ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு! பலத்த போலீஸ் பாதுகாப்பு
சென்னை: மர்ம நபர்களால் கொல்லப்பட்ட தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு இன்று இறுதி சடங்குகள் செய்யப்படுகின்றன. நேற்று இரவு சென்ட்ரலில் இருந்து பெரம்பூருக்கு அவருடைய உடல் ஊர்வலமாக வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் வழி நெடுகிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை பெரம்பூர் வேணுகோபால்சாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் வழக்கறிஞர். மேலும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகவும் இருந்தார். சுமார் 20 ஆண்டுகளாக அந்த கட்சியின் அந்த பொறுப்பில் இருந்து வருகிறார். பல்வேறு தேர்தல் விவாதங்களில் தொலைகாட்சி சேனல்களுக்கு பேட்டி அளித்தார். தற்போது அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இவர் நேற்று முன் தினம் இரவு பெரம்பூர் வேணுகோபால்சாமி கோயில் தெருவில் புதிதாக கட்டி வரும் வீட்டின் பணிகளை பார்வையிட ஆம்ஸ்ட்ராங் சென்றிருந்தார்.

அவருடன் பெரம்பூரை சேர்ந்த வீரமணி (65), பாலாஜி ஆகியோரும் சென்றிருந்தனர். அப்போது அந்த பகுதிக்கு 6 பேர், 3 பைக்குகளில் வந்தனர். இதையடுத்து திடீரென ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து வெட்டினர். இந்த தாக்குதலை எதிர்பார்க்காத ஆம்ஸ்ட்ராங் தப்ப முடியவில்லை. அந்த 6 பேரையும் வீரமணியும் பாலாஜியும் தடுத்தனர். ஆனால் அந்த கும்பல் அவர்களையும் சேர்த்து வெட்டியது.
இதில் ஆம்ஸ்ட்ராங் பலத்த காயங்களுடன் சரிந்து விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஆம்ஸ்ட்ராங் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து செம்பியம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கெனவே கொல்லப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலா உள்பட 8 பேர் கைுது செய்யப்பட்ட நிலையில் நேற்று இரவு மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது.
அப்போது அந்த பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடலை ஒப்படைக்க இருந்த நேரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினர் மருத்துவமனை இருக்கும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் செய்தனர். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலான இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும். கட்சி அலுவலகத்தில் புதைக்க அனுமதி கொடுக்க வேண்டும். உளவுத் துறை ஏடிஜிபியை உடனே பணியிடமாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்த நிலையில் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார் அவர்கள் ஒத்து வராததால் குண்டுகட்டாக கைது செய்தனர். பிறகு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவரது உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என கூறி உடலை எடுத்துச் செல்ல உறவினர்கள் மறுத்துவிட்டனர்.
இதையடுத்து நேற்று இரவுக்கு மேல் ஆம்ஸ்ட்ராங் உடல் மருத்துவமனையில் இருந்து பெரம்பூர் வீட்டிற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த நிலையில் அவருடைய உடல் சிறிது நேரம் வீட்டில் வைக்கப்பட்டு பின்னர் பொது மக்களின் அஞ்சலிக்காக பெரம்பூரில் பந்தர் கார்டன் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அவருடைய உடல் வைக்கப்படுகிறது. அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று சென்னை வருகிறார் தேசிய தலைவர் மாயாவதி. இதைத் தொடர்ந்து இன்று அவருடைய உடலுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்படுகின்றன. இறுதி சடங்கு முடியும் வரை போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என கமிஷனர் ரத்தோர் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications