ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. பெங்களூரில் தனிப்படையிடம் சிக்கிய ரவுடி மாட்டு ராஜா.. பரபர தகவல்
சென்னை: சென்னை வடபழனியை சேர்ந்த ரவுடி மாட்டு ராஜாவை பெங்களூரில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். பட்டினப்பாக்கத்தில் மாமூல் வசூல் செய்து மிரட்டிய வழக்கில் ரவுடி மாட்டு ராஜாவை கைது செய்துள்ள போலீசார் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் புதூர் அப்புவின் நண்பர் தான் மாட்டு ராஜா ஆவார்.
பகுஜன் சமாஜ் கட்சியில் தமிழக தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த மாதம் 7 ஆம் தேதி தனது புது வீடு அருகே நின்றுகொண்டிருந்த போது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவரது கொலை வழக்கு தொடர்பாக 27க்கும் மேற்பட்டோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்போ செந்தில், ரவுடி சீசிங் ராஜா ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக சம்போ செந்தில் மீது போலீசார் சந்தேகப்படுகின்றனர். சம்போ செந்தில், வெளிநாடு தப்பிச் சென்று உள்ளதாக கூறப்படும் நிலையில், சென்னை போலீசார் மத்திய அரசு உதவியை நாடி, இண்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பி அவரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதேபோன்று, ரவுடி சீசிங் ராஜாவும் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளார். அவரை பிடிக்கவும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில், சீசிங் ராஜாவின் நெருங்கிய நண்பரான சஜித் என்பவரை தாம்பரம் போலீசார் கைது செய்தனர். சஜித் மீது 4 கொலை வழக்குகள், 5 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இதேபோன்று ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு புதூர் அப்பு.
புதூர் அப்புவின் நண்பர் மாட்டு ராஜா. இவரை பட்டினப்பாக்கத்தில் மாமூல் வசூல் செய்து மிரட்டிய வழக்கில் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று மாட்டு ராஜாவை தனிப்படை போலீசார் பெங்களூரில் வைத்து கைது செய்தனர். இதையடுத்து போலீசார் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக மாட்டு ராஜாவிடம் விசாரணையை தொடங்கியுள்ளனர். புதூர் அப்பு எங்கே இருக்கிறார் என்பது குறித்தும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவருக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
ஏற்கனவே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக, ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள், திருவேங்கடம், திருமலை, பாஜக நிர்வாகி செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், ராமு, கோகுல், சிவசக்தி, தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகியாக இருந்த ஹரிகரன், அதிமுக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் மலர்கொடி, திமுக நிர்வாகி மகன் சதீஷ், வடசென்னை பாஜக நிர்வாகி அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிஹரன், வழக்கறிஞர் சிவா, பிரதீப், முகிலன், நூர் விஜய், ரவுடி நாகேந்திரன், காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி, ராஜேஷ், கோபி, குமரன், சுஜித் ஆகிய 28 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications