ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. குடும்பத்துடன் தாய்லாந்திற்கு தப்பிய சம்போ செந்தில் கூட்டாளி.. திடுக் தகவல்
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி கிருஷ்ணன் குடும்பத்துடன் வெளிநாடு தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கறிஞர் ஹரிஹரன் கைது செய்யப்பட்டதும் குடும்பத்துடன் கிருஷ்ணன் வெளிநாடு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி பெரம்பூர் செம்பியம் பகுதியில் வெட்டிபடுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பொன்னை பாலு, அருள், பெண் தாதா அஞ்சலை உள்ளிட்ட 21 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர்கள் அளித்த தகவலின் வெங்கத்தூர் கூவம் ஆற்றில் வீசப்பட்ட 5 செல்போன்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதுவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் பல்வேறு ரவுடி குழுக்கள் ஒன்றிணைந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் திருவேங்கடம் தவிர்த்து தற்போது வரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 20 பேர் சிறையில் உள்ளனர். இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அருள், சதீஷ், செல்வராஜ், ஹரிஹரன், அஞ்சலை, ஹரிதரன்,பிரதீப், விஜயகுமார் உள்ளிட்ட 20 பேரின் சொத்துக்களை முடக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவர்களது வங்கிக் கணக்குகளையும் முடக்க வங்கிகளை நாடியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ரவுடி சீசிங் ராஜா, சம்போ செந்தில் ஆகியோரை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஆந்திராவில் பதுங்கியிருந்த ரவுடி சீசிங் ராஜா, போலீசாரை கண்டதும் தப்பி ஓடியதாக சொல்லப்படுகிறது.
சம்போ செந்தில் வெளிநாட்டில் பதுங்கியிருக்கலாம் என சொல்லப்படுவதால் போலீசார் அந்த கோணத்திலும் விசாரணையை விரிவு படுத்தியிருக்கிறார்கள். இந்த நிலையில் சம்போ செந்திலின் கூட்டாளி கிருஷ்ணன் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வழக்கறிஞர் ஹரிஹரன் கைது செய்யப்பட்டவுடன் கிருஷ்ணன், காரில் திருச்செந்தூர் சென்றதும்
அதன் பிறகு காரில் மதுரை சென்றதும் பின்னர் தனது காரை வழக்கறிஞர் சிவா என்பவரிடம் கொடுத்து சென்னைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிவா கைது செய்யப்பட்ட நிலையில், கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் விமானம் மூலமாக தாய்லாந்து சென்று அங்கிருந்து வேறு நாட்டிற்கு தப்பி சென்று இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications