மோகன்ஜியை தூக்கியது சரிதான்! பாஜக ஏன் பதறுகிறது தெரியுமா? திருச்சி சூர்யா பதிலடி
சென்னை: மோகன்ஜி தொடர்ந்து சாதி, மத சர்ச்சைகளைப் பேசி அதன் மூலம் தனது படங்களுக்கு ஒரு விளம்பரம் தேடி வருவதாக திருச்சி சூர்யா கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் மோகன்ஜி திருப்பதி லட்டு மற்றும் பழனி பஞ்சாமிர்தம் தொடர்பாக ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் பஞ்சாமிர்தம் பற்றிய ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைத்திருந்ததாகக் கூறி சமயபுரம் காவல்துறை அவரை நேற்று காலை கைது செய்தனர். அந்தக் கைது தொடர்பாக அவர் நேற்று இரவே சொந்த ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். இவரது கைதை பாமக நிறுவனர் ராமதாஸ் உடனடியாக கண்டித்து இருந்தார். அரைகுறை புரிதலுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிக்கையில் கூறியிருந்தார். இந்த விவகாரம் குறித்து பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா சில கருத்துகளை முன்வைத்துள்ளார்.

அதில், இவரை வைத்து பாஜக மத அரசியலைச் செய்ய திட்டமிட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டி இருக்கிறார். சூர்யா அளித்துள்ள பேட்டியில், “என்னைப் பொறுத்தவரை இந்தக் கைது சரியாதுதான். அவர் ஒரு இயக்குநராக இருக்கிறார். அப்படி இருந்து கொண்டு சாதி அரசியலை வெளிப்படையாகப் பேசுகிறார். மத அடிப்படையிலான கருத்துகளை அதிகம் பேசுகிறார். அவருடைய படங்களைப் பேச வைக்கவேண்டும் என்பதற்காக வேண்டும் என்ற சில காட்சிகளை உள்ளே திணிக்கிறார். அதை வைத்து படத்திற்கும் தனது சுயவிளம்பரத்திற்கும் பயன்படுத்திக் கொள்கிறார். அவர் இயக்குநராக வெளியே தெரிவதற்கே அவர் சர்ச்சைகள்தான் காரணம். படத்தை நன்றாக இயக்கி இருக்கிறார் என்பதற்காக அவரை யாரும் பாராட்டவில்லை.
ஆந்திராவில் நடக்கும் லட்டு விவகாரம் ஒரு அரசியல் காரணத்திற்காக நடக்கிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் சந்திரபாபு நாயுடுவும் அதே போல் செயல்படுகிறார் என்றே சொல்கிறார்கள். ஜெகன்மோகன் ரெட்டி ஒரு கிறிஸ்துவர். அதனால் அவர் இப்படிச் செய்துவிட்டார் என ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கிறார்கள். ஜெகன்மோகன் கூட இது திசை திருப்பும் செயல் என்றே சொல்கிறார். நானும் அப்படிதான் நினைக்கிறேன். திருப்பதி அரசாங்கம் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் இல்லை. அதற்கு என்று தனிக் குழு இருக்கிறது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கூட இருக்கிறார்கள். சந்திரபாபு நாடு எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது இந்த விவகாரத்தைக் கண்டுபிடித்துப் பேசி இருந்தால் அதை ஏற்கலாம். ஆனால், ஆட்சிக்கு வந்து சில மாதங்களாக லட்டு விநியோகம் இவரது ஆட்சியில் நடந்து வருகிறது. திடீரென்று இவ்வளவு நாள் கழித்து இதைச் சொல்கிறார். அதுவும் லேப் ரிப்போர்ட் வரும் முன்பே ஜெகன் தான் காரணம் என்கிறார் நாயுடு.
ஆந்திராவில் இந்தப் புகாருக்குக் காரணமான நெய் விநியோகிக்கும் நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள நிறுவனம்தான். அதை வைத்து இதுதான் பழனிக்கும் நெய் விநியோகம் செய்கிறது என்று ஒரு புரளியைக் கிளப்பிவிடுகிறார்கள். அமைச்சர் சேகர்பாபு ஆவின் நெய்தான் பயன்படுத்துகிறோம். வெளியில் கொள்முதல் செய்வதில்லை என விளக்கம் அளிக்கிறார். அப்படியான ஒரு உணர்வுப்பூர்வமான விசயம் நடக்கும் போது பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரையைக் கலக்கிறார்கள் என்று இயக்குநர் மோகன்ஜி பேசுகிறார். எத்தனை லட்சம் மக்கள் தங்களுக்குக் குழந்தை வரம் வேண்டி பழனி முருகன் கோயிலில் நேர்த்திக் கடன் செய்துகொண்டு வழிபாடு செய்து வருகிறார்கள். நடிகர் சூர்யா, கார்த்தி ஆகியோர் கூட பழனி கோயிலில் உள்ள தங்கத் தொட்டிலில் குழந்தையைப் போட்டு நேர்த்திக் கடன் நிறைவேற்றியதைக் கூட நாம் முன்பு பார்த்திருக்கிறோம்.
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே மோகன்ஜி கருத்தை ஏற்க மாட்டார்கள். அந்தளவுக்கு ஒரு ஆதாரமற்ற புகாரை அவர் பேசி இருக்கிறார். எனவே அவரை கைது செய்தது நியாயம்தான். இதை வைத்து மத அரசியல் செய்யலாமா என பாஜக உடனே யோசிக்கிறது. மகாவிஷ்ணுவை தூக்கினால் அதை வைத்து மத அரசியல் செய்ய நினைப்பது, மோகனை தூக்கினால் அதைக் கொண்டு ஏதாவது செய்ய முடியுமா என யோசிப்பது எல்லாம் பாஜகவின் வேலை. அதற்காகத்தான் அஸ்வத்தாமன் துடிக்கிறார்.
காவல்துறை மோகனை கைது செய்தற்கு விளக்கமே அளிக்கவில்லை என்கிறார். எத்தனை பேரைக் கைது செய்யும் போது காவல்துறை இதுவரை விளக்கம் அளித்திருக்கிறது? டமாரம் அடித்துக் கொண்டே போய் கைது செய்வார்களா என்ன? மோகன் பாஜகவுக்கு ஆதரவாகப் படம் எடுத்தார். அதற்கு சென்சார் சான்றிதழை பாஜக முயன்று வாங்கிக் கொடுத்தது. அதனால் பாஜகவினர் மோகனை ஆதரிக்கிறார்கள். நியாயமாகச் சொன்னால், அவர் இந்து மக்கள் நம்பிக்கை வைத்துள்ள பழனி முருகன் கோயிலைப் பற்றி தவறாகப் பேசி இருக்கிறார். அதைத்தான் பாஜக கண்டித்திருக்க வேண்டும். ஆனால், அவரைக் கைது செய்ததைக் கண்டிப்பது காமெடியாக இருக்கிறது” என்கிறார்.












Click it and Unblock the Notifications