பாஜக பரபரப்பு.. முக்கியமானவர்களை "முடித்துவிடும்" பாஜக அண்ணாமலை.. என்ன நடக்கிறது தமிழக அரசியலில்?
சென்னை: தமிழக பாஜகவுக்குள் பூசல்களும், அதிருப்திகளும் வெடித்து கிளம்பியிருக்கின்றன.. குறிப்பாக மாநில தலைவர் அண்ணாமலை மீது, சொந்த கட்சி நிர்வாகிகளே குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது அரசியல் கட்சிகளின் கவனத்தை திருப்பி வருகின்றன.
மூத்த தலைவர் தமிழிசை சவுந்தராஜன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்து சொன்னால் அவர்களை மோசமாகப் பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும், நான் இங்கேதான் இருப்பேன்" என்று கூறியிருந்தார்.

தமிழிசையின் பேச்சுக்களுக்கு பிறகு, அண்ணாமலைக்கு எதிராக, அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கருத்துக்களையும் தெரிவிக்க துவங்கியிருக்கிறார்கள்.. இதில், பாஜகவின் சிந்தனையாளர் பிரிவின் பொறுப்பாளர் கல்யாணராமன் சில அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகள் முன்வைத்திருப்பது பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
அடுத்தடுத்த குற்றச்சாட்டு: கல்யாண ராமன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கூட்டணி குறித்து தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் எஸ்.பி.வேலுமணி இருவரும் குறிப்பிட்டுள்ள உண்மை சரியானது. ஆனால், அண்ணாமலை வழக்கம் போல் மத்திய தலைமையை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்.
2014 தேர்தலை விட இப்போது வாக்குகளை குறைவாக பாஜக பெற்றுள்ளது என்பது அப்பட்டமான உண்மை. 2014ல் பாஜக கூட்டணி 18.8% பெற்றது, தற்போது 18.2% ஆக குறைந்துள்ளது உள்ளது, அதுவும் 2014ல் 38 தொகுதிகளில்தான் பாஜக கூட்டணி போட்டியிட்டது.
வாக்கு சதவீதம்: 2014ல் பாஜக 5.56% வாக்குகளைப் பெற்றோம், இப்போது எங்களுக்கு 11.24% கிடைத்தது என்பது தவறான மற்றொரு அறிக்கை. அப்போது 9 இடங்களில் போட்டியிட்டதன் மூலம் 5.56% பெற்றோம். இப்போது 23 இடங்களில் போட்டியிட்டு 11.24% பெற்றுள்ளனர். விகித அடிப்படையில், 2014 செயல்திறனை சமன் செய்ய பாஜக இப்போது சுமார் 14.25% பெற்றிருக்க வேண்டும்.
பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் 2014ல் போட்டியிட்ட 9 இடங்களில் வெறும் 2 இடங்களில் மட்டுமே டெபாசிட் இழந்தோம். இப்போது போட்டியிட்ட 23ல் 11ல் டெபாசிட் இழந்துள்ளோம், இது மிகப்பெரும் இழப்பு. இன்னொரு உண்மை, கோவையில் அப்போது பாஜகவின் சிபிஆர் 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே தோற்றார். இப்போது அண்ணாமலை இதைவிட 3 மடங்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.
சொத்துக்கள்: இன்னொரு முக்கிய உண்மை. அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் சிபிஆருக்கு தேர்தலில் போட்டியிட பணம் இல்லை. சில சமயங்களில் கட்சியை வளர்ப்பதற்காக அவர்கள் தங்கள் சொத்துக்களை விற்றார்கள் என்பது எனக்குத் தெரியும். இப்போது அண்ணாமலையைப் பற்றி நமக்குத் தெரியும்.
தன்னிடம் கொஞ்சமும் தார்மீகம் உள்ள எந்த மனிதனும் இந்த தோல்விக்கு ராஜினாமா செய்வார் அல்லது குறைந்தபட்சம் ராஜினாமா செய்கிறேன் என்றாவது சொல்வார். ஆனால் அண்ணாமலைக்கு நேர்மை குறைவு என்பது எனக்குத் தெரியும்" என்று தெரிவித்திருக்கிறார்.
அண்ணாமலை: அவரது இன்னொரு பதிவில், "திருநெல்வேலி பாஜக தலைவர் தயாசங்கர் என்பவர் மாடுகளை இறைச்சிக் கூடத்திற்கு விற்பதற்கு எதிராகப் போராடியதற்காக கைது செய்யப்பட்டார். இதுகுறித்து சென்னை பாஜக அலுவலகத்தில் செய்தி வந்தபோது, அண்ணாமலைக்கு எதிரே நான் அமர்ந்திருந்தேன்.
அவர் ஒரு அதிர்ச்சியான கருத்தை கூறினார். "அந்த பையன் சில நாட்கள் சிறையில் வாடட்டும்; எல்லோரும் தானே தலைவர்களாக மாற முயல்கிறார்கள்" என்றார். அண்ணாமலையின் மலிவு மனப்பான்மையை பாருங்கள். இது போன்ற கதைகள் இன்னும் நிறைய சொல்லலாம். அண்ணாமலையின் முதிர்ச்சியின்மை, ஆணவம், சூழ்ச்சி ஆகியவற்றை வெளிக்காட்ட இது ஒன்றே போதும்" என்று தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு: கல்யாணராமனின் மற்றொரு பதிவில், "அண்ணாமலை டெல்லியில் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கியுள்ளார். அது அவரைப் பாதுகாக்கிறது. பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, சிபிஆர், தமிழிசை, எல்.கணேசன் போன்றோருக்கு எங்காவது நீதி கிடைக்க வேண்டும். ஏனென்றால் அண்ணாமலை தலைமையிலான வார்ரூம் குண்டர்களால் அவர்கள் அனைவரும் சிறுமைப்படுத்தப்பட்டனர்
அண்ணாமலை புதிதாக யாரும் உருவாக வேண்டும் என்று ஒருபோதும் விரும்பியதில்லை, மேலும் முக்கியமானவர்களை எல்லாம் முடித்துவிட வேண்டும் என விரும்புகிறார்... பெரியவர்களையும், மூத்தவர்களையும் குறைகூறுவது அண்ணாமலையின் வார்ரூம் கடைபிடித்த ஒரு வழிமுறையாகும்" என்பது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை கல்யாணராமன் அடுக்கியிருக்கிறார்.. இந்த குற்றச்சாட்டுகள் எல்லாமே அண்ணாமலையின் ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளன.
அதிர்ச்சி: இப்படிப்பட்ட சூழலில் ஒரு வீடியோ வெளியாகி, அண்ணாமலையின் ஆதரவாளர்களை இன்னமும் அதிர்ச்சியடை வைத்திருக்கிறது.. அதாவது, அண்ணாமலையால்தான், கே.டி.ராகவன், நடிகை காயத்ரி ரகுராம், எஸ்.வி.சேகர் உட்பட பல மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டதாக சலசலப்புகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.. அதற்கேற்றவாறு, இவர்களில் காயத்ரி, எஸ்விசேகர் என பலரும் அண்ணாமலைக்கு எதிராகவே வெளிப்படையாக கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இப்போது பாஜவும் படுதோல்வி அடைந்துள்ள நிலையில், அண்ணாமலைதான் இதற்கெல்லாம் காரணம் என்று எஸ்வி சேகர் பகிரங்கமாகவே சொல்லி வருகிறார்..
வீடியோ: தமிழகத்தில் பாஜவும், அண்ணாமலையும் தோல்வி அடைந்ததற்காக தனது வீட்டு முன்பு பட்டாசு வெடித்துக் கொண்டாடி உள்ளார். இதை வீடியோ எடுத்து தன்னுடைய ட்விட்டரிலும் வெளியிட்டுள்ளார். கல்யாண ராமனின் குற்றச்சாட்டுகளால் கடுமையான ஆத்திரத்தில் உள்ள அண்ணாமலையின் ஆதரவாளர்கள், இந்த வீடியோவை பார்த்ததும் இன்னமும் கொந்தளித்து போயிருக்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications