ஸ்டாலினின் மாஸ்டர் பிளான்.. திமுகவின் பலமான அஸ்திவாரம் சாய்கிறதா.. சபாஷ் உதயநிதி
சென்னை: விரைவில் திமுகவில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. என்ன காரணம்?
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, சில மாவட்டங்களில் திமுகவில் கோஷ்டி பூசல்கள் தலைதூக்கியிருந்தன.. தேர்தல் நெருங்கும் நேரத்தில், ஒருங்கிணைந்து யாரும் செயல்படாமல், சில நிர்வாகிகள் மனக்கசப்புடன் இருப்பதாக தலைமைக்கு புகார்கள் சென்றவண்ணம் இருந்தன. இதைடுத்து, முதல்வர் ஸ்டாலின் தரப்பு, நேரடியாகவே இந்த விஷயத்தில் தலையிட்டிருந்தது..

அறிவாலயம்: அதன்படி, எந்த மாவட்டங்களில் நிறைய பிரச்சனைகள் உள்ளதோ, அங்கெல்லாம் சம்பந்தப்பட்டவர்களை நேரடியாகவே அறிவாலயத்துக்கு வரவழைத்து, அறிவுரை சொல்லியதுடன், நிர்வாகிகளிடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியையும் திமுக மேலிடம் மேற்கொண்டிருந்தது.. இப்போது தேர்தல் முடிந்தபிறகும், உட்பூசல்கள் இன்னமும் சில மாவட்டங்களில் வெடித்து வருகிறதாம். எனவே, இந்த விஷயத்திற்கு தீர்வு காண திமுக மேலிடம் முக்கிய முடிவுகளை எடுக்க போவதாக கூறுகிறார்கள்..
அதாவது, 2 தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற நடைமுறையை, மொத்த தொகுதிகளிலும் கொண்டுவரவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.. எங்கெல்லாம் ஒருங்கிணைப்பு இல்லையோ, அந்த மாவட்டங்களில் 2 சட்டசபை தொகுதிக்கெற்ப மாவட்டங்களை பிரிக்கவும் யோசித்து வருவதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் கசிந்து வந்தன. இந்நிலையில், இன்னொரு முக்கிய தகவல் வெளியாகியிருக்கிறது.
முக்கியத்துவம்: அதாவது, இளைஞரணி மாவட்ட செயலாளர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திமுகவில் நிர்வாக ரீதியாக மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.
காரணம், திமுகவைப் பொறுத்தவரை, 72 மாவட்டங்களில், அதிகபட்சம் 4 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியதாக இம்மாவட்டங்கள் உள்ளன.. இதில், பெரும்பாலும், மாவட்டங்களுக்கு அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என சீனியர்களே செயலாளர்களாக இருக்கிறார்கள்.. இவர்கள்தான், அந்தந்த மாவட்ட அளவில் நிர்வாகிகளை ஒருங்கிணைத்து, கட்சிப்பணி, தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
உதயநிதி: எனினும், விரைவில் உள்ளாட்சி தேர்தல், சட்டப்பேரவை தேர்தல் என அடுத்தடுத்து தேர்தல்கள் வரஉள்ளதால், அதற்கேற்ப கட்சியை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது.. அதுமட்டுமல்லாமல், இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அவரது ஆதரவாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும், திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாம்..
முதலில் நிர்வாக ரீதியிலான மாவட்டங்களை பிரித்து ஒரு மாவட்டத்துக்கு 2 அல்லது 3 சட்டப்பேரவை தொகுதிகள் இருக்குமாறு மாற்றி, அதற்கு பிறகு புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், அப்படி உருவாக்கப்படும் புதிய மாவட்டங்களில் இளைஞரணியில் சிறப்பாக செயல்படும் நிர்வாகிகளை நியமிக்கவும் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
பலே திமுக: 2026 சட்டசபை தேர்தலில், மெஜாரிட்டி வெற்றி பெறவேண்டுமானால், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், ஒன்றிய நகர, பேரூர் செயலாளர்களின் ஒருங்கிணைப்பு மிக மிக அவசியம் என்பதால், இளைஞர்களுக்கு வாய்ப்பு தரும்விதமாக, இப்படியொரு முடிவை திமுக மேலிடம் முன்னெடுக்க திட்டமிட்டு வருகிறதாம்.
அநேகமாக வரப்போகும் தேர்தல் ரிசல்ட்டை வைத்து, நிர்வாக ரீதியான மாற்றங்களை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு வருவதாக சொல்கிறார்கள். திமுகவின் இந்த அதிரடிகள், புதிய ரத்தம் பாய்ச்சுவதுடன், கட்சியின் கட்டமைப்பை மேலும் உறுதி கொள்ள செய்யும் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications