இதென்ன லிஸ்ட்லயே இல்லையே.. "அங்கிருந்தும்" ஆட்களை தூக்கும் திமுக.. ஸ்டாலினுக்கு இந்த விஷயம் தெரியுமா
தேமுதிக நிர்வாகிகள் சிலர் திமுக பக்கம் தாவி போவதாக கூறப்படுகிறது
சென்னை: சத்தமில்லாமல் ஒரு சம்பவம் திமுகவுக்குள் நடந்து வருகிறது.. நகர்ப்புற தேர்தலில் பதவிகளை பிடிக்க, அனைத்து வியூகங்களையும் திமுகவினர் களத்தில் இறக்கி வருகிறார்கள்..!
கடந்த அதிமுக ஆட்சியில் திமுகவை அதிகமாக விமர்சித்தது தேமுதிகதான்.. அதிலும் பிரேமலதா விஜயகாந்த்தும், அவரது மகன் விஜயபிரபாகரனும்தான்.
இதற்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.. திமுக பதவியேற்பு விழாவுக்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தனர்.. இதில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை..

விஜயகாந்த்
அவருக்கு உடம்பு சரியில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.. அதனால், பதவியேற்பு விழாவுக்கு அவரால் செல்ல முடியாததால், ஸ்டாலின் வீட்டுக்கு சுதீஷூம், விஜய பிரபாகரனும் சென்றிருந்தனர்.. அவர்களை உபசரித்து அன்பாக பேசினார் ஸ்டாலின்.. இந்த சமயத்தில்தான், விஜயகாந்த்துக்கு மறுபடியும் உடம்பு சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.. இதையறிந்த ஸ்டாலின், போன் செய்து விஜயகாந்த் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்..

நண்பர் ஸ்டாலின்
ஆஸ்பத்திரிக்கு போன் செய்து, என் நண்பருக்கு இப்போ உடல்நலம் எப்படி இருக்கு என்று டாக்டர்களிடம் விசாரித்து, உயர்தர சிகிச்சை தருமாறும் உத்தரவிட்டிருந்தார். திமுக ஆட்சியமைத்த அடுத்த சில நாட்களிலேயே மக்களிடம் நன்மதிப்பு பெருக ஆரம்பித்தது.. 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலிலும் தேமுதிக தோல்வி அடைந்துவிட்ட நிலையில், பலர் அக்கட்சியில் இருந்து வெளியேற முடிவு செய்தனர்..

ஸ்டாலின் உத்தரவு
அதில், பெரும்பாலானோர், திமுக பக்கமும் சாய தயாரானார்கள்.. அந்தந்த திமுக மாவட்ட செயலாளர்களிடம் தங்களுடைய விருப்பத்தையும் சொன்னார்கள்.. இந்த விஷயம் ஸ்டாலினுக்கு பறந்தது.. தேமுதிகவினரை கட்சிக்குள் சேர்த்து, விஜயகாந்த் மனம் நோகும்படி நடந்துக் கொள்ள வேண்டாம் என்று மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலினிடமிருந்து உத்தரவு போனதாக செய்திகள் கசிந்தன.

திமுக பலம்
கட்சியின் பலத்தை மேலும் பெருக்கி கொள்ள, எதிர்க்கட்சியில் இருந்து தங்கள் கட்சிக்கு ஆட்களை இழுக்கும் முயற்சியில் பல கட்சிகள் உள்ளடி வேலைகள் நடந்து வரும் நிலையில், எதிர்கொள்ள போகும் மற்ற தேர்தலையும் பொருட்படுத்தாமல், நண்பர் மனம் கலங்கக்கூடாது என்று ஸ்டாலின் போட்ட இந்த உத்தரவு, அனைவரையும் மலைக்க வைத்தது.. இப்போதும் அதே நட்பும், அன்பும் விஜயகாந்த் மீது முதல்வர் ஸ்டாலினுக்கு இருக்கவே செய்கிறது..

தேர்தல் தோல்வி
என்றாலும் அரசியல் களம் ஒரே மாதிரி இருப்பதில்லை.. திமுக தரப்பே அமைதி காத்தாலும், தேமுதிக தரப்பு நிர்வாகிகளை ஒரு அளவுக்கு மேல் கட்டுப்படுத்த முடியவில்லை.. அவர்களாகவே மாற்று கட்சிகளை தேடி கொண்டு போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் ஆள் அட்ரஸ் இல்லாமல் போயுள்ளது தேமுதிக.. எனினும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சொந்த பலத்தால் வெற்றி பெற்ற, தேமுதிகவினர் திமுக பக்கம் தாவ போவதாக கூறப்படுகிறது.. அதாவது, இந்த தேமுதிகவினரை ஆளும் தரப்பினர் வளைத்துள்ளது, அக்கட்சி தலைமையை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

சரிவில் தேமுதிக
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 12 நகராட்சி கவுன்சிலர், 23 பேரூராட்சி கவுன்சிலர் என்று குறைந்த வெற்றியைத்தான் தேமுதிக பெற்றது.. இத்தனை வருட காலமும் தொடர்ந்து சரிவை கண்ட அக்கட்சிக்கு, இந்த வெற்றி ஓரளவு ஆறுதலை தந்தது.. அதனால்தான், வெற்றி பெற்றவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் அழைத்து, சமீபத்தில் விஜயகாந்த் வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தார்.. கவுன்சிலர்கள் இன்று பதவியேற்று, நாளை தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடக்க உள்ள நிலையில், திமுகவுக்குள் குடுமிப்பபிடி சண்டை ஏற்பட்டுள்ளது..

ஸ்டாலினுக்கு தெரியுமா?
அதிலும் சில குறிப்பிட்ட இடங்களில் பதவி போட்டி நடந்து வரும் நிலையில், அங்கெல்லாம்தான் தேமுதிகவின் தயவும் திமுகவுக்கு தேவையானதாக இருக்கிறது.. அதனால்தான், தேமுதிக தரப்பில் உள்ள சிலரை இழுக்க திமுக தரப்பில் முயற்சி நடக்கிறதாம்.. ஆனால் வெற்றி பெற்ற தேமுதிகவினர் இதற்கு இடம் தருவார்களா, அல்லது தங்கள் கேப்டன்தான் முக்கியம் என்று வாய்ப்பை மறுத்துவிடுவார்களா என்று தெரியவில்லை.. ஒருவேளை இந்த தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில் அது விஜயகாந்த்துக்கு மட்டுமல்ல, அவரது நண்பரான முதல்வர் ஸ்டாலினுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கும் என்பதை மறுக்க முடியாது..!












Click it and Unblock the Notifications