ஓட்டம் பிடிக்கும் "புள்ளிகள்".. என்ன நடக்கிறது கமல்ஹாசன் கட்சியில்.. கரைகிறதா மய்யம்..?
கமல் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல் என்கிறார்கள்
சென்னை: கட்சி தலைமையுடன் இணக்கமான போக்கு இல்லாததால், மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் ஓட்டம் பிடிக்கத் துவங்கியுள்ளனர்.
திமுக, அதிமுகவுக்கு மாற்று தாங்கள்தான் என்பது உட்பட பல்வேறு கனவுகளுடன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கினார் கமல்ஹாசன்.
ஆரம்பத்தில் மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.. அதனால்தான், 2019-ல் எம்பி தேர்தலில், கிட்டத்தட்ட 3.7 வாக்கு சதவீதம் பெற்று ஆச்சரியத்தை கிளப்பியது.

சட்டசபை
அதே உற்சாகத்துடன்சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட நிலையில், அக்கட்சி மண்ணை கவ்வியது.. சரத்குமார், பச்சமுத்துவுடன் கைகோர்த்து போட்டியிட்டும், கட்சி தலைவர் கமலும் அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.. வெறும் 2.5 விழுக்காடு மட்டுமே வாக்குப் பெற்றது.இதனால், கமலுடன் இருந்த 2கட்ட தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பிரச்சனையை கிளப்பி, அதிருப்திகளை வெளிப்படுத்தினர்..

சர்வாதிகார போக்கு
கமல் சர்வாதிகார போக்குடன் நடந்துகொள்வதாக சொல்லி பிரதான புள்ளிகள் முக்கிய பொறுப்புகளில் இருந்து கட்சியை விட்டு வெளியேறினர். இன்றுவரை இந்த விலகல் நீடித்து கொண்டுதான் இருக்கிறது.. சமீபத்தில்கூட தொல்காப்பியன், மாநில துணைச் செயலாளர், சுரேஷ் பாபு மாநில இணை செயலாளர் உள்ளிட்டோர் கட்சியை விட்டு விலகினார்கள்...

ராஜினாமா?
இப்போதும், காஞ்சிபுரம் தெற்கு மத்தி மாவட்ட செயலர் மயில்வாகனன், விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலர் பாஸ்கரன், திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலர் சந்தானகுமார் மற்றும் பழநியை சேர்ந்த மாவட்ட செயலர் விஜய்கண்ணன்ஆகியோர் பொறுப்பிலிருந்து விலகுவதாக, தலைமைக்கு கடிதம் கொடுத்துள்ளனர். அதை ஏற்று 4 பேரையும் பொறுப்பில் இருந்து, மாநில செயலர் சிவஇளங்கோ விலக்கி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விலகல்கள்
இந்த தொடர் விலகல்களுக்கு என்ன காரணம் என்று உறுதியாக தெரியவில்லை.. ஆனால், கட்சியின் உண்மை நிலவரத்தை கமலுக்கு, மய்யத்தின் நிர்வாகிகள் பலர் தெரிவிப்பதில்லையாம்.. கமலுக்கு தெரியாமல் பல்வேறு சட்ட விரோத செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அதிருப்தியாளர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனராம்..புலம்புகிறார்களாம்.

ஒற்றை மனிதன்
கமல் என்ற ஒற்றை மனிதனை பயன்படுத்தி கொண்டு, சொந்த ஆதாயம் தேடியே பலர் பொறுப்புக்கு வருவதாகவும், உண்மையான தொண்டர்களை கமலிடமிருந்து சில நிர்வாகிகள் பிரித்து வைத்துவிடுவதாகவும் கூறப்படுகிறது.. அதாவது கமலை சந்திக்கவிடாமல், மேல்மட்ட நிர்வாகிகள் தடையாக இருக்கிறார்களாம்.. இதுபோன்ற காரணங்களினால், பலரும் கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக தலைமைக்கு கடிதம் அனுப்பி வருகின்றனர்... சிலர் கட்சியை விட்டும் விலகி வருகின்றார்கள் என்றும் சலசலக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications