நெல்லிக்கனி சிதறுது.. வந்துட்டாரு டிடிவி தினகரன்.. பாஜக அப்படியில்லை.. டக்குனு கவனித்த திமுக, அதிமுக
சென்னை: எடப்பாடி பழனிசாமி தன்னை "தலைவர்" என போட்டுக்கொண்டால் அவர் தலைவராகிவிட முடியுமா? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
திமுகவை விமர்சிப்பதைவிட, அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருபவர் டிடிவி தினகரன்.. ஒருவேளை பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்க நேரிடுமோ? என்ற சந்தேகம் 2 மாதத்துக்கு முன்புவரை நிலவியது. அந்த நேரத்தில் மட்டும், அதிமுகவை அவ்வளவாக தினகரன் விமர்சிக்கவில்லை என்றே தெரிகிறது.

ஆனால், எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று உறுதியானதையடுத்து, கடும் குற்றச்சாட்டுகளை அதிமுக மீது முன்வைக்க துவங்கினார் தினகரன்.. அதிலும் எடப்பாடி பழனிசாமி என்றால், கூடுதல் காட்டம் அவரது விமர்சனங்களில் தென்படுவது இயல்பாகிவிட்டது. இதோ இப்போது தேர்தல் முடிந்தநிலையிலும், எடப்பாடி மீது லிஸ்ட் போட்டு புகாரை சொல்லி உள்ளார் தினகரன்.
தினகரன் பேட்டி: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் டிடிவி தினகரன், சுவாமி தரிசனம் செய்தார்.. சூரசம்கார மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தார். பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது:
"கட்சியை அபகரித்து வைத்திருப்பவர்கள் தலைவராக முடியுமா? எடப்பாடி பழனிசாமி தன்னை "தலைவர்" என போட்டுக்கொண்டால் தலைவராக முடியாது.. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கம் இன்று பலவீனமாகி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான சிலரின் சுயநலத்தினால், பதவி வெறியால் துரோக புத்தியால் அதிமுக வியாபார நிறுவனமாக செயல்படுகிறது.
தமிழகம்: பழனிசாமியின் 4 வருட கால ஆட்சி மீதான கோபத்தின் காரணமாகவும், திமுக திருந்தியிருக்கும் என்றும்தான் மக்கள் திமுகவுக்கு வாக்களித்தார்கள். ஆனால் திமுக 90 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவேயில்லை.. தமிழகம் முழுவதும் போதைப்பொருள் வியாபாரம் ஆளும் கட்சியினரின் உதவியுடன் நடந்து கொண்டிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமியும், திமுகவும் கள்ள உறவு வைத்துக்கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றிடக்கூடாது என்று வேலை பார்த்தார்கள்.. வாக்குகளை பிரிப்பதற்காக இரட்டை இலை சின்னத்தை திமுகவுக்கு உதவி செய்வதற்காக பயன்படுத்தினார்கள்.. திமுகவுக்கு எதிராகவும், துரோகத்திற்கு எதிராகவும் உருவாக்கப்பட்ட இயக்கம் இன்று துரோகம் செய்வதற்காகவே ஒரு கும்பலால் பயன்படுத்தப்படுகிறது.
வாக்கு சதவீதம்: அதிமுக அழிக்க நினைக்கும் கட்சி பாஜக கிடையாது.. தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் உறுதியாக வெற்றிபெறும். வாக்கு சதவீதமும் அதிகமாக இருக்கும். பாராளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் 3-ம் இடத்திற்கு தள்ளப்படும்" என்றார்.
"பாஜகவும், அதிமுகவும் நிஜமாகவே கூட்டணியைவிட்டு பிரியவில்லை.. வெறும் வாக்கு அரசியலுக்காக, கூட்டணியைவிட்டு பிரிந்திருப்பது போல நடிக்கிறார்கள், அவர்களுக்குள் கள்ள உறவு இன்னமும் இருக்கவே செய்கிறது" என்று திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் விமர்சித்து கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில், அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடைய கள்ள உறவு இருப்பதாக தினகரன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
குழப்பம்: அதைவிட முக்கியமாக, "திமுக - பாஜகவுக்கும் இடையே திரைமறைவில் தொடர்பு இருக்கிறது" என்று சீமான் ஒருபக்கம் சொல்லி கொண்டிருக்கிறார்.. ஆக மொத்தம், யாருடன் யார் தொடர்பில் இருக்கிறார்கள் என்று தெரியாமல், தமிழக மக்களே மண்டை குழம்பிப்போய் கிடக்கிறார்கள்...!!!












Click it and Unblock the Notifications