வந்தே பாரத் ரயிலில் புக் பண்ணி போகப்போறீங்களா? இதையெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க
சென்னை: வந்தே பாரத் ரயிலில் உணவு விநியோகம் தொடர்பான புகார்கள் காரணமாக ரயில்வே கோட்ட மேலாளர்களுக்கு ரயில்வே வாரியம் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் வந்தே பாரத் ரயிலில் பயணிகளின் குறைகளுக்கு உடனடி தீர்வு காண்பது தொடர்பாகவும் அறிவுறுத்தல்கள் இடம் பெற்றுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை - கோவை, சென்னை- மைசூர் வழித்தடம் உள்பட இதுவரை 25 வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் நாளை மேலும் 9 வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதில் சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயிலும் அடங்கும்.

விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளை கொண்ட வந்தே பாரத் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வந்தே பாரத் ரயில்களில் பயணிகளின் குறைகள் தெரிவிக்காத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், உணவு வினியோகம் தொடர்பான பயணிகளின் குறைகளுக்கு தீர்வு காண உடனடி நடவடிக்கைகள் எடுக்குமாறு ரயில்வே கோட்டங்களுக்கு ரயில்வே வாரியம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து ரயில்வே கோட்ட மேலாளர்கள், ஐஆர்சிடிசி ரயில்வே தகவல் சேவை மையம் ஆகியவற்றுக்கு ரயில்வே வாரியம் ஒரு கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- வந்தே பாரத் ரயில்களில் உணவு வினியோகம் தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளை ரயில்வே வாரியம் தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டு இருக்கிறது.
இந்த விவகாரத்தில் ரயில்வே தகவல் சேவை மையம் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி இணைந்து செயல்படுவது அவசியம். ரயில்களில் சாப்பிட உணவை பதிவு செய்ய முடியும் அல்லது ஆர்டரின் பேரில் உணவு கிடைக்கும் என்பதை பயணிகளுக்கு மெசேஜ் மூலம் தெரியப்படுத்த வேண்டும். கன்பார்ம் டிக்கெட்டை எடுத்து இருந்த பயணிகள் உணவு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்றால் அவர்களுக்கு மெசேஜ் மூலம் லிங்க் அனுப்ப வேண்டும்.
அந்த மெசேஜ்ஜில் உணவை விரும்பினால் ஆர்டர் செய்து கொள்ள முடியும் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். பயணம் தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பாக உணவு சேவை பற்றி மீண்டும் ஒரு மெசேஜ் அனுப்ப வேண்டும். கரண்ட் புக்கிங் செய்யும் பயணிகளுக்கு சைவ உணவு மட்டுமே கிடைக்கும் என்பதையும் தெரிவிக்க வேண்டும். ரயில் புறப்படும் நேரத்திற்கு 15 நிமிடத்திற்கு முன்பு வரை கரண்ட் புக்கிங் இருப்பதால் அசைவ உணவு தயாரிக்க நேரம் இருக்காது.
வந்தே பாரத் ரயிலில் உணவு சேவை இருப்பது குறித்து ரயில் புறப்படும் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் உணவு சேவை பற்றி அறிவிப்பு வெளியிட வேண்டும். ஒருவேளை டிக்கெட் புக்கிங் செய்யும் போது உணவு சேவை குறிப்பிடாமல் இருக்கும் பயணிகள் பயணம் செய்யும் போது உணவு ஆர்டர் செய்யும் விரும்பினால் கூடுதலாக 50 ரூபாய் சேவை கட்டணம் பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications