ஜெயலலிதா கிறிஸ்துவ பள்ளியில் படித்தவர்தானே.. அவரை மதம் மாற்றி விட்டார்களா என்ன? சீமான் விளாசல்
சென்னை: அரியலூர் மாணவி மரணத்திற்கு மத மாற்ற காரணம் இருப்பதாக வைக்கப்படும் புகார்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்துள்ளார். இந்தியாவில் மத மாற்றம் நடப்பதாக பொய்யான செய்தி பரப்பப்படுகிறது, இதை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்று சீமான் பதில் அளித்துள்ளார்.
அரியலூர் மாணவி கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இவரின் தற்கொலைக்கு வார்டன் வேலை வாங்கி தொல்லை கொடுத்ததுதான் காரணம் என்று கூறப்படுகிறது. அதே சமயம் இவரின் மரணத்திற்கு மத மாற்ற காரணம் இருப்பதாகவும் பாஜக புகார் வைக்கிறது.
இது ஒருபுறம் இருக்க இன்னொரு புறம் கர்நாடகாவில் ஹிஜாப் அணியும் இஸ்லாமிய மாணவிகள் கல்வி நிலையங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இது தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
அரியலூர் அனிதாவின் அண்ணனா இப்படி?.. வசந்தியிடம் வம்பிழுத்து.. கடைசியில் தட்டி தூக்கிய போலீஸ்..!
சீருடை ஏன்?
சீமான் அளித்துள்ள பேட்டியில், உன்னுடைய மத அடையாளம் உனக்கு. என்னுடைய மத அடையாளம் எனக்கு. கல்லூரியில் சீருடை ஏன் அணிய வேண்டும்? விரும்பியதை அணிந்து கொண்டு செல்லலாமே? பர்தா அணிந்தால் என்ன தவறு? சட்டசபையில் அம்மணமாக அமர்ந்து ஒரு சாமியார் பேசுகிறார். அதை எல்லோரும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதை யாரும் தவறு என்று சொல்லவில்லை.
பூணூல்
நான் இஸ்லாமிய மதத்தை ஏற்றால் என்னால் தொப்பி அணிய முடியும். நான் கிறிஸ்துவ மதத்தை ஏற்றால் நான் சிலுவை அணிய முடியும்? நான் இந்து மதத்தில் இருக்கிறேன் என்றால் என்னால் பூணூல் அணிய முடியாது தானே.? வாய்ப்பில்லை ராஜா தானே? இதை எப்படி ஏற்றுக்கொள்வது? ஷிமோகாவில் ஒரு நாளில் காவில் துண்டு அணிந்து சென்ற மாணவ, மாணவியர் அதற்கு முன், அதற்கு பின் ஏன் செல்லவில்லை.
பர்தா
இஸ்லாமியர்கள் பல காலமாக பர்தா அணிந்து செல்கிறார்களே? இது மத சார்பாற்ற நாடு என்கிறீர்கள்.. அப்படி இருக்கும் போது மோடி எப்படி கோவில் கோவிலாக சென்று மணி அடிக்கலாம், வழிபடலாம். அவர் பொதுவாகத்தானே இருக்க வேண்டும். இதற்கு விளக்கம் கேட்டால், நாடு வேண்டுமானால் மத சார்பற்று இருக்கலாம். பிரதமருக்கு மதம் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
பிரதமர் மதம்
சட்டசபையின் சபாநாயகரே பொதுவாக கட்சி சார்பின்றி இருக்க வேண்டும். அப்படி இருக்கும் போது ஒரு நாட்டின் பிரதமர் எப்படி மத சார்புள்ளவராக இருக்கலாம் அப்படி என்றால் இந்தியாவை மதசார்புள்ள நாடு என்று அறிவித்துவிட்டு போங்கள். தேர்தல் வரும் போதுதான் உங்கள் அலுவலகத்தில் குண்டு வெடிக்கிறது, மத பிரச்சனை வருகிறது. மதம் அவ்வளவு முக்கியம் என்றால் இஸ்லாமிய , கிறிஸ்துவ நாட்டிற்கு ஏற்றுமதியை நிறுத்துங்கள். மோடி இஸ்லாமிய , கிறிஸ்துவ நாட்டு பயன்களை நிறுத்தட்டும்.
கிறிஸ்துவ மத மாற்றம்
கிறிஸ்துவ மத மாற்றம் நடப்பதாக புகார் வைக்கிறார்கள். வெள்ளைக்காரன் நம்மை மத மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைத்து இருந்தால் மொத்தமாக நம்மை கிறிஸ்துவன் ஆக்கி இருக்கலாம். நம் மொழியை ஆங்கிலம் ஆக்கி இருக்கலாம். மொகலாயர் நினைத்து இருந்தால் நம் எல்லோரையும் இஸ்லாமியர் ஆக்கி இருக்கலாம். அப்படி செய்யவில்லை. ஆனால் நீங்கள் வந்து மத மாற்றம் மத மாற்றம் என்று கூறிக்கொண்டு இருக்கிறீர்கள்.
இந்தி திணிப்பு
கட்டாயமாக எங்களை இந்தி படிக்க சொன்னது நீ. கட்டாயமாக எங்களை ஆதார் எடுக்க சொன்னது நீ. எல்லாமே நீதான் கட்டாயம் போட்டது.. எவன் இங்கே கட்டாயப்படுத்தி மதம் மாற்றினான்? எவன் மதம் மாறினான்? 50 ஆண்டுமாக மைக்கேல் பட்டியில் நடக்கும் பள்ளியில் லாவண்யாவை மட்டும் மதம் மாற சொன்னார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆசரிரீ வந்து சொன்னதா.. ஜெயலலிதா சர்ச் பார்க் கான்வெண்டில்தான் படித்தார். அவர் கிறிஸ்துவ பள்ளியில்தான் படித்தார்.
ஜெயலலிதா
ஜெயலலிதா ஏன் மதம் மாறவில்லை. உயர் பதவியில் இருக்கும் பல பிராமணர்கள், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பலர் கிறிஸ்துவர்கள்தான். உங்களுக்கு அரசியல் செய்ய வேறு விஷயம் கிடைக்கவில்லை. நீங்கள் மக்கள் பிரச்சனைக்காக நிற்கவில்லை. நீங்கள் மதத்தை பிடித்து தொங்கிக்கொண்டு இருக்கிறீர்கள். முதல்வர் வீட்டை முற்றுகையிடும் அளவிற்கு பெரிய பிரச்சனையா இது? நாடற்றவர்கள் இந்த நாட்டை தன்னுடையத்தாக்க செய்யும் போராட்டம் இது, என்று சீமான் விமர்சனம் செய்துள்ளார்.