பிறந்த சில மணி நேரத்தில் குழந்தையை கொன்ற தாய் கைது: தொட்டில் குழந்தைகள் திட்டம் விழிப்புணர்வு தேவை
தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு கழிவறையில் இறந்த நிலையில் பெண் சிசு கண்டறியப்பட்டது இதில் குழந்தையின் தாயே கழிவறையில் குழந்தையை பெற்று தண்ணீர் தொட்டியில் போட்டு விட்டுச் சென்றதால் குழந்தை உயிரிழந்தது. கொலை செய்துவிட்டு சென்றதை போலீசார் கண்டறிந்து தாயை கைது செய்தனர்.பெற்றோருக்கு தேவையற்ற குழந்தைகள் கொல்லப்படுவதை தடுக்கவே தொட்டில் குழந்தைகள் திட்டம் கொண்டுவரப்பட்டது அது குறித்த விழிப்புணர்வு தேவை என்பதையே இது காட்டுகிறது.
கழிவறையில் இறந்த நிலையில் கிடந்த குழந்தை
கடந்த 4 ஆம் தேதி தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு கழிவறையில் இறந்த நிலையில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. குழந்தையின் தொப்புள் கொடியுடன் பிறந்த சில மணி நேரத்தில் ஃபிளஷ் டாங்கில் அழுத்தப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் விசாரணை நடத்தினர். ஆனால் யார் செய்தது என கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீஸ் விசாரணையில் கிடைத்த துப்பு
மருத்துவக்கல்லூரி காவல் நிலைய போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வந்தனர். விசாரணையில் மருத்துவமனை வார்டு, கழிவறை செல்லும் வழியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். இதுதவிர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிகள், புற நோயாளியாக வந்த கர்ப்பிணி பெண்கள் பட்டியலை சேகரித்து விசாரணை நடத்தினர்.
மருத்துவமனை மருத்துவ பதிவேட்டில் பதிவு செய்துள்ளவர்கள் விவரங்களை ஆய்வு செய்தபோது மருத்துவமனையில் பதிவு செய்து பிரசவம் பார்க்காமல் யாரிடமும் சொல்லாமல் சென்ற ஒரு பெண்ணை பற்றிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தியதில் அந்தப்பெண் தஞ்சை மாவட்டம் பூதலூர் அடுத்த ஆலக்குடியை சேர்ந்த பிரியதர்ஷினி (23) என்பது தெரியவந்தது.
காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சி
இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் செவிலியர்களிடம் சிசிடிவி காட்சிகள் போட்டுக்காட்டப்பட்டதில் பிரியதர்ஷினியை அவர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். அதில் கழிவறைக்கு நிறைமாத கர்ப்பிணியாக செல்லும் பிரியதர்ஷினி சிறிது நேரம் கழித்து அவரது சல்வார் கமிஸ் முழுவதும் ரத்தக்கறையுடன் நடந்து வெளியில் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
சிக்கினார் தாய்
இதையடுத்து பிரியதர்ஷினியின் ஊருக்குச் சென்ற போலீஸார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பிரியதர்ஷினி அது தன் குழந்தைதான் எனவும், தகாத உறவு காரணமாக பிறந்த குழந்தையை என்ன செய்வது என்று தெரியாமல் தண்ணீர் தொட்டியில் போட்டுவிட்டு சென்றதாக ஒப்புக்கொண்டார்.
பிரியதர்ஷனிடம் விசாரணை செய்தபோது அவர் அளித்த வாக்குமூலத்தில் கடந்த சில ஆண்டுகளாக திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பிரியதர்ஷினி அங்கு வேலை செய்த ஒரு ஆணுடன் காதல்வயப்பட்ட நிலையில் திருமணத்திற்கு முன்னரே உறவுக்கொண்டதில் கர்ப்பம் அடைந்தவுடன் காதலித்த நபர் கைவிட்டு சென்று விட்டார் என்று கூறியுள்ளார்.
வேண்டாத குழந்தையை கொன்ற தாய்
இந்நிலையில் கர்ப்பத்தை கலைக்க முடியாத நிலையில் பிரியதர்ஷினி தனது தாய் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். பிரசவ நேரம் வந்தவுடன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று வயிற்று வலி எனக்கூறி அட்மிட் ஆகியுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பிரசவ வலி ஏற்பட்டவுடன் என்ன செய்வது என்று புரியாமல் கழிவறைக்கு சென்று அங்கேயே குழந்தை பெற்று கழிவறை ஃபிளஷ் டேங்கில் போட்டு விட்டு யாரிடமும் சொல்லாமல் சென்று விட்டதாக பிரியதர்ஷினி கூறியுள்ளார்.
மேலும் இச்சம்பவத்திற்கு உறவினர் வேறு யாரேனும் உதவினார்களா என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையை கொலை செய்த குற்றத்திற்காக பிரியதர்ஷினியை போலீஸார் கைது செய்தனர்.
அரசின் தொட்டில் குழந்தைகள் திட்டம் இருக்கும் போது குழந்தைகளை கொல்வதேன்
முறையற்ற வகையில் பிறக்கும் குழந்தைகள், வேண்டாவெறுப்பாக பெறப்படும் குழந்தைகள், பெற்றொர் விரும்பாத குழந்தைகள், பராமரிக்க முடியாத நிலையில் உள்ள குழந்தைகளை சம்பந்தப்பட்டவர்கள் கொல்லாமல் இருக்க தொட்டில் குழந்தைகள் திட்டம் என்கிற அற்புதமான திட்டத்தை ஜெயலலிதா அரசு கொண்டு வந்து செயல்பாட்டில் உள்ளது. குழந்தைகள் பாரமாக இருந்தால் பிரசவ நேரத்திலேயே மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தால் அவர்களே தொட்டில் குழந்தைகள் திட்டத்திற்கு அனுப்பிவிடுவார்கள்.
விழிப்புணர்வு இல்லா பிரியதர்ஷினிக்கள் அடையும் தண்டனை
இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததே பிரியதர்ஷினியின் குற்றத்திற்கு காரணம். தன் குழந்தையை தானே கொல்லும் நிலைக்கு தயாரான பிரியதர்ஷினி அதை தொட்டில் குழந்தைகள் திட்டத்திற்கு அளித்திருந்தால் குழந்தையும் உயிரோடு இருந்திருக்கும், அவரும் சிறிது காலத்தில் புதிய வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்தியிருக்கலாம். இதுகுறித்த விழிப்புணர்வை அரசு, தொண்டு நிறுவனங்கள் அதிக அளவில் கொண்டுச் செல்லாததும் ஒரு காரணம் எனலாம்