5 முறை மிஸ்ஸான ஸ்கெட்ச்! 6வது முயற்சி.. ஆம்ஸ்ட்ராங் கொலை! ’அந்த’ நாள்..காத்திருந்து கதை முடித்த பாலு
சென்னை: ஆம்ஸ்ராங்க் கொலை வழக்கில் போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆற்காடு சுரேஷ் கொலை நடந்த நாளிலிருந்து ஆம்ஸ்ட்ராங்குக்கு பாலு தரப்பு குறிவைத்து வந்ததாகவும், 5 முறை கொலை முயற்சி தோல்வி அடைந்த நிலையில் 6ஆவது முயற்சியில் கொலை திட்டத்தை வெற்றிகரமாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு தரப்பு நிறைவேற்றியதாகவும் கூறப்படுகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதை அடுத்து அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டது. இதனால் அங்கு வழக்கறிஞர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கூடியதால் பரபரப்பான சூழல் நிலவியது.
மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தை கண்டித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டன அறிக்கைகள் வெளியிட்டனர். இது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கொலையாளிகளாக சரணடைந்தவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி சிறையில் அடைத்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்படுகிறது.
சரணடைந்த பொன்னை பாலு சுரேஷின் சகோதரர் என்பது தெரிய வந்திருக்கும் நிலையில் ஆற்காடு சுரேஷின் நினைவு நாள் அல்லது பிறந்த நாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல திட்டமிட்டதாகவும் தற்போது பிறந்த நாளிலேயே அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைதாகியுள்ள நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் உடற் கூறு ஆய்வுக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது உடல் அவரது சொந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் ஆற்காடு சுரேஷ் கொலை நடந்த நாளிலிருந்து ஆம்ஸ்ட்ராங்குக்கு பாலு தரப்பு குறிவைத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் விசாரித்த போது பல தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டதற்கு பின்னணியில் ஆம்ஸ்ட்ராங் தான் இருப்பதாக பாலு தரப்பு கருதியுள்ளது. அதே நேரத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. அரசியல் செல்வாக்கு மிகுந்த நபராக ஆம்ஸ்ட்ராங் இருப்பதால் அவரை நெருங்குவது கடினம் என உணர்ந்து பல நாட்களாக திட்டம் தீட்டி இருக்கின்றனர்.
மேலும் ஆம்ஸ்ட்ராங் எப்போதும் உயர் ரக துப்பாக்கியை தனுடன் வைத்திருப்பார் என்பதால் அவரை கொல்வதில் சிக்கல் இருந்திருக்கிறது. அது மட்டும் அல்லாமல் சுத்தி எப்போதும் அவரது ஆதரவாளர்கள் குழுவாக இருப்பார்கள் என்பதால் திட்டமிட்டு யாரும் இல்லாதபோது கொலையை அரங்கேற்ற பாலு தரப்பு திட்டமிட்டு இருக்கிறது. மேலும் கொலையின் போது தற்போது கைது செய்யப்பட்டு இருக்கும் சுரேஷ் உள்ளிட்ட மூவரை ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்யப் போகிறோம் என அழைத்தால் அவர்கள் வரமாட்டார்கள் என்பதால் ஒரு சிறிய பிரச்சனை வாருங்கள் பேசலாம் என அழைத்து கொலையை அரங்கேற்றியுள்ளனர்.
மேலும் கடந்த ஓராண்டில் சுமார் ஐந்து முறை ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டம் தீட்டிய போதும் அது கைகூடாமல் போனது. இதற்கிடையே பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் புதிதாக கட்டி வரும் வீட்டின் பணிகளை மாலை வேளையில் பார்வையிடுவது வழக்கம். அப்போது ஆதரவாளர்கள் அதிகம் இருக்க மாட்டார்கள் அவரது துப்பாக்கியும் இருக்காது என கருதியே கொலையை அரங்கேற்று இருக்கின்றனர்.
அதே நேரத்தில் ஆம்ஸ்ட்ராங் துப்பாக்கியை எப்போதும் தனது இடுப்பில் வைத்திருப்பார் எனக் கூறப்படும் நிலையில் அவருடன் இருந்த யாரோ தான் அவரிடம் துப்பாக்கி இல்லை என்பதை தெரிவித்திருக்கின்றனர் என சந்தேகிக்கப்படுகிறது. குற்றம் நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் சிக்கி இருக்கும் நிலையில் போலீசாரின் அடுத்தடுத்த விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications