அந்த கார் யாரோடது? போலீஸ் ஈஸியா பிடிக்கும்.. மாட்ட போகும் அண்ணாமலையின் இடது கை! எச்சரிக்கும் புள்ளி
சென்னை: ஆருத்ரா மோசடியில் முறையாக விசாரணை செய்தால், அண்ணாமலையின் இடதுகரமோ, வலதுகரமோ சிக்க போகிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆருத்ரா நிறுவன மோசடி தேசிய அளவில் கவனம் பெற தொடங்கி உள்ளது. வேலூரை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வந்தது. சென்னை, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இவர்களுக்கு கிளை இருந்தது.
ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் 1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் தருவோம். 10 மாதம் இந்த பணத்தை தருவோம். உங்களுக்கு 3.6 லட்சம் கிடைக்கும் என்று விளம்பரம் செய்துள்ளனர். இதை நம்பி முதலீடு செய்த மக்களை அந்த நிறுவனம் கடைசியில் ஏமாற்றி உள்ளது. இந்த நிலையில்தான் ஆருத்ரா நிறுவன இயக்குனர் ஹரிஸுக்கு கட்சியில் பதவி கொடுத்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.இந்த வழக்கில் கூட சமீபத்தில் மைக்கேல் ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த புகார்கள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி
அவர் அளித்த பேட்டியில், அண்ணாமலையின் தலைமை மீது கடுமையான புகார்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன. ஏற்கனவே ரபேல் விவகாரத்தில்.. ரபேல் வாட்ச் கட்டினால் நான் தேசியவாதி என்று கூறுகிறார். அதற்கு இதுதான் பதிலா? என்னங்க இது? இப்படி எல்லாம் பேசினால்.. அவர் மீது விமர்சனம் வைக்காமல் என்ன செய்வார்கள். ஆருத்ரா விவகாரத்தில் சிக்கியவர் ஹரிஸ். அவர் அந்த விவகாரத்தில் சிக்கிய பின்புதான் பாஜகவில் பதவியே கொடுக்கிறார்கள். அவரை கட்சியில் சேர்க்கிறார்கள்.

தலைமை
இதை எல்லாம் தேசிய தலைமை பார்த்துக்கொண்டு இருக்கிறது. தேசிய தலைமை கணக்கில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. அவரை முதலில் தேடும் போது அவர் புதுச்சேரியில் இருக்கிறார். அதன்பின் தெலுங்கானாவில் இருக்கிறார். பின் டெல்லியில் இருக்கிறார். இந்த 3 இடங்களில் அவர் யாரால் தங்க வைக்கப்பட்டார். அவர் யாருடைய வாகனத்தில் சென்றார். யாரிடம் போனில் பேசினார் என்பதை கண்டுபிடிப்பது பெரிய விஷயமே இல்லை. அதில் சிக்க போவது யார்? போலீஸ் இதை எளிதாக கண்டுபிடிக்க முடியும். அண்ணாமலையின் இடதுகரமோ, வலதுகரமோ சிக்க போகிறார்கள்.

கால் டீட்டெயில்
அந்த கால் டீட்டெயில் எடுத்து விசாரணை செய்தால் யார் மாட்டுவார்கள்? இப்படி ஒருவரை கட்சியில் சேர்த்ததும் இவர் மீதான புகார் வந்ததும் அவரை நீக்கி இருக்க வேண்டும். ஆனால் நீக்கவில்லை. மாறாக அமர் பிரசாத் ரெட்டி.. ஹரிஸை நன்றாக பேக்கிரவுண்ட் விசாரணை செய்துவிட்டுதான் சேர்த்தோம். அவர் மீது புகார் இருக்கிறதா என்று கேட்கிறார். புகார் இல்லாமல்தான் ஹரிஸ் முன்ஜாமீனுக்கு தாக்கல் செய்து இருக்கிறாரா. ஆருத்ரா கோல்டு, ஐஎப்எஸ் உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட்ட பலர் பாஜகவுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கின்றனர்.

திமுக
இவர்களை எல்லாம் வைத்துக்கொண்டுதான் அண்ணாமலை திமுக மீது குற்றச்சாட்டு வைக்கிறார். திமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார் வைப்பேன் என்று அண்ணாமலை கூறுகிறார். இவர்களை வைத்துக்கொண்டு அண்ணாமலை இப்படி பேசுவது சரியா? ஏப்ரலில் ஊழல் குற்றச்சாட்டுகளை வைப்பேன் என்று அவர் சொல்வதை நான் தவறாக சொல்லவில்லை. ஆனால் தன்னுடைய முதுகில் அழுக்கை வைத்துக்கொண்டு அவரால் எப்படி திமுக மீது குற்றச்சாட்டை வைக்க முடியும், என்று பத்திரிகையாளர் குபேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications