தொடங்கியது ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்.. சவப்பெட்டியில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள் என்ன தெரியுமா?
சென்னை: படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கி உள்ளது. இந்நிலையில், அவரது சவப்பெட்டியில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள் கவனம் பெற்றுள்ளன.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று முன் தினம் பெரம்பூர் பகுதியில் தனது வீடு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதிக்கு வந்த நபர்கள் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆம்ஸ்ட்ராங், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு கொல்லப்பட்ட ரௌடி ஆற்காடு சுரேஷ் கொலையில் பழிக்குப் பழி வாங்குவதற்காக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆம்ஸ்ட்ராங் உடல்: நேற்று இரவு 11 மணியளவில் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று காலை செம்பியம் பகுதியில் உள்ள பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பொதுமக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்து வருகின்றனர். இதனிடையே ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பெரம்பூர் பகுதியில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரப்பட்டது. ஆனால் மாநாகராட்சி எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது தமிழக அரசு சார்பாக பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் பகுதியில் 16 அடி சாலை தான் உள்ளது. வீட்டில் இருந்து 1.5 கிமீ தூரத்தில் 200 சதுர அடியில் மாநகராட்சி ஒரு இடத்தை தேர்வு செய்துள்ளது. அங்கு அடக்கம் செய்யலாம் வாதிடப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிபதி ஆர்ம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும், சட்ட விதிகளை மீற முடியாது. நாளை வீர வணக்கம் போன்ற நிகழ்வின் போது ஆயிரக்கணக்கான மக்கள் வந்தால் என்ன செய்வது என கேள்வி எழுப்பினார்.
பொத்தூரில் அடக்கம்: இரண்டு முறை வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இறுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொத்தூர் கிராமத்தில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. நாளை பள்ளி திறக்கப்பட வேண்டும் என்பதால், உடலை பள்ளி மைதானத்தில் இருந்து இன்றே எடுத்தாக வேண்டும் நீதிபதி பவானி சுப்பராயன் தெரிவித்தார். மேலும் உடல் எடுத்துச் செல்லப்படும் 20 கி.மீ. தூரத்துக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் பொத்தூர் கிராமத்தில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. அந்த இடம் ஆம்ஸ்டிராங்கின் உறவினரான காஞ்சனா தேவி என்பவருக்கு சொந்தமானது. டி.ஆர்.ஓ ராஜ்குமார், ஆவடி தாசில்தார் விஜயகுமார், வி.ஏ.ஓ சரவணன் ஆகியோர், ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்படும் இடத்தில் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
சவப்பெட்டியில் உள்ள வாசகம்: ஆம்ஸ்ட்ராங் உடலை வைக்க சவப்பெட்டிகள் கொண்டு வரப்பட்டன. அந்தச் சவப்பெட்டியில், "சமத்துவ தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், மாநில தலைவர் பகுஜன் சமாஜ் பார்ட்டி" என்றும் "ஜெய்பீம்" என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கி உள்ளது. மக்கள் திரளுக்கு மத்தியில், பெரம்பூர் பள்ளி வளாகத்தில் இருந்து மலர்கள் தூவியபடி அவரது உடலை வாகனத்தில் ஏற்றி உள்ளனர். ஜெய்பீம் முழக்கத்துடன் ஊர்வலம் தொடங்கி உள்ளது. சுமார் 25 கி.மீ பயணித்து ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது












Click it and Unblock the Notifications