ஹெவி டென்ஷன்.. அப்ப 5ம் தேதி "சம்பவம்" இருக்கு போல.. ஓபிஎஸ்ஸிடம் இருந்து பறந்த தகவல்.. குஷியோ குஷி
சசிகலாவும் ஓபிஎஸ்ஸும் டிசம்பர் 5ம் தேதி சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: பிரிந்தவர்கள் ஒன்றுகூடுவார்களா? என்ற எதிர்பார்ப்பு அதிமுக தொண்டர்களிடம் நிலவி வரும் நிலையில், ஓபிஎஸ் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதிமுகவில் பஞ்சாயத்து இன்னும் முடியவில்லை.. எப்படியும் எம்பி தேர்தல் வரை இந்த ஒற்றை தலைமை விவகாரம் ஓடும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
கூட்டணியில் உள்ள பாஜகவும் நேரடியாக தலையிட்டு இவர்களை சமாதானப்படுத்தவில்லை.. ஆனால், மறைமுக அழுத்தங்களை தர துவங்கி உள்ளது.
அதிமுகவில் டிசம்பர் 5 திருப்புமுனையா? ஜெயலலிதா நினைவிடத்தில் சங்கமமாகும் சண்டை கோஷ்டிகள்?
கறார் கறார்
எடப்பாடியின் பிடிவாதம் குறையவே இல்லை.. பாஜக சொல்லியும் காதில் வாங்கவில்லை.. ஓபிஎஸ் + தினகரன் + சசிகலா 3 பேரையும் மட்டும் கட்சிக்குள் இணைத்து கொள்ளும்படி நிர்ப்பந்திக்க கூடாது என்றும், தன்னை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க, அறிவிக்க செய்யும்படியும் மேலிடத்தை கேட்டுக் கொண்டு வருவதாக தெரிகிறது.. பாஜகவை ஒரேடியாக எதிர்க்க முடியாத அளவுக்கு பலவித நெருக்கடிகள் கலந்த சூழல், எடப்பாடிக்கு இருந்தாலும்கூட, தன் முடிவில் உறுதியாக இருந்து வருகிறார்.
மீட்டிங் எப்போது
மற்றொருபக்கம், ஓபிஎஸ், தினகரன், சசிகலா 3 பேருமே எப்போது வேண்டுமானாலும் ஒன்று சேரக்கூடிய நிலைமையில்தான் இருக்கிறார்கள்.. ஒருவருக்கொருவர் அரசியல் புரிதல் இருந்து வரும் நிலையில், இவர்களின் சந்திப்பு எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் இவர்களது ஆதரவாளர்களிடம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.. இதில், கூட்டணி தொடர்பாக, கடந்த சில தினங்களாகவே, டிடிவி தினகரனை விரைவில் சந்திக்கக்கூடும் என்று ஓபிஎஸ் தரப்பில் இருந்தே செய்திகள் பரவிக் கொண்டுதான் இருக்கின்றன.. இவர்கள் 2 பேரும் நேருக்கு நேர் சந்தித்து பேசி வருடக்கணக்காகிறது என்பதால், இந்த சந்திப்பை இரு தரப்புமே ஆர்வத்துடன் எதிர்கொண்டு வருகிறது.
வைத்தியலிங்கம்
அதேபோல, சசிகலாவும், ஓபிஎஸ்ஸும் சந்திக்க போவதாக, கடந்த ஒரு வருட காலமாகவே சொல்லப்பட்டு வருகிறது.. தஞ்சாவூரில் இந்த தலைவர்களை சந்திக்க வைக்க ஏற்பாடு நடப்பதாக 4 நாட்களுக்கு முன்பும் செய்திகள் பரவின.. அதுவும் நடக்கவில்லை. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ்ஸூம் சசிகலாவும் விரைவில் சந்திக்க போவதாக ஒரு செய்தி பரவியது.. ஜெயலலிதாவின் நினைவு தினத்தை ஒட்டி, அமைதி பேரணி நிகழ்ச்சி சென்னையில் நடக்க உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் பன்னீர்செல்வத்துடன் இணைந்து பங்கேற்பது குறித்து, தன் ஆதரவாளர்களுடன் சசிகலா, ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்பட்டது.
வந்தாச்சு அறிக்கை
எனவே, ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், ஓபிஎஸ்ஸுடன் கைகோர்க்கலாம் என்று சசிகலா ஆதரவாளர்கள் சொல்லி வருகிறார்களாம்.. இப்படிப்பட்ட சூழலில், ஓபிஎஸ் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியாகி உள்ளது.. அந்த அறிக்கையில், வரும் டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதாவின் நினைவுநாளையொட்டி, ஆதரவாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்த வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்த வேண்டும் என்றும் ஓபிஎஸ் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பறந்த உத்தரவு
அதிமுகவின் தலைமைக் கழகம் என்ற பெயரில் ஓபிஎஸ் தரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், வரும் டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதாவின் நினைவுநாளையொட்டி சேப்பாக்கத்தில் இருந்து, மெரினாவில் உள்ள நினைவிடம் வரை ஊர்வலம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தில் ஓபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தியதும், உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆதரவாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்த வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்த வேண்டும் என்றும் ஓபிஎஸ் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பீச்சில் சசி
அப்படியானால், ஓபிஎஸ் அன்றைய தினம் ஊர்வலம் நடத்தப்போவது கன்பர்ம் ஆகி உள்ளதாகவே தெரிகிறது.. எனினும் சசிகலா தரப்பில் எந்த பதிலும் இதுவரை வரவில்லை.. அதேபோல, டிடிவி தினகரனும் அன்றைய தினம் என்ன செய்ய போகிறார் என்று தெரியவில்லை.. கடந்த வருடம், ஜெ. நினைவு நாளில், மெரினா பீச்சுக்கு சசிகலா வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், தொற்று பாதிப்பு பரவியிருந்த நிலையில், அப்படி ஒரு நிகழ்ச்சியே நடக்கவில்லை.. அந்தவகையில் இந்த வருடம் மெரினாவுக்கு வருவார் என தெரிகிறது.
சாயும் டிடிவி
அதேபோல, தினகரனை பொறுத்தவரை, ஓபிஎஸ்ஸுடன் இணைய தயாராகவே உள்ளார்.. கூட்டணி தொடர்பாக தினகரனை நேரில் சந்திக்க நேர்ந்தால் விரைவில் சந்திப்பேன் என்று ஓபிஎஸ்ஸும் சமீபத்தில் கூறியிருந்தார்.. எனவே, இவர்களின் சந்திப்பு எதிர்பார்ப்புக்குரியதாகவே உள்ளது.. ஒருபக்கம் சசிகலா, இன்னொரு பக்கம் டிடிவி, இதற்கு நடுவில் ஓபிஎஸ் என 3 பேரும் டிசம்பர் 5ம் தேதி சந்திப்பார்களா? ஏதாவது முக்கிய அறிவிப்பை வெளியிடுவார்களா? தெரியவில்லை.. பார்ப்போம்..!!