ரேஷன் கார்டில் குடும்ப தலைவராக "ஆண்" பெயர் இருந்தால்.. மாதம் ரூ.1000 திட்டத்தில் பணம் கிடைக்குமா
சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை திட்டத்தில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த குடும்பத்திற்கு உரிமை தொகை கிடைக்குமா என்பது குறித்த தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும் என்று திமுக கடந்த சட்டசபைத் தேர்தல் சமயத்தில் அறிவித்திருந்தது. இதற்குப் பொதுமக்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

திமுக ஆட்சி அமைந்தது முதலே இத்திட்டம் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பலரும் இத்திட்டம் குறித்து தொடர்ச்சியாக எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி வந்தனர்.
உரிமை தொகை: கடந்த பட்ஜெட் அறிவிப்பில் இது குறித்த அறிவிப்பு வெளியானது. அதாவது வரும் செப். 15ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் தொடங்கப்படும் என்று அப்போதைய நிதியமைச்சர் அறிவித்திருந்தார். இதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து குடும்பத் தலைவிகளுக்கான இந்த உரிமை தொகை குறித்துப் பல அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வந்தது.
இந்தச் சூழலில் இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் மாவட்ட கலெக்டர்கள் உடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்தத் திட்டத்திற்குக் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், இதற்காக 7000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார்.
குடும்பத் தலைவி: இந்தத் திட்டம் குறித்த அறிவிப்பு வந்தபோதே ஒரு விஷயம் குறித்து அனைவருக்கும் சந்தேகம் இருந்தது. அதாவது இதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. பெரும்பாலான ரேஷன் கார்டுகளில் குடும்பத் தலைவர் என்று கணவரின் பெயரே இருக்கும் இதனால், அந்த குடும்பங்களுக்கு உரிமை தொகை கிடைக்காது எனப் பலரும் நினைத்தனர். இதனால் பலரும் குடும்பத் தலைவர் என்ற இடத்தில் கணவரின் பெயருக்குப் பதிலாக மனைவியின் பெயரை மாற்றினர்.
இருப்பினும், அப்போதே இத்திட்டத்தில் பயன் பெற குடும்பத் தலைவர் என்ற இடத்தில் பெண்கள் பெயர் தான் இருக்க வேண்டும் என்பதில் கட்டாயம் இல்லை என்று அமைச்சர் தெளிவுபடுத்தியிருந்தார். இதற்கிடையே இது தொடர்பாக இன்று தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில் குடும்பத் தலைவர் என்ற இடத்தில் யாருடைய பெயர் இருக்க வேண்டும்.. யார் இதற்குத் தகுதி பெறுவர் என்பது குறித்துப் பல கருத்துகள் இடம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு அரசு விளக்கம்: இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவர். ஒவ்வொரு தகுதி வாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத்தலைவி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்.
குடும்ப அட்டையில் குடும்பத்தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார். குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்தக் குடும்பத் தலைவரின் மனைவி குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார்.
திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள், தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவர். ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், இத்திட்டத்தின்கீழ் பயன்பெற ஒரு நபரைக் குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம்












Click it and Unblock the Notifications