தவெக நடத்திய நோன்பு நிகழ்ச்சி.. ரூ.1 லட்சம் பணத்தை பறிகொடுத்த 2 பேர்.. விஜய் முன்பே நடந்த சம்பவம்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகமது இஸ்மாயில் என்பவரிடம் இருந்து ரூ.63 ஆயிரமும், முகமது அபுதாஹீர் என்பவரிடம் இருந்து ரூ.42 ஆயிரமும் பணம் திருடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ரமலான் மாதத்தையொட்டி இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகின்றனர். இதனை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நேற்று ஒய்எம்சிஏ மைதானத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தவெக சார்பாக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 5 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதேபோல் இஸ்லாமியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதில் மொத்தமாக 3 ஆயிரத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி கட்சி நிகழ்ச்சியாக இருக்கக் கூடாது என்பதற்காக தவெக கட்சி கொடி கூட உள் அரங்கில் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் தவெக தலைவர் விஜய் குல்லா மற்றும் கைலி அணிந்து இஸ்லாமியர்களுடன் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதில் நடிகர் விஜயை பார்ப்பதற்காக அதிகளவிலான ரசிகர்கள் கூடினர். பலரும் அனுமதி அட்டை இல்லாமலேயே தடுப்புகளை கடந்து உள்ளே புகுந்தனர். இதனால் ஒய்எம்சிஏ மைதான நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி கதவு உடைந்தது. ஒரு கட்டத்தில் பவுன்சர்களால் கூட கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் துவண்டு போயினர்.
இந்த நிலையில் தவெக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் சுமார் ரூ.1 லட்சம் வரை திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மொத்தமாக 3 பேரிடம் இருந்து சுமார் ரூ.1 லட்சம் வரை பணம் திருடப்பட்டுள்ளதாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முகமது இஸ்மாயில் மற்றும் அப்துல் அபுதாஹீர் ஆகியோரிடம் இருந்து ரூ.63 ஆயிரமும், ரூ.42 ஆயிரமும் திருடப்பட்டுள்ளது. இதன்பின் பணத்தை பறிகொடுத்த இருவரும் அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications