பொதுத்துறை வங்கிகள் பாதுகாப்பானதா? வங்கிகளின் நெருக்கடி நிலை.. மக்கள் அறிய வேண்டிய உண்மை!
சென்னை: லட்சுமி விலாஸ் வங்கிக்கு ஏற்பட்ட நிலை நாளைக்கு எந்த தனியார் வங்கிக்கும் ஏற்படும் அபாயம் உள்ளது. வங்கிகளில் என்னதான் நடக்கிறது? பொதுத்துறை வங்கிகளில் போடும் பணம் பாதுகாப்பானதா? சேவை கட்டணம் போட்டு வாடிக்கையாளர்களை அடிக்கடி அல்லாட விடும் வங்கிகள். ஏன் நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன என்பதை இப்போது பார்ப்போம்.
வங்கிகள் சிக்கலில் சிக்கி தவிக்க என்ன காரணம் என்றால், ஒரே பதிலில் சொல்லிவிடலாம். அது வாராக்கடன் பிரச்சனை தான். ஒரு வங்கியில் வாங்கப்பட்ட ஒரு கடன் 90 நாட்களுக்கு மேல் எந்த வருவாயையும் ஈட்டவில்லை எனில் அது வாராக்கடன் என்று அழைக்கப்படும்.
பொதுத்துறை வங்கிகள் ஆகட்டும் மற்றும் தனியார் வங்கிகள் ஆகட்டும், பெரும்பாலும் அவர்கள் கடன் கொடுத்து ஏமாந்து இருப்பது பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்குத்தான். நம்முடைய 100 ரூபாயில் 25 ரூபாய் இதுவரை வாராக்கடன் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.
கார்ப்பரேட்டுகள் வாங்கியவை
அதில் 84 சதவீத வாராக்கடன் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுத்து திருப்பி வராமல் போனவை ஆகும். அதேநேரம் 10லட்சம் ரூபாய்க்கு கீழ் கொடுத்த கடன்களில் ஒரு சதவீதம் அளவிற்கே திரும்பி வரவில்லை என்று கூறப்படுகிறது.
கடன் தள்ளிவைப்பு
2014 முதல் 2019 வரை கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தமாக இந்திய வங்கிகள் ரூ 6.35 லட்சம் கோடி மதிப்புள்ளவற்றை வாராக் கடன்களாக அறிவித்துள்ளன. வங்கிகள் தங்கள் நிதி அறிக்கைகளை மேம்படுத்துவதற்காகவும், வரிச் சுமைகளை குறைப்பதற்காகவும் வாராக் கடன்களை தமது கணக்கிலிருந்து ஒரு கட்டத்தில் நீக்குகின்றன. இதை கடன் தள்ளிவைப்பு என்று அழைப்பார்கள். பின்னர், அந்தக் கடன்களிலிருந்து ஏதேனும் தொகை வசூலிக்கப்பட்டால், அத்தொகை இலாபமாக சேர்க்கப்படும். பாரத ஸ்டேட் வங்கி மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும 1.79 லட்சம் கோடியை (writes off) கடன் தள்ளிவைப்பு செய்துள்ளது. ரிசர்வ் வங்கி வழங்கிய தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களில் கிட்டத்தட்ட 90% கடன்கள் இதுவரை வசூலிக்கப்பட்டதாக தகவல் இல்லை.
அனில் அம்பானி
விஜய் மல்லையா, நீரவ் மோடி, அனில் அம்பானி, காபி டே சித்தார்த்தா உள்ளிட்ட பல பெரும் கார்ப்பரேட்டுகள் வாங்கி கடன்களை கட்டாமல் விட்டதால் வந்த வினை தான வாராக்கடன் பிரச்சனைக்கு காரணம். விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டார். நீரவ் மோடியும் லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டார்.காபி டே சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டார். அனில் அம்பானி ஒவ்வொரு நீதிமன்றமாக சென்று திவால் நோட்டீஸ் கொடுத்து வருகிறார். இப்படி கார்ப்பரேட் நிறுவனங்கள் கடனை கட்டாமல் விடுவது தான் வங்கிகளின் கடும் நிதி சிக்கலுக்கு காரணம்
என்ன செய்ய வேண்டும்
வங்கிகளில் வேண்டுமென்றே கடனை திரும்பி செலுத்தாமல் விடுவதை கிரிமினல் குற்றமாக கருதி கடும் நடவடிக்கை எடுத்து அவர்களிடம் இருந்து கடனை வசூலிக்க வேண்டும். இதேபோல் வங்கிகள் சொத்து அடமானம் இல்லாமல் கார்ப்பரேட் உள்ளிட்ட பெரும் நிறுவனங்களுக்கு கடன் தருவதை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும். வங்கிகளின் கடன் வாங்கிவிட்டு தப்பி ஓடும் கிரிமினல்களை ஒடுக்க வேண்டும். கடன் வழங்குவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். அப்படி செய்தால் தான் வங்கித்துறை மீளும்.
நீண்டகால தீர்வு ஆகாது
இதேநேரம் பொதுத்துறை வங்கிகளை குறைப்பது, நஷ்டமடைந்த வங்கிகளை லாபம் அடைந்த வங்கியுடன் இணைப்பது போன்ற நடவடிக்கைகள் அப்போதைக்கு உடனடி ஆறுதல் தான் தரும். மாறாக நீண்ட கால அடிப்படையில் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. தற்போதைய நிலையில் பொதுத்துறை வங்கிகளில் பணம் போடுவது பாதுகாப்பானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் பொதுத்துறை வங்கிகளை அரசால் திவாலாக்க முடியாது. அவற்றை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும். அதை பலமுறை அரசும் செய்துள்ளது.