பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை.. கைதாகிறாரா ஓய்வு ஐஜி முருகன்? பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்
சென்னை: பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் ஓய்வு பெற்ற ஐஜி முருகனுக்கு பிடிவாரண்ட் என்பது பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகாத நிலையில் சைதாப்பேட்டை மாநகர நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் ஓய்வு பெற்ற ஐஜி முருகன் கைதாகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் முருகன். இவர் ஐஜியாக இருந்து பணி ஓய்வு பெற்றார். இவர் கடந்த 2017 - 18 ம் ஆண்டில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றினார்.

அப்போது அவர் லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குநராக செயல்பட்டு வந்தார். இந்த சமயத்தில் அவருக்கு கீழ் பணிபுரிந்த பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதாவது முருகன், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு ஆபாசமாக மெசேஜ் செய்து தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. உயர்நீதிமன்றத்தில் பெண் எஸ்பி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிபிசிஐடி வழக்கு விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் முருகன் மீது பெண்கள் வன்கொடுமை, பாலியல் தொல்லை உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது. ஆனால் வழக்கு விசாரணை என்பது தொடர்ந்து முன்னேற்றம் அடையாமல் இருந்தது. இதனால் முருகனை காப்பாற்றும் முயற்சி நடப்பதாக பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி குற்றம்சாட்டினார்.
இதையடுத்து முருகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தற்போதைய ஆளுநர் ஆர்என் ரவியிடம் அனுமதி கோரி கடிதம் எழுதப்பட்டது. ஆளுநர் ஆர்என் ரவியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஒப்புதல் வழங்கினார். அதன்பிறகு சிபிசிஐடி சார்பில் முருகன் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முருகன் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் முருகன் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்நிலையில் தான் ஓய்வு பெற்ற ஐஜியான முருகனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் முருகன் கைதாகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications