விஜய்யை மேடையில் வைத்துக்கொண்டே திமுக அரசை பாராட்டிப் பேசிய ஆற்காடு நவாப்.. தவெகவினர் ஷாக்!
சென்னை: தவெக தலைவர் விஜய் திமுகவை சரமாரியாக விமர்சித்து வரும் நிலையில், தவெக மேடையில் அதுவும் விஜய் முன்பு ஆற்காடு நவாப் முகமது அலி தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என திமுக அரசை பாராட்டுவது போல பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தவெக சார்பில் இன்று கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய், அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில், க்யூ ஆர் கோடுடன் அனுமதி சீட்டு வைத்திருக்கும் தொண்டர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

இந்த விழாவில் கலந்துகொண்ட பாதிரியார்களுக்கு தவெக தலைவர் விஜய் சால்வை அணிவித்து கெளரவித்தார். மேடையில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டிருந்த நிலையில், பாதிரியார்கள் தலைமையில் கிறிஸ்துவ முறைப்படி பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் சிறப்புரை நிகழ்த்தினர்.
ஆற்காடு நவாப் முகமது அலி பேசும்போது, "நம்முடைய மாநிலம் தமிழ்நாடு ஒற்றுமைக்கு சிறந்த உதாரணமாக திகழ்ந்து வருகிறது. இங்கு இந்து, கிறிஸ்தவம், முஸ்லீம் என்ற வேறுபாடு கிடையாது. தமிழ்நாடு மதங்களை விட மனிதநேயத்துக்கு தான் மரியாதை கொடுக்கும். தமிழ்நாடு குழந்தைகள், பெண்களுக்கு மிகுந்த பாதுகாப்பான மாநிலமாக திகழ்கிறது. இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது'' என்று தெரிவித்தார்.
தமிழகம் அமைதி மாநிலமாக இருந்து வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம். பொருளாதாரத்தில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளன என்றும் திமுக அரசுக்கு ஆதரவான கருத்துகளை முன்வைத்தார். தவெக தலைவர் விஜய் திமுக அரசை மிக கடுமையாக எதிர்த்து வருகிறார். ஈரோட்டில் அண்மையில் பேசிய விஜய், தமிழகத்தில் பெண்களுக்கு, மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து உள்ளதாக கடுமையாக குற்றம்சாட்டி இருந்தார்.
விஜய் முன்பு ஆற்காடு நவாப் முகமது அலி திமுக அரசை பாராட்டுவது போல பேசியது சலசப்பை ஏற்படுத்தியது. மேடையில் இருந்த விஜய், ஆற்காடு நவாப் முகமது அலி பேசியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். தவெக மேடைகளில் விஜய் திமுகவை கடுமையாக அட்டாக் செய்து வரும் நிலையில், ஆற்காடு நவாப் பேச்சு விஜய்யை மட்டுமில்லாது விழாவில் கலந்துகொண்ட அனைவரையும் ஷாக் ஆக்கியது.












Click it and Unblock the Notifications