ராஜ்நாத் சிங் சொன்ன அந்த வார்த்தை.. ஆபரேஷன் சிந்தூரில் இவ்வளவு நடந்து இருக்கா? உடைத்து பேசிய ராணுவ தளபதி
சென்னை: ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் என்ன நடந்தது.. பாகிஸ்தானுக்கு இந்தியா எப்படி பதிலடி கொடுத்தது என்பது உள்ளிட்ட முக்கிய தகவல்களை ராணுவ தளபதி ஜெனரல் திவேதி பகிர்ந்துள்ளார். மேலும், அப்போது மத்திய அரசு எந்தளவுக்கு ராணுவத்திற்கு ஆதரவு அளித்து சுதந்திரம் கொடுத்தது என்பது குறித்த தகவல்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடத்தியது. ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீரில் அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அதற்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டது. பாகிஸ்தானின் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத இலக்குகள் குறிவைத்துத் தாக்கப்பட்டன.

ஆபரேஷன் சிந்தூர்
மே 7 அதிகாலையில் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூரில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து கடந்த மாதம் நடந்த ஆபரேஷன் மகாதேவ்வில் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மூவர் கொல்லப்பட்டனர். இதற்கிடையே இந்தியாவுடனான மோதலில் வெற்றி பெற்றதாகப் பாகிஸ்தான் கூறுவதை இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி விமர்சித்துள்ளார்.
பொய்யான தகவல்களைப் பாகிஸ்தான் பரப்புவதாக அவர் சாடினார். மேலும், ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு தாங்கள் தான் வென்றோம் என்று பாகிஸ்தான் எப்படி தனது மக்களை நம்ப வைத்தது என்பதையும் விளக்கினார்.
பொய் கதைகளைப் பரப்பும் பாகிஸ்தான்
சென்னை ஐ.ஐ.டி-யில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஜெனரல் திவேதி, "தகவல் நிர்வாக அமைப்பு என்பது நாங்கள் பெரிதும் உணர்ந்த ஒன்று. அப்படி தான் அவர்கள் பாகிஸ்தான் மக்களைப் போரில் வென்றதாக நம்ப வைத்தனர். ஒரு பாகிஸ்தானியரிடம் நீங்கள் தோற்றீர்களா அல்லது வென்றீர்களா என்று கேட்டால், எனது தளபதி பீல்ட் மார்ஷலாகிவிட்டார்.. நாம் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.. அதனால்தான் அவர் பீல்ட் மார்ஷலாகியுள்ளார் என்பார்.
இதுபோன்ற பொய்யான தகவல்களுக்கு நாம் பதிலடி கொடுத்தோம். அதனால்தான் நாங்கள் முதலில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் 'நீதி நிலைநாட்டப்பட்டது' என குறிப்பிட்டோம். இது உலக அளவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது" என்றார். இந்திய ராணுவம் மற்றும் விமானப் படையைச் சேர்ந்த இரண்டு பெண் அதிகாரிகள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பைக் குறிப்பிட்ட ஜெனரல் திவேதி, இது எளிமையானது.. ஆனால் உலகெங்கிலும் இந்தியாவின் செய்தியை எடுத்துச் சென்றது என்று குறிப்பிட்டார்.
செக்மேட் வைத்தோம்
அவர் மேலும் கூறுகையில், "இவை அனைத்தையும் நாங்கள் தயார் செய்தோம். தாக்குதல் நடக்கும்போதே இந்த விஷயங்களையும் நாங்கள் செய்தோம். ஏனெனில் தகவல்களை நிர்வகிக்கும் அமைப்பு முக்கியமானது. இதற்கு நிறைய நேரமும் முயற்சியும் தேவைப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூரில், நாங்கள் செஸ் விளையாடினோம். எதிரியின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும்.. நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று எங்களுக்குத் தெரியாது. இதை கிரே ஜோன் என்று அழைக்கிறோம். கிரே ஜோன் என்றால் நாம் வழக்கமான நடவடிக்கைகளுக்குச் செல்வதில்லை. வழக்கமான நடவடிக்கையில் இருந்து வேறுபட்டதைச் செய்கிறோம். ஒரு இடத்தில், நாங்கள் அவர்களுக்கு செக்மேட் கொடுத்தோம். ஒரு இடத்தில், நாங்கள் எங்களையே இழக்கும் ஆபத்தில் இருந்தபோதிலும் தாக்குதல் நடத்தினோம்.. அதுதான் வாழ்க்கை.
முழு சுதந்திரம்
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு மூன்று தளபதிகளும் ஏதாவது செய்ய வேண்டும் என்றிருந்தோம். பஹல்காம் தாக்குதலுக்கு மறுநாள் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எங்களைச் சந்தித்தார். எங்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது.. 'என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்யுங்கள்' என்று எங்களுக்கு முழு சுதந்திரம் அளித்தனர். அத்தகைய நம்பிக்கை மற்றும் அரசியல் தெளிவை நாங்கள் முதல்முறையாகப் பார்த்தோம். அதுதான் எங்கள் மன உறுதியை அதிகரிக்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications