எடப்பாடி எய்த 4 அம்புகள்.. ஓபிஎஸ் அளித்த 3 பதிலடிகள்.. இன்னும் 2 நாளில் "கேம் ஓவர்".. என்ன நடக்கும்?
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்னும் 2 நாட்களில் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வியாழக்கிழமை இதன் தீர்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக பொதுக்குழு வழக்கில் உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயசந்திரன் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்து இருந்தார். ஓ பன்னீர்செல்வம் கோரிக்கையை ஏற்று அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது செல்லாது என்று தனி நீதிபதி உத்தரவிட்டார்.
அதோடு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடரும். அவர்கள் இருவரும் ஒப்புதல் அளித்தால் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும்.
அதிமுகவில் ஜூன் 23ம் தேதி நிலவிய அதே நிலைதான் நீடிக்க வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டார். உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் வழக்கை விசாரணை செய்தனர். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை எதையும் விதிக்கவில்லை.

விசாரணை ஓவர்
இந்த வழக்கில் விசாரணை முடிந்துவிட்டது. ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு வழக்கில் வாதம் செய்ய தலா 1 மணி நேரத்தை நீதிபதிகள் கொடுத்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி 3 மணி நேரம் வாதம் செய்தார். ஓ பன்னீர்செல்வம் 1 மணி நேரம் 45 நிமிடம் வாதம் செய்தார். இந்த வழக்கில் இரண்டு தரப்பிடமும் நீதிபதிகள் சில சந்தேகங்களை எழுப்பினர். இந்த வழக்கில் வர உள்ள தீர்ப்பு அதிமுகவில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எடப்பாடி வாதம்
இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி 4 முக்கியமான வாதங்களை வைத்தார். அவர் தொடுத்த 4 அம்புகள் பின்வருமாறு
அம்பு 1 - அதிமுகவில் ஒற்றை தலைமை கொண்டு வர வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் விரும்பியதால் தான், ஜூலை 11- ல் பொதுக்குழு கூட்டப்பட்டது. இதில் கட்சி விதிகள் ஏதும் மீறப்படவில்லை. கட்சி விவகாரங்களில் தலையிடும் விதமாக தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ளதால், அதை ரத்து செய்ய வேண்டும்.
அம்பு 2 - கட்சியில் ஒற்றை தலைமை கொண்டு வர வேண்டுமென 2 ஆயிரத்து 539 பொதுக்குழு உறுப்பினர்களும் ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டுள்ளனர். இதில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது நிரூபணம் ஆகியுள்ளது. பொதுக்குழுவிற்கே அதிகாரம் உள்ளது. தொண்டர்களுக்கு அதிகாரம் இல்லை. மனுதாரர்கள் தரப்பில் கோரப்படாத நிவாரணம் வழங்கியது அசாதாரணமானது.

அம்புகள்
அம்பு 3 - கட்சி விவகாரங்களை பொறுத்தவரை பொதுக்குழு முடிவே இறுதியானது. இதை ஏற்றுக் கொள்பவர்களே அடிப்படை உறுப்பினர்களாக இருக்க முடியும். பொதுக்குழு முடிவை எதிர்ப்பவர்கள் அடிப்படை உறுப்பினர்களாக இருக்க முடியாது.
அம்பு 4- பொதுக்குழு நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை என எந்த பொதுக்குழு உறுப்பினரும் புகார் தெரிவிக்கவில்லை. பொதுக்குழுவிற்கு கட்டாயம் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று எந்த விதியும் சொல்லவில்லை.

ஓ பன்னீர்செல்வம் தரப்பு
இதற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பு 3 பதிலடிகளை கொடுத்தது.
பதிலடி 1 - நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்பது பொதுக்குழு விதி. பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே கூட்ட முடியும்.
பதிலடி 2 - அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கிய போதே தொண்டர்களுக்குத்தான் அதிக பவர் கொடுத்தார். தொண்டர்கள் தலைவர்களை தேர்வு செய்யும் ஒரே கட்சி அதிமுகதான். ஜெயலலிதா தொண்டர்கள் மூலம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரும் போட்டியின்றி தொண்டர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்
பதிலடி 3 - கட்சியில் தொண்டர்களுக்கே சுப்ரீம் பவர் இருக்கிறது. அவர்களுக்கே முடிவு எடுக்கும் சுப்ரீம் அதிகாரம் இருக்கிறது. பொதுக்குழுவிற்கு இல்லை, என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு தனது வாதத்தில் வைத்துள்ளது.

தீர்ப்பு
இந்த வாதங்கள் வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்னும் 2 நாட்களில் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வியாழக்கிழமை இதன் தீர்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரமே வழக்கில் விசாரணை முடிந்துவிட்டது. சிவில் மேல்முறையீட்டு வழக்குகளில் பொதுவாக உடனே தீர்ப்பு வரும். அதனால் வியாழக்கிழமைக்கு முன் தீர்ப்பு வரும். அல்லது அதிகபட்சம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 நாட்கள்
இந்த தீர்ப்பை எதிர்பார்த்து ஏற்கனவே ஓ பன்னீர்செல்வம் சென்னை சென்றுவிட்டார். சென்னையில் அவர் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறார். தீர்ப்பு சாதகமாக வந்தால் கட்சி நிர்வாகிகளை அழைத்து அடுத்த கட்ட முயற்சிகளில் ஓ பன்னீர்செல்வம் இறங்க வாய்ப்பு உள்ளது. இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் தீவிர ஆலோசனை செய்து வருகிறார். அவரும் தீர்ப்பு சமயத்தில் சென்னையில் இருக்க முயற்சிப்பார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications