நிலையில் அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் ஒரு ட்வீட்டில் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் கூறி பெரும் விவாதத்தில் சிக்கியுள்ளார்.

புகைப்படம்
இதுகுறித்து அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என கூறிவிட்டு டிடிகே ரோடு சாலையில் நடப்பட்ட கொடியை புகைப்படம் எடுத்து போட்டு இதனால் பொதுமக்களுக்கு ஆபத்து என கூறி புகைப்படத்துடன் போட்டிருந்தார். ஜெயராம் வெங்கடேசன் வாழ்த்தையும் கூறிவிட்டு கொடி கம்பம் நட்ட போட்டோவை போட்டுள்ளது திமுகவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக அக்கறை இருக்க வேண்டியதுதான், தவறை சுட்டிக் காட்டுவதில் தவறில்லை. ஆனால் வாழ்த்தையும் தவறையும் ஒரே நேரத்தில் போடுவது எந்த மாதிரியான நாகரிகம் என கேட்டு சமூகவலைதளங்களில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

புதுக்கோட்டை எம்எல்ஏ விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை எம்எல்ஏ விஜயபாஸ்கரும் மிகப் பெரிய கட் அவுட் வைத்திருக்கார். அதை கண்டிக்காதது ஏன் என ஜெயராமிடம் கேள்விகள் எழுகின்றன. அதற்கு அவரோ , அதுவும் தவறுதான் , உள்துறை அமைச்சராக உள்ள முதல்வர் அது குறித்து நடவடிக்கை எடுப்பது அவர் கடமைதான் என கூறியிருக்கிறார். அறப்போர் இயக்கம் தொடர்ந்து அரசியல்வாதிகள் செய்யும் ஊழலை தோலுரித்து காட்டி வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டதற்கு இவர்களது ரெய்டும் ஒரு காரணம். சமூக பொறுப்புணர்வுடன் தவறை நாகரிகமாக சுட்டி காட்டியிருக்கலாம் என்பதுதான் பொதுவான கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications