நிழல் நிஜமாகிறது.. சிதம்பரம் வைத்த புள்ளி.. கார்த்தி போடும் கோலம்.. அதிரும் டெல்லி.. கதிகலங்கும் பாஜக
சென்னை: அடுத்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எகிறி வரும்நிலையில், சிவகங்கை காங்கிரஸ் பெருத்த நம்பிக்கையில் உள்ளது.. என்ன காரணம்?
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை தனது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு வாங்கித்தந்திட வேண்டும் என முடிவு செய்து பகீரத முயற்சியை தொடர்ந்து வருகிறாராம் மூத்த தலைவர் ப.சிதம்பரம்..
இதற்காக கட்சியின் முக்கிய தலைவர்களின் உதவியை நாடியிருக்கிறாராம்.. குறிப்பாக கார்கேவிடம் இது குறித்து மீண்டும் சிதம்பரம் விவாதித்துள்ளதாக தெரிகிறது.

ஆனால் அவரோ, "ராகுலை மீறி என்ன நடந்து விடப்போகிறது? அவரிடம் பேசுங்கள். இல்லையெனில் சோனியா மேடத்திடம் பேசுங்கள்" என்று சொல்லி, உதவி செய்யும் ஆட்டத்தில் இருந்து விலகி கொண்டிருக்கிறார் கார்கே. ஆனாலும் தன்னுடைய முயற்சியை கை விடாத விக்கிரமாதித்தனை போல அடுத்தக்கட்ட காய்களை நகர்த்தத் தொடங்கி விட்டாராம் ப.சிதம்பரம்.
ராகுல் காந்தி: தமிழகத்தின் அரசியல் சூழல் எப்படி நகர்கிறது? தேர்தல் களம் எப்படி இருக்கப்போகிறது? இதனை தமிழக காங்கிரஸ் எப்படி அணுக வேண்டும்? காங்கிரஸ் தலைவராக இளைஞரை நியமிக்க வேண்டும். அப்படி நியமிப்பதால் என்ன பலன்? என்பது உள்ளிட்ட பல விசயங்களை சோனியாவுக்கும் ராகுலுக்கும் தெரிவித்து, "தனது மகனுக்கு வாய்ப்புக் கொடுங்கள்" என்று ப.சிதம்பரம் கேட்டதாகவும் தகவல்கள் பரபரத்தன.
இதற்கு நெகட்டிவ் விடை எதுவும் வராத நிலையில், "காங்கிரஸ் தலைவர் ஆகிறார் கார்த்தி சிதம்பரம்" என்று ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகம் பரவி வருகிறது... இதனையறிந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் செல்லக்குமார் மற்றும் ஜோதிமணி ஆகியோர் கட்சி மேலிடத்தில் தங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
இதுஒருபக்கம் என்றால், வரப்போகும் எம்பி தேர்தலில், கார்த்தி சிதம்பரத்துக்கு மீண்டும் சீட் ஒதுக்கப்பட வேண்டும் என்கிற உறுதி மொழியை மேலிடத்திடம் பெறுவதற்கான முயற்சியில் இருக்கிறாராம் ப.சிதம்பரம்.. ஆனால், இந்த முறை கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் இல்லை, தமிழகத்தில் அவரை கட்சி பணிக்கும் தேர்தல் பணிக்கும் அனுப்பலாம் என்று தகவல்கள் வெளியாகினாலும், ஒருபக்கம் எம்பி சீட், இன்னொரு பக்கம் தலைவர் பதவி என மனம்தளராத முயற்சியை முன்னெடுத்துவருகிறாராம் ப.சிதம்பரம்..
கார்த்தி சிதம்பரம்: ஏற்கனவே மேலிட பாஜகவால் டார்கெட் செய்யப்பட்டுள்ள நிலையில், எம்பி தேர்தலும் நெருங்கி வரும் சூழலில், ஒருவேளை தலைவர் பதவி கார்த்திக்கு வழங்கப்பட்டால், இதனை பாஜக எப்படி எதிர்கொள்ளும் என்பதும் தெரியவில்லை. அதைவிட முக்கியமாக, கார்த்தி சிதம்பரம் மீதான அதிருப்தி, ராகுல் காந்திக்கு முழுமையாக நீங்கிவிட்டதா? என்றும் தெரியவில்லை.
ஆனால், கார்த்தி சிதம்பரமும், அவரது ஆதரவாளர்களும், மேலிடம் தங்களை கைவிடாது என்ற மிகுந்த நம்பிக்கையிலும், தெம்பிலும் உள்ளார்களாம்.. அதற்கேற்றவாறு, பாஜகவை சீண்டி கார்த்தி சிதம்பரமும் பேட்டிகளை தந்து வருகிறார்.
பாஜக: சிவகங்கையில் எம்பி கார்த்தி சிதம்பரம் நேற்றுகூட ஒரு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில், "வரும் தேர்தலில் பாஜகவை எதிர்த்து காங்கிரசை மையமாக வைத்து பலமான கூட்டணி அமையும் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்..
தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் சொல்லும்போது, "அரசு அமலாக்கத் துறையை ஆயுதமாக பயன்படுத்தி, எதிர்கட்சிகள் மீதும், இந்துத்துவா கொள்கையை எதிர்ப்பவர்கள் மீதும் ரெய்டு நடத்தி அடக்க பார்க்கின்றனர்.
கூட்டணி உறுதி: தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த தேர்தலில் 38 தொகுதியில் வெற்றி பெறும்.. அண்ணாமலை பாதயாத்திரையில் நல்ல ஜூஸ் வாங்கி சாப்பிட சொல்லுங்கள்.. தேர்தல் வருவதற்கு முன் கண்டிப்பாக காங்கிரசை மையமாக வைத்து வலுவான கூட்டணி அமையும்" என்றார். கார்த்தி சிதம்பரத்தின் இந்த பேட்டியானது, சிவகங்கை உள்ளிட்ட காங்கிரஸ் தொண்டர்களை குஷியாக்கி வருகிறது.












Click it and Unblock the Notifications