ஜெ. மரணம்.. 9 மணி நேரம்.. 150+ கேள்விகள்.. சசி தரப்பு "கிராஸ்" கேள்வி.. ஓபிஎஸ் மீதான விசாரணை நிறைவு!
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் நடத்திய விசாரணையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்திடம் நடத்தப்பட்ட விசாரணை முடிவிற்கு வந்துள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக மெதுவாக நடந்து வந்த விசாரணை தற்போது தீவிரம் அடைந்துள்ளது.
இந்த விசாரணையில் தொடக்கத்தில் ஓ பன்னீர்செல்வம் ஆஜர் ஆவதை தவிர்த்து வந்தார். 8 முறை விசாரணைக்கு அழைத்தும் அவர் விசாரணைக்கு ஆஜர் ஆகாத நிலையில் நேற்றும், இன்றும் விசாரணைக்கு ஆஜர் ஆனார்.

விசாரணை நிறைவு
ஓபிஎஸ்ஸிடம் நடத்தப்பட்ட விசாரணை நேற்று 5 மணி நேரம் நடைபெற்றது. அதன்பின் இன்று 4 மணி நேரம் நடைபெற்றது. இந்த நிலையில் இரண்டு நாள் விசாரணை சற்று நேரத்திற்கு முன் முடிவடைந்தது. ஆணையத்தின் 120 கேள்விகளுக்கு ஓபிஎஸ் பதில் அளித்தார் . சசிகலா தரப்பு வழக்கறிஞர் எழுப்பிய 34 கேள்விகளுக்கும் அப்போலோ தரப்பு வழக்கறிஞரின் 11 கேள்விகளுக்கும் ஓ பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.

ஓ பன்னீர்செல்வம்
மொத்தம் ஆறுமுக சாமி தரப்புதான் இவரிடம் அதிகம் கேள்வி எழுப்பியது. சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் இவரிடம் குறுக்கு விசாரணை நடத்தினார். சசிகலா குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? சசிகலா இந்த விஷயத்தில் சதித்திட்டம் தீட்டியதாக நினைக்கிறீர்களா என்பது உள்ளிட்ட கேள்விகளை அவர் எழுப்பினார். இதற்கு சசிகலா சதித்திட்டம் தீட்டவில்லை. அவர் மீது இப்போதும் தனக்கு மதிப்பு உள்ளது என்று ஓபிஎஸ் பதில் அளித்தார்.

ஆறுமுக சாமி
இந்த விசாரணையில் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்த சில முக்கிய வாக்குமூலங்கள் பின்வருமாறு. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய தினம் அவரை பார்த்தேன். மருத்துவமனையில் சேர்த்த பின் நான் அவரை சந்திக்கவே இல்லை. நேற்று ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்று கூறிய ஓபிஎஸ் இன்று பார்த்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், நான் உட்பட 3 அமைச்சர்கள் ஜெயலலிதாவை அவரின் மரணத்திற்கு முன்பாக சந்தித்ததாக அவர் தனது வாக்குமூலம் அளித்துள்ளார்.

சசிகலா ஓபிஎஸ்
அதோடு ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த போது சரியாக 35வது நாளில் அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிப்பது பற்றி பேசியதாக ஓபிஎஸ் கூறியுள்ளார். ஆனால் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறி எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை அளித்தனர். திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலில் ஜெயலலிதா கைரேகை போட்டது உண்மைதான். அது எனக்கு தெரியும். ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை பற்றி தெரியாது என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.

ஜெயலலிதா ஓபிஎஸ்
ஜெயலலிதாவிற்கு உடலில் என்ன பிரச்சனை, நோய் இருந்தது என்று எனக்கு தெரியாது. சசிகலாதான் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த அப்டேட்களை தனக்கு வழங்கியதாக ஓபிஎஸ் கூறியுள்ளார். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் இருந்த சிசிடிவி அகற்றப்பட்டதற்கும் தனக்கு தொடர்பு இல்லை என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். மேலும் ஜெயலலிதா என்ன சாப்பிட்டார் என்பது போன்ற விவரங்கள் எதுவும் தனக்கு தெரியாது என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

சந்தேகம் இல்லை
ஜெயலலிதா மரணத்தில் எனக்கு சந்தேகம் எதுவும் இல்லை. தனிப்பட்ட முறையில் நான் சந்தேகம் அடையவில்லை. சசிகலாவை நான் தனிப்பட்ட முறையில் மதிக்கிறேன். சசிகலா சதித்திட்டம் தீட்டியதாக நான் கருதவில்லை, என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications