"நிதிஷுக்கு நடந்த அதே கதி.. அதிமுகவை 3ஆக பிளக்க போகும் பாஜக!" கெஜ்ரிவால் கொடுத்த எச்சரிக்கை
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் உடன் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்தார். அப்போது தேர்தலுக்குப் பிறகு அதிமுகவை பாஜக 3ஆக பிளந்துவிடும் என்ற கெஜ்ரிவால், பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக மிகப் பெரிய துரோகத்தைச் செய்துவிட்டதாகத் தெரிவித்தார். மேலும், ஸ்டாலின் தமிழகத்திற்காக மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசத்திற்காகவும் குரல் கொடுக்கிறார் என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் மிகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றன. இதற்கிடையே சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உடன் இணைந்து ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொண்டார். சென்னை புளியந்தோப்பு பகுதியில் இருவரும் பிரச்சாரம் செய்தனர்.

கெஜ்ரிவால்
"வணக்கம்" எனச் சொல்லி தமிழில் கெஜ்ரிவால் தனது உரையை ஆரம்பித்தார். தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடப்பதைப் பார்க்க முடிகிறது என்ற கெஜ்ரிவால், தமிழ்நாடு மக்கள் மத்தியில் பேசுவதைப் பெருமையாக நினைக்கிறேன் என்றும் தெரிவித்தார். மேலும், அதிமுகவை பாஜக முழுமையாகக் கைப்பற்றிவிட்டது என்று சொன்ன அவர் பாஜக கட்டுப்பாட்டில் தான் அதிமுக உள்ளது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய கெஜ்ரிவால், "பீகாரில் என்ன நடந்தது என்று பாருங்கள்.. நேற்று வரை முதல்வராக இருந்த நிதிஷ் குமாரை இன்று அந்த பதவியில் இருந்து நீக்கிவிட்டார்கள். இன்று அவர் சாதாரண எம்பியாக ஆக்கிவிட்டார்கள்.
அதிமுக பிளவுபடும்
தேர்தலுக்குப் பிறகு அதிமுகவை 3ஆக பாஜக பிளந்துவிடும். அதன் பிறகு பாஜக ஆட்டத்தை ஆரம்பித்துவிடும். அவர்கள் தமிழ்நாட்டை ஆளத் துடிக்கிறார்கள். ஆனால், தமிழக மக்கள் பாஜகவை வெறுக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு பாஜக தேவையில்லை.. பாஜகவுடன் கூட்டணி அமைத்து மிகப் பெரிய பாவத்தை அதிமுக செய்துவிட்டது.
டெல்லியில் நாங்கள் இத்தனை காலமாகச் செய்த எல்லா நல்ல விஷயங்களையும் பாஜக நிறுத்திவிட்டது. நாங்கள் ஆரம்பித்த பள்ளி, மருத்துவமனைகள் என எல்லாவற்றையும் நிறுத்திவிட்டார்கள். நாங்கள் மின்சாரம், தண்ணீரை இலவசமாகக் கொடுத்தோம். அதையும் நிறுத்திவிட்டார்கள். நான் இதை ஒரு உங்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவே விடுக்கிறேன். அவர்கள் வந்தால் எல்லா நல்ல விஷயங்களையும் நிறுத்திவிடுவார்கள்.
ஸ்டாலின்
ஸ்டாலின் தமிழ்நாட்டிற்காகப் பல வளர்ச்சி திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார். அது தொடர வேண்டும். மத்தியில் பாஜகவுக்கு எதிராக வலிமையான குரலாக ஸ்டாலின் இருக்கிறார். அவர் தமிழ்நாட்டிற்கு மட்டுமில்லை.. ஒட்டுமொத்த தேசத்திற்காகவும் குரல் கொடுக்கிறார். தொகுதி மறுசீரமைப்பு மசோதா மூலம் நாட்டை உடைக்க பார்த்தார்கள். ஆனால், அதற்கு எதிராகவும் ஸ்டாலின் குரல் கொடுத்தார். பாஜகவின் திட்டத்தை முறியடித்தோம்" என்றார்.












Click it and Unblock the Notifications