கோயம்பேட்டில் மீண்டும் பிஸி.. காலையிலேயே வந்து குவிந்த ஜனம்! பவுர்ணமி வேற..இப்பவே கண்ணை கட்டுதே விலை
சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்ந்துள்ள நிலையில், பூக்களின் விலையிலும் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது.. என்ன காரணம்?
தமிழகத்தில் கடந்த ஏப்ரல், மே மாதத்தின் முதல் 2 வாரங்கள் வரை அளவுக்கு அதிகமான வெயில் வாட்டி வதைத்தது.. இதனிடையே மழையும் பெய்தாலும், வெயிலின் தாக்கமும் அதிகமாகவே இருந்தது.

சமீப நாட்களாகவே மழை, வெயில் என இரண்டுவிதமான வானிலை மாற்றத்தை ஒரே நாளில் காண முடிகிறது.. இந்நிலையில் காய்கறிகள் விலைகளில் தொடர்ந்து உயர்வு காணப்பட்டு வருகிறது.
பருவமழை: ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநில எல்லையோர பகுதிகளில் இருந்துதான் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வருகின்றன.. அந்த பகுதிகளில் எல்லாம் இந்த வருடம் தென்மேற்கு பருவமழை தீவிரமடையவில்லை... அதுவும் இல்லாமல், இப்போது அறுவடை பருவம் நிறைவடையும் தருவாயில் இருப்பதால், காய்கறிகளின் வரத்து குறைந்து அவற்றின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் காரணம் சொல்கிறார்கள்.
அதனால்தான், கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து, அதன் விலை கிலோ ரூ.24-லிருந்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது... இன்னமும் கிலோ ரூ.60-ஐ தாண்டி விற்பனையாகி கொண்டிருக்கிறது.
காய்கறிகள்: காய்கறிகள் விலை இப்படியென்றால், பூக்களின் விலையும் உயர்ந்துஉள்ளது.. சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டிற்கு செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களிலிருந்து பூக்கள் கொண்டுவரப்படும்.. இவைகளை தவிர தென் மாவட்டங்களிலிருந்தும் மல்லி, முல்லை, கனகாம்பரம், ஜாதிமல்லி, சம்பங்கி, சாமந்தி, கோழிக்கொண்டை போன்ற பூ வகைகள் கோயம்பேட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
கடந்த வாரத்தை எடுத்து கொண்டால், ஒரு கிலோ மல்லி ரூ.350, ஜாதிமல்லி, முல்லை ரூ.250, கனகாம்பரம் ரூ.600, அரளி ரூ.100, சாமந்தி ரூ.240, சம்பங்கி ரூ.120, பன்னீர் ரோஸ் ரூ.70, சாக்லேட் ரோஸ் ரூ.80 என்று விற்பனைசெய்யப்பட்டுது. ஆனால், இப்போது பவுர்ணமியையொட்டி எல்லாவிதமான பூக்களின் விலையும் உயர்ந்துவிட்டது.
பன்னீர் ரோஸ்: அதன்படி ஒரு கிலோ மல்லி ரூ.500, கனகாம்பரம் ரூ.800, ஜாதிமல்லி, முல்லை ரூ.400, அரளி ரூ.180, சாமந்தி ரூ.260, சம்பங்கி ரூ.120, பன்னீர் ரோஸ் ரூ.100, சாக்லேட் ரோஸ் ரூ.70 என விலை உயர்ந்துள்ளது.. எனவே, நேற்று அதிகாலை முதலே சிறு வியாபாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பூக்களை வாங்க கோயம்பேடு பூ மார்க்கெட்டில் குவிந்துவிட்டனர்.
திடீரென ஒரே நேரத்தில் பொதுமக்கள் பூக்கள் வாங்க குவிந்துவிட்டதால், பூ மார்க்கெட்டில் மட்டும் நெரிசல் தென்பட்டது.. எனினும், பூ வியாபாரம் அமோகமாக நடந்ததால், விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications