சென்னையில் 3 மாநில முதல்வர்கள்.. முக ஸ்டாலின்-கெஜ்ரிவால் சந்திப்பில் பேசப்பட்டது என்ன? பின்னணி தகவல்
சென்னை: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது எது குறித்து பேசப்பட்டது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தமிழகம் வருகை தந்தார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோரும் சென்னை வருகை தந்தனர். அங்கிருந்து நேராக சென்னை ஆழ்வார் பேட்டையில் இருக்கும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இல்லத்திற்கு கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மான் உள்ளிட்டோர் சென்றனர்.

அவர்களை முதல்வர் மு.க ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து பல்வேறு விவகாரங்கள் குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த சந்ப்பின் போது திமுக எம்.பிக்கள் டி.ஆர் பாலு, கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். கெஜ்ரிவாலுக்கு நினைவுப்பரிசையும் முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.
சந்திப்பு ஏன்?: டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லியில் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மத்திய உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டில் தான் உள்ளது. எனவே, மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும் டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையேயும் அதிகாரப்பகிர்வு, ஆட்சி அதிகாரம் உள்ளிட்ட பல விஷயங்களில் மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்த சூழலில், ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உட்பட மாநில அரசின் நிர்வாகத்தை கட்டுப்படுத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நீர்த்து போக செய்யும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. இந்த அவசர சட்டம் நாடாளுமன்றத்திற்கு வரும் போது எதிர்ப்பது தொடர்பாக எதிர்க்கட்சிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
அந்த வகையில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, சரத் பவார் ஆகியோரை சந்தித்து மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிரான ஆம் ஆத்மியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், இன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினையும் சந்தித்து ஆதரவு கோரியுள்ளார்.
தேசிய அளவில் கவனம்: வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்ற பேச்சுக்கள் வலுத்துள்ள நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமையும் போது அதில் தமிழக முதல்வரின் பங்கும் பெரிய அளவில் இருக்கும் என்பது அரசியல் நோக்கர்களின் கணிப்பாக உள்ளது. எனவே இன்றைய கெஜ்ரிவாலின் சந்திப்பு தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுடனான சந்திப்புக்கு பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மான் ஆகியோர் சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ஜார்க்கண்ட் செல்கிறார்கள். அதாவது இன்று இரவு 7 மணியளவில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு கெஜ்ரிவாலும் பகவந்த் மானும் செல்கிறார்கள். ராஞ்சியில் முதல்வர் ஹேமந்த் சோரனை நாளை (வெள்ளிக்கிழமை) சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற மக்களவையில் பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை இருப்பதால் அங்கு அவசர சட்டத்தை எளிதாக மத்திய அரசு நிறைவேற்றும். அதே வேளையில், மாநிலங்களையில் அந்த நிலை இல்லை. எனவே மாநிலங்களவையில் இந்த சட்டம் நிறைவேற்றப்படுவதை தடுக்க கெஜ்ரிவால் தீவிர முனைப்பு காட்டி வருகிறார்.












Click it and Unblock the Notifications